1, யாத்திரை போகியது

 

இதன்கண்; வாசவதத்தையின் பிரிவுற்றாமல் வருந்திச் செயல் ஆற்றி அருந்த உ.தயணகுமரனைத் தோழர்கள் தேற்றிப் பகைவனை வெல்லவேண்டும் என்று வற்புறுத்துதலும், பின்னும் வருந்தாநின்ற உதயணனை மீண்டும் தேற்றும்பொருட்டு இசைச்சன் என்பான் இராசகிரிய நகரத்தில் இறந்தவர்களைப் பழைய உருவத்தோடு வரவழைத்துத் தரும் முனிவர் ஒருவர் இருக்கின்றார் என்றும் அங்குச் சென்று அவரைக் காணின் வாச வதத்தை முதலியோரை மீண்டும் காண்டல் கூடும் என்றும் கூறுதலும், உதயணன் முதலியோர் வேற்றுருவங் கொண்டு சிலபடை மறவருடன் மகத நாட்டில் இராசகிரிய நகரத்தை அடைதற்குப் புறப்பட்டுப் போதலும், மகதநாட்டின் எல்லையை அவர்கள் எய்துதலும் பிறவும் கூறப்படும்.
 
 

            ஆங்கினிது இருந்த காலை ஈங்கினி
            வேந்துபடக் கடந்த வேந்துசுடர் நெடுவேல்
            உதயணன் நிலைமை இதுவென உரைப்பேன்

   
 

            பழனப் படப்பைப் பாஞ்சால ராசன்
     5      அழன்மிகு சீற்றத்து ஆருணி அரசன்
            திரியும் நெய்யும் ஒருவயின் செல்லிய
            எரிவிளக்கு அற்றம் இருள்பரந்து ஆங்குப்
            பாய தொல்சீர்ப் பகைஅடு தானை
            ஏயர் அற்றத்து இடுக்கண் காலை
     10      அன்றவண் அறிந்தே தொன்றுவழி வந்த
            குலப்பகை ஆகிய வலித்துமேல் வந்து
            நன்நகர் வௌவும் இன்னாச் சூழ்ச்சியன்

 
 

            என்வகை அறிந்த நன்பொரு ளாளன்
            பெரும்படைத் தானைப் பிரச்சோ தனன்தன்
     15      அரும்படை அழியா ஆற்றலில் போந்தவன்
            மடமகள் கொண்ட இடனறி சூழ்ச்சி
            யூகி உளனெனின் இகழாள் இவனெனச்
            சாவுமுந் துறுத்த வலிப்பினன் ஆகித்
            தீயகம் கழுமிய கோயில் வேவினுள்
     20     தேவியை இழந்து பூவிதழ்ச் சோலைப்
            புல்லென் யாக்கையொடு போயினன் உதயணன்

 
 

            இல்எனக்கு எழுபகை இம்மையின் இனியென
            மாற்று வேந்தன் மதில்காப் பிகந்துதன்
            ஆற்றல் மகிழ்ந்த அந்நிலை ஒற்றி

 
 

     25     மகத மன்னனொடு மகள்கிளை யாகித்
            தொகைகொண்டுஈண்டியவன் தொல்படை தழீஇ
            ஆதித் துணிவுடை நீதியில் கரந்த
            தம்பியர்கூடவெம்பிய வெகுட்சியின்
            ஒருங்கா மாந்தர் உள்ளம் அஞ்சப்
     30     பாடுபெயர்ந்து இடிக்கும் மேடகம் போல
            அகன்றுபெயர்ந்து அழிக்கும் அரும்பெறல் சூழ்ச்சி
            நவின்ற தோழனொடு பயம்பட வலித்து
            மதியுடை அமைச்சர் மனந்தெளி உறீஇப்
            புதிதில் கொண்ட பூக்கவின் வேழம்
     35     பணிசெயப் பிணிக்கும் பாகர் போல
            நீதி யாளர் ஆதி ஆகிய
            திறத்தில் காட்டவும் மறத்தகை அழுங்கி

 
 

            முன்உப காரத்து நன்னயம் பேணித்
            தன்னுயிர் கொடுக்குந் தவமுது தாயும்
     40     விறப்பினிற் பெருகியும் வறப்பினில் சுருங்கியும்
            உறுதி நோக்கி உயிர்புரை காதலோடு
            ஆழ்விடத் துதவும் அரும்புணை போலத்
            தாழ்விடைத் தாங்கிச் சூழ்விடைத் துளங்கா
            உள்ள ஆற்றல் உறுபுகழ் யூகியும்

 
 

     45     அள்ளல்தாமரை அகவிதழ் அன்ன
            அரிபரந்து அகன்ற அம்மலர் நெடுங்கண்
            தெரிமலர்க் கோதைத் தேவியும் இன்றித்
            தருமமும் அருத்தமுங் காமமும் இழந்தே
            இருநில மருங்கின் இறைமை தாங்கி
     50     வாழ்தலின் இனிதே ஆழ்தல்என்று அழிந்தே
            உரக்கவின் தேய இரக்கமொடு அரற்றவும்

 
 

            கைவரை நில்லாக் கையறு கவற்சிகண்டு
            இன்மொழி விச்சை இலாமயன் என்னும்
            ஆளவி நெஞ்சத்து அந்தணன் இருந்த
     55     காள வனமும் வெந்தீப் புக்கெனக்
            காதலன் தன்னையும் சாவறல் உறீஇ
            மயக்க நெஞ்சமொடு மனம்வலித்து இருந்துழி

 
 

            இசைச்சன் கூறுவன் ஈங்கிது கேட்கென
            விச்சையின் முடியா விழுவினை இல்லெனல்
     60     பொய்ச்சொல் என்பர் புன்மை யோரே
            அற்ற தாதகல் இற்றுங் கூறுவென்
            கற்றதும் கேட்டதும் கண்ணா மாந்தர்க்கு
            தொற்கிடத்து உதவும் உறுவலி ஆவது
            பொய்ப்பது போலும் நம்முதற் றாகப்
     65     பற்றொடு பழகி அற்புஅழல் அழுந்தி
            முடிவது நம்மைக் கடிவோர் இல்லை

 
 

            இல்லை ஆதலின் சொல்லுவல் இன்னும்
            முடியாக் கருமம் ஆயினும் முடியும்
            வாயின் முற்றித்து வயங்காது ஆயினும்
     70     சாவினும் பழியார் சால்புடை யோர்என
            மல்லல்தானை மறங்கெழு மன்னவன்
            செல்வப் பாவை சென்றினிது பிறந்துழி
            இம்மை யாக்கையின் இயல்பினள் ஆகத்
            தன்மையில் தரூஉந் தாழாப் பெருவினை
     75     உட்குடை விச்சை ஒன்றுண்டு அதனைக்

 
 

            கற்றுநனி நவின்ற கடனறி அந்தணன்
            இருந்தினிது உறையும் இராச கிரியெனும்
            பொருந்தரு வியனகர்ப் புக்கவன் குறுகி
            ஆற்றுளி வழிபாடு ஆற்றி அமைச்சனொடு
     80     பூக்குழை மாதரை மீட்டனம் கொண்டு
            பெறற்கரு விச்சையும் கற்று நாமெனத்
            திறற்படு கிளவி தெரிந்தவன் உரைப்ப

 
 

            விறற்போர் உதயணன் விரும்புபுவிதும்பி
            என்னே அன்னவும் உளவோ என்றலின்
     85     வேட்டதன் வழியே பாற்பட நாடி
            ஆதி வேதத்து அகவயின் பெரியோர்
            ஓதிய உண்டென உணரக்கூற

 
 

            இன்னே போதும் மேகுமின் விரைந்தெனப்
            பள்ளம் படரும் பல்நீர்போலவன்
     90     உள்ளம் படர்வழி உவப்பக் காட்டிக்
            கணம்புரி பெரும்படைக் காவல் நீக்கிக்
            குணம்புரி தோழர் கொண்டனர் போதர
            ஆற்றலும் விச்சையும் அறிவும் அமைந்தோர்
            நூற்றுவர் முற்றி வேற்றுநர் ஆகென

 
 

     95     வெண்ணூல் பூந்துகில் வண்ணம் கொளீஇ
            நீலக் கட்டியும் மரகதத் தகவையும்
            பாசிலைக் கட்டியும் பீதகப் பிண்டமும்
            கோல மாகக் கொண்டுகூட் டமைத்துப்
            பிடித்துருக் கொளீஇக் கொடித்திரி ஓட்டிக்
     100     கையமைத் தியற்றிய கலிங்கத் துணியினர்
            கொய்உளைப் புரவி மேற்கொண்டு அவரின்
            கைவினைக் கம்மம் காண்பினி தாக
            வாரமைத்து இயற்றிய காலமை செருப்பினர்
            செம்பொன் கொட்டைப் பந்தர்க் கொளுவினர்
     105     மாத்திரை நுண்கயிற்று ஆத்திரை யாப்பினர்
            உள்கூட்டு அமைந்த சில்கூட்டு அல்குலர்

 
 

            இரும்பனை இளமடல் விரிந்துளர் வெண்தோட்டு
            ஈர்க்கிடை யாத்த நூற்புரிப் பந்தச்
            செந்தோட்டு அணிமலர் சேர்ந்த உச்சி
     110     அந்தோட்டு அம்பணை அரக்குவினை உறீஇய
            சித்திரத் திண்கால் வித்தகக் குடையினர்

 
 

            மரகத மணிக்கை மாசில் பொற்றொடி
            உருவுபடச் செறித்த உரோமக் கொட்டையில்
            செந்தளிர் மராஅத்துப் பைங்காய் பழித்த
     115     செண்ணார் வடிவின் கண்ணார் கத்தியர்
            ஏரில வங்கம் தீம்பூ வேலம்
            கப்புரப் பளிதமொடுஉட்படுத்து இயற்றிய
            வாசத் திரையொடு பாகுநிறைத்து அடக்கிய
            மாசில்அருமணி மடைத்த வாடையர்
     120     பட்டுச் சுவேகமொடு பாட்டுப்புறம் எழுதிய
            கட்டமை சுவடி பற்றிய கையினர்

 
 

            புரிநூல்அணிந்த பொன்வரை மார்பினர்
            விரிநூல் கிரந்தம் விளம்பிய நாவினர்
            வாச வெள்ளை வரைந்த கழுத்தினர்
     125     தேசந் திரிதற்கு ஆகிய அணியொடு
            வளங்கெழு மாமலை வன்புன் றாளக
            நலங்கெழு சிறப்பின் நாட்டகம் நீந்திப்

 
 

            பைந்தொடி அரிவைக்குப் படுகடங் கழீஇய
            கண்புரை அந்தணன் காள வனத்தினின்று
     130     உதய ஞாயிற்றுத் திசைமுகம் நோக்கித்
            திருமகள் தேரும் ஒருமையிற் போந்து
            கருப்பாசம் என்னுங் கானக் கான்யாற்றுப்
            பொரும்புனல் நீத்தம் புணையில் போகிச்
            சேணிடைப் போகிய பின்றை அப்பால்
     135     நீணிலைப் படுவில் பேர்புணை நீந்தி
            நொந்துநொந்து அழியும் நோன்புபுரி யாக்கையர்
            அருஞ்சுரக் கவலையும் அடவியும் யாறும்
            பெருஞ்சின வீரர் ஒருங்குடன் பேர்வுழி

 
 

            வென்றடு சிறப்பின் வீணை வித்தகன்.
     140     ஒன்றிய தேவியை உள்குவனன் ஆகிச்
            செறிந்த மருங்கில் திரிமருப்பு இரலை
            புறந்தற் காப்பப் புணர்மறி தழீஇய

 
 

            மடமான் அம்பினை கண்டுமாதர்
            கடைபோழ் நெடுங்கண் காம நோக்கம்
     145     உள்ளத்து ஈர ஒள்ளழல் உயிரா
            இனத்திற் கெழீஇ இன்ப மகிழ்ச்சியொடு
            புனத்திற் போகாது புகன்றுவிளை யாடும்
            மான்மடப் பிணையே வயங்கழல் பட்ட
            தேனேர் கிளவி சென்ற உலகம்
     150     அறிதி யாயின் யாமும் அங்கே
            குறுகச் செல்கம் கூறாய் எனவும்

 
 

            பணிவரை மருங்கில் பாறை தோறும்
            மணியிரும் பீலீ மல்க உளரி
            அரும்பெறல் இரும்போத்து அச்சங் காப்ப
     155     மதநடை கற்கும் மாமயில் பேடாய்
            சிதர்மலர்க் கூந்தல் செந்தீக் கவர
            மயர்வனள் விளிந்தஎன் வஞ்சி மருங்குல்
            மாறிப் பிறந்துழி மதியின் நாடிக்
            கூறின் குற்ற முண்டோ எனவும்

 
 

     160     வெஞ்சுரஞ் செல்வோர் வினைவழி அஞ்சப்
            பஞ்சுர ஓசையில் பையெனப் பயிரும்
            வெண்சிறைச் செங்கால் நுண்பொறிப் புறவே
            நுண்சிறு மருங்குல் நுகர்வின் சாயல்
            பாசப் பாண்டில் பல்காழ் அல்குலென்
     165     வாசவ தத்தை உள்வழி அறியின்
            ஆசை தீர அவ்வழி அடைகேன்
            உணரக் கூறா யாயின் பெடையொடு
            புணர்வு விரும்பல் பொல்லாது எனவும்

 
 

            பசைந்துழிப் பழகல் செல்லாது பற்றுவிட்டு
     170     உவந்துழித் தவிராது ஓடுதல் காமுறும்
            இளையோர் உள்ளம் போலத் தளைஅவிழ்ந்து
            ஊதுமலர் ஒழியத் தாதுபெற நயந்து
            கார்புனம் மருங்கின் ஆர்த்தனை திரிதரும்
            அஞ்சிறை அறுகால் செம்பொறி வண்டே

 
 

     175     எரியுள் விளிந்தவென் வரிவளைப் பணைத்தோள்
            வள்ளிதழ்க் கோதை உள்ளுழி உணரின்
            கவற்சி வகையில்பெயர்த்தனை களைஇயர்
            அரும்பூங் கோதைப் பூந்தாது உண்டவள்
            அவிழ்பூங் கூந்தலுள் மகிழ்துயில் வெய்தி
     180     நீயும் எவ்வம் தீர யானும்
            நல்லிள வனமுலை புல்லுபு பொருந்த
            உய்த்தனை காட்டுதி ஆயின் கைம்மாறு
            இத்துணை என்பதொன்று இல்லென இரங்கியும்

 
 

            பொங்குமழை தவழும் பொதியின் மீமிசைச்
     185    சந்தனச் சோலைதொறும் தலைச்சென்று ஆடி
            அசும்பிவர் அடைகரைப் பசுந்தோடு உளரிச்
            சுள்ளிவெண் போது சுரும்புண விரித்து
            மணிவாய் நீலத்து அணிமுகை அலர்த்தி
            ஒண்பூங் காந்தள் உழக்கிச் சந்தனத்
     190     தந்த நறுமலல் அவிழ மலர்த்தி
            நறுங்கூ தாளத்து நாண்மலர் அளைஇக்
            குறுந்தாள் குரவின் குவிமுகை தொலைச்சி
            முல்லைப் போதின் உள்ளமிழ்து உணாஅப்
            பல்பிட வத்துப் பனிமலர் மறுகிப்
     195     பொன்தார்க் கொன்றை நன்தாது நயந்து
            சாத்துவினைக் கம்மியன் கூட்டுவினை அமைத்துப்
            பல்லுறுப்பு அடக்கிய பையகங் கமழ
            எல்லுறு மாலை இமயத் துயர்வரை
            அல்குதற்கு எழுந்த அந்தண் தென்றால்

 
 

     200    செவ்வழித் தீந்தொடை சிதைந்தன கிளவிஎன்
            எல்வளைத் தோளியை எவ்வழி யானும்
            நாடிச் சென்றவள் சேடிள வனமுலைக்
            குழங்கல் சாந்திடைக் குளித்துவிளை யாடிஎன்
            அழுங்கல் நெஞ்சத்து அயாஅநோய் தீர
     205     மயர்வெனை மாற்றுதி யாயின் நின்மாட்டு
            உயர்வுள இயற்கை யொழியுமோ எனவும்
            இன்னவை பிறவும் அன்னவை கண்டோர்
            அவல நெஞ்சமொடு அறிவுபிறி தாகத்
            தவலருந் தேவியைத் தான்நினைந்து ஆற்றாது
     210    இறுதி எண்ணி இகவா மன்னனை

 
 

            உறுதி மொழியின் உணர்த்துவனர் ஆகிப்
            பல்வகைத் தோழர் படிவ வேடமொடு
            செல்வ மகதத்து எல்லை எய்தி
            ஒருவழிப் பழகல் செல்லாது உருவுகரந்து
            பெருவழி முன்னிவர் பெருந்தகைக் கொண்டென்