3. இராசகிரியம் புக்கது

 

இதன்கண். மகதநாட்டு ஊர்ச் சிறப்பும், அவ்இராசகிரிய நகரத்தின் மதில்சிறப்பும், படைச்சேரி பரத்தையர் தெரு, வேளாளர் தெரு, வாணிகர் தெரு, அந்தணர் தெரு, அமைச்சர் தெரு, அரண்மனை முதலியவற்றின் சிறப்பும் உதயணன் முதலியோர் அந்நகரத்தே புக்கதும் பிறவும் கூறப்படும்,
 
              மன்பெருஞ் சிறப்பின் மகதநன் நாடு
            சென்று சார்ந்தபின் வென்றியிற் பெருகி
            யாறுங் குளனும் வாய்மணந்து ஓடித்
            தண்டலை தோறுந் தலைபரந்து ஊட்டி
     5      வண்டுஇமிர் பொய்கையும் வாவியுங் கயமும்
            கேணியுங் கிணறும் நீணிலைப் படுவும்
            நறுமலர் கஞலி உறநிமிர்ந்து ஒழுகிச்
            சாலி கவினிய கோலச் செறுவில்
            செல்வம் கொடுத்து நல்குதல் அலறாஅ
     10     இன்பங் கெழீஇய மன்பெருஞ் சிறப்பின்
            பல்குடித் தொல்லூர் புல்லுபு சூழ
 
              உயர்மிசை யுலகின் உருகெழு பன்மீன்
            அகவயின் பொலிந்துதன் அலங்குகதிர் பரப்பி
            நிலப்புடை நிவத்தரு நிறைமதி போலக்
     15      காட்சி இயைந்த மாட்சித் தாகிச்
 
              சித்திரக் கைவினை செறிந்த கோலத்துப்
            பத்திரப் பாம்புரி அத்தகக் கலாஅய்
            முற்பட வளைஇய பொற்படைப் படுகால்
            கண்டவர் நடுக்கு குண்டகழ்ப் பைந்துகில்
     20     தண்டாச் செல்வமொடு தனக்கணி யாக
            உடுத்துவீற் றிருந்த வடுத்தீர் அல்குல்
            மாற்றோர் நுகரப் படாஅ தேற்ற
            பன்மணி பயின்ற ஒண்முகட்டு உச்சி
            நலத்தகு ஞாயில் இலக்கண இளமுலைப்
 
       25     பொறிநிலை யமைந்த போர்ப்பெருங் கதவிற்
            செறிநிலை அமைந்த சித்திரப் புதவின்
            யாப்புற அமைத்த வாய்ப்புடைப் பணதி
            வல்லோர் வகுத்த செல்வக் கூட்டத்து
            ஆய்நலக் கம்மத்து அழகொடு புணர்ந்து
     30     தீயழற் செல்வன் செலவுமிசை தவிர்க்கும்
            வாயின் மாடத்து ஆய்நல அணிமுகத்து
 
              ஒண்பொற் சத்தித் திண்கொடி சேர்ந்து
            விண்ணில் செல்லும் விளங்கொளி அவர்களை
            மண்ணில் செல்வம் காணிய வல்விரைந்து
     35     அடைதர்மின் என்னும் அவாவின போல
            வடிபட வியங்கும் வண்ணக் கதலிகைக்
            கூந்தல் அணிந்த வேந்துநுதல் சென்னிக்
            கடிஎயில் முதுமகள் காவல் ஆக
 
              நெடுநீர்ப் பேரியாறு நிறைந்துவிலங்கு அறுத்துப்
     40     பல்வழிக் கூடிய படிய வாகிச்
            செல்வழி எல்லாஞ் சிறந்த கம்பலை
            கரைபொருது உலாவுந் திரையொலி கடுப்ப
            நிறைவளங் கவினிய மறுகுஇரு பக்கமும்
            அந்தி வானத்து அகடுமுறை இருந்த
     45     ஒண்கேழ் உடுவின் ஒளிபெறப் பொலிந்து
            கண்ணுற நிவந்த பண்ணமை படுகால்
            கைவினை நுனித்த மைதவழ் மாடத்து
            அரும்படைச் செல்வர் அமர்ந்தினிது உறையும்
            பெரும்படைச் சேரி திருந்தணி எய்திக்
     50     கைபுனை வனப்பின்ஓர் பொய்கை ஆக
 
              வாணுதல் மகளிரும் மைந்தரும் மயங்கிக்
            காமம் என்னும் ஏமப் பெருங்கடல்
            படுதிரைப் பரப்பில் குடைவனர் ஆடி
            அணிதலும் புனைதலும் முனிவிலர் ஆகிக்
     55     காதல் உள்ளமொடு கலந்துஉண் டாடுநர்
            போகச் சேரி புறஇத ழாகச்
 
              சால்பெனக் கிடந்த கோலப் பெருநுகம்
            பொறைக்கழி கோத்துப் பூண்டனர் ஆகி
            மறத்துறைப் பேரியாற்று மறுகரை போகி
     60     அறத்துறைப் பண்டி அசைவிலர் வாங்கி
            உயர்பெருங் கொற்றவன் உவப்பினுங் காயினும்
            தவிர்க்கவும் போக்கவும் படாத தன்மையர்
            நன்புலந் தழீஇய மன்பெருஞ் செய்கைக்
            காரணக் கிளவிப் பூரண நோக்கில்
     65     பெருங்கடி யாளர் அருங்கடிச் சேரி
            புறஇதழ் மருங்கில் புல்லித ழாக
 
              மதிஉறழ் சங்கின் வாய்வயின் போந்த
            நிதியம் பெற்ற நீர்மையர் போல
            அதிரா இயற்கை அங்கண் ஞாலத்துக்
     70     குதிரை மருப்புங் கொளற்குஅரி தாகிய
            அழலுமிழ் நாகம் நிழலுமிழ்மணியும்
            சிங்கப் பாலும் தெண்டிரைப் பௌவத்து
            மூவா அமரர் முயன்றுடன் கொண்ட
            வீயா அமுதமும் வேண்டின் போய்த்தரும்
     75      அரும்பெறற் பண்டம் ஓருங்குஅகத்து அடக்கி
            விட்டனர் இருவா முட்டில் செல்வத்துப்
            பல்விலை வாணிகர் நல்விலைச் சேரி
            புல்இதழ் பொருந்திய நல்இத ழாக
 
              மேன்முறை இயன்ற நான்மறைப் பெருங்கடல்
     80     வண்டுறை எல்லை கண்டுகரை போகிப்
            புறப்பொருள் அல்லா அறப்பொருள் நாவின்
            ஒளிகண் கூடிய நளிமதி போல
            ஓத்தொடு புணர்ந்த காப்புடை ஒழுக்கின்
            உலகப் பல்லுயிர்க்கு அலகை ஆகிப்
     85     பெருந்தகை வேள்வி அருந்தவப் படிவமொடு
            தம்தொழில் திரியாத் தரும நெஞ்சின்
            அந்தணர் சேரி அகஇத ழாக
 
              இருநில வரைப்பின் எதிர்ப்போர் இன்றி
            அருநிலை உலகின் ஆட்சி விறப்பினும்
     90     பெரும்படைக் கொற்றம் பீடழிந்து சுருங்கா
            அரும்படை மன்னர் ஆற்றலின் நெருங்கத்
            தலைமையின் வழீஇய நிலைமை எய்தினும்
            உற்றது முடிக்கும் உறுதி நாட்டத்துக்
            கற்றுப்பொருள் தெரிந்த கண்போல் காட்சி
     95     அருமதி அமைச்சர் திருமதிற் சேரி
            மாசில் பைந்தாது சுமந்த மத்தகத்து
            ஆசில் பன்மலர் அல்லி யாகச்
 
              சுடுகதிர் அணிந்த சூழ்கதிர்ச் செல்வன்
            விடுசுடர்ப் பேரொளி விமானம் போலச்
     100     சேண்ஒளி திகழும் மாண்வினை மாடம்
            வேண்டிய மருங்கில் காண்தக நெருங்கிச்
            செஞ்சுடர் மணிமுடி திகழும் சென்னிப்
            பைந்தலை நாகர் பவணம் கடுப்பக்
            காப்பின்று ஆயினுங் கண்டோர் உட்கும்
     105    யாப்புடைப் புரிசை அணிபெற வளைஇ
            அருமணிப் பைம்பூண் அரசகத்து அடைந்து
            வாயில் அணிந்த வான்கெழு முற்றத்துக்
            கோயில் கொட்டை யாகத் தாமரைப்
 
              பூவொடு பொலியும் பொலிவிற்று ஆகி
     110     அமையாச் செய்தொழில் அவுணர்க் கடந்த
            இமையாச் செங்கண் இந்திரன் உறையும்
            அமரா பதியும் நிகர்தனக்கு இன்றித்
            துன்பம் நீக்குந் தொழிலிற் றாகி
            இன்பங் கலந்த இராச கிரியமென்று
     115     எண்திசை மருங்கினும் தன்பெயர் பொறித்த
            மன்பெருஞ் சிறப்பின் மல்லல் மாநகர்
            சாரச் சென்றதன் சீர்கெழு செல்வமும்
 
              விள்ளா விழுச்சீர்  விச்சா தரர்உறை
            வெள்ளியம் பெருமலை அன்ன விளங்கொளி
     120     மாட மறுகில் மயங்கொளிக் கழுமலும்
            நீடுபுகழ்க் குருசில் நெஞ்சிடை நலிய
            வள்ளிதழ்க் கோதை வாசவ தத்தையை
            உள்ளுபு திருநகர் புக்கனன் உலந்தென்.