4. புறத்தொடுங்கியது

 

இதன்கண்; உருமண்ணுவா முதலியோர் இராசகிரியை நகரத்தே காகதுண்ட முனிவனைக் கண்டு அவனைக் கொண்டு வாசவதத்தையை மீட்டுத் தருவதாகக் கூறச் செய்து உதயணனைத் தேற்றுதலும், அந்நகரின் புறத்தே மறைந்திருத்தலும் கூறப்படும்
 
              உள்ளுதல் ஆனாது உள்ளகஞ் சுருங்கிய
            வள்ளிதழ் நறுத்தார் வத்தவன் தன்னொடு
            விண்ணுற நிவந்த பண்ணமை படைமதில்
            வாயிலும் மருங்கிலுங் காவல் கண்ணி
     5      வேந்து பிழைத்து ஒழுகினுங் காய்ந்து கலக்குஅறாரு
            முழுப்பரி சாரம் முதற்கண் எய்தி
            விழுப்பெருஞ் செல்வமொடு வென்றி தாங்கிய
            ஐம்பதின் இரட்டி யவனச் சேரியும்
            எண்பதின் இரட்டி எறிபடைப் பாடியும்
     10      அளப்பருஞ் சிறப்பின் ஆயிரம் ஆகிய
            தலைப்பெருஞ் சேனைத் தமிழச் சேரியும்
            கொலைபெருங் கடுந்திறல் கொல்லர் சேரியும்
            மிலைச்சச் சேரியுந் தலைத்தலை சிறந்து
 
              வித்தக வினைஞர் பத்தியில் குயிற்றிய
     15      சித்திரச் சாலையும் ஒத்தியைந்து ஓங்கிய
            ஒட்டுவினை மாடமுங் கொட்டுவினைக் கொட்டிலும்
            தண்ணீர்ப் பந்தரும் தகையமை சாலையும்
            அறத்தியல் கொட்டிலும் அம்பலக் கூடமும்
            மறப்போர்க் கோழி மரபில் பொருத்தும்
     20     விறற்போர் ஆடவர் விரும்பிய கண்ணும்
            மறக்களி யானை வடிக்கும் வட்டமும்
            கடிசெல் புரவி முடுகும் வீதியும்
            அடுத்தொலி அறாஅ அரங்கமுங் கழகமும்
            அறச்சோற்று அட்டிலும் அம்பலச் சாலையும்
 
       25     தேவ குலனுந்தேசிகப் பாடியும்
            மாவும்தேரும்மயங்கிய மறுகும்
            காவும் தெற்றியும் கடவுள் பள்ளியும்
            தடவளர் செந்தீ முதல்வர் சாலையும்
            வேண்டிடந் தோறும் காண்தக நெருங்கி
     30     ஆதி யாகி அமைந்தவனப் பெய்தி
            மயங்கிய மாந்தர்த் தாகி யார்க்கும்
            இயங்குதற்கு இன்னாப் புறம்பணைச் சேரியும்
            அந்தண் பாடியும் அணுகி அல்லது
            வெந்திறல் வேகமொடு விலக்குதற்கு அரிய
     35     ஐங்கணைக் கிழவன் அமர்ந்துநிலை பெற்ற
            எழுதுவினைத் திருநகர் எழிலுற வெய்தி
 
              இட்டிகைப் படுகால் குட்டக் கோணத்து
            உத்தர மருங்கின் நத்தினஞ் சொரிந்த
            மணிதெளித் தன்ன அணிநிறத் தெண்ணீர்ப்
     40     பெருந்தண் பொய்கை மருங்கில் குலாஅய்ச்
 
              சேறுபடு செறுவின் நாறுநடு கடைசியர்
            கழிப்புநீர் ஆரலொடு கொழுப்புஇறாக் கொளீஇய
            நாரைச் சேவல் பார்வலொடு வதிந்த
            எழில்பூம் புன்னைப் பொழில்புடை நிவந்த
     45     வள்ளிதழ்த் தாமரை வான்போது உளரி
            முழுத்திரள் தெங்கின் விழுக்குலை நெற்றி
            அகமடல் வதிந்த வன்புபுரி பேடை
            நரல்குரல் ஓசை அளைஇ அயல
 
              கணைக்கால் கமுகின் இணைப்பொதி அவிழ்ந்த
     50     அம்மென் பாளையுள் அசைந்த வண்டினம்
            மம்மர் வைகறை மகுங்குதுயில் ஏற்ற
            அனந்தர் முரற்சி அளைஇப் புதைந்த
            பூங்கள் முற்றிய புறத்துப் புடை ஆடித்
            தேங்கண் தும்பி தீங்குழல் இசைப்ப
 
 

     55     இயல்பில் கெழீஇய இன்துணைப் பிரிந்தோர்க்கு
            உயலரி தாக வூழூழ் கவற்றும்
            வயலுந் தோட்டமும் அயல்பல கெழீஇய
            தாமரைச் செங்கண் தமனிய இணைக்குழைக்
            காமன் கோட்டத்துக் கைப்புடை நிவந்த
     60     இளமரக் காவின் இணைதனக்கு இல்லாத்
            தூபத் தொழுக்கத் தாபதப் பள்ளி
            தமக்கிட மாக அமைத்த பின்றை

 
              வீழ்துணை மாதர் விளிவுநினைந்து இரங்கி
            வாழ்தல் ஆற்றான் வாய்மொழி அரசன்
     65     உற்றவன் ஆருயிர் உய்தல் வேண்டி
            இற்றவள் பிறந்துழிக் காட்டு மந்திரம்
            கற்றுவினை நவின்றனென் காட்டுவென் நினக்கென
            வஞ்ச மாயினும் நெஞ்சுவலி யுறுக்கெனக்
            கண்கவர் பேரொளிக் காகதுண் டகன்எனும்
     70     அந்த ணாளனை அமைச்சர் தருதலின்
 
              அருமதி அண்ணற்கு அவனிது கூறும்
            இருமதி எல்லை இயைந்த விரதமொடு
            இரக்கம் இன்றி இருக்கல் வேண்டும்
            அத்துணை இருந்தபின் அருங்காட்டு அகவயின்
     75     மொய்த்தழல் ஈமத்து முன்னர்க் காட்டிய
            தவாஅ அன்பின் தவமா சாதனை
            போகிய பொழுதின் ஆகிய நலத்தொடு
            மேலை ஆகிய வடிவினள் ஆகி
            மற்றவள் அடைவது தெற்றெனத் தெளிஎனக்
 
       80     கற்புடை மாதரைக் கைப்படுத் தன்னதோர்
            கட்டுரை வகையில் பட்டுரை அகற்றி
            ஆப்புடை ஒழுக்கம் அறியக் கூறிக்
            காப்பொடு புணரில் காணலும் எளிதெனக்
            காவல குமரற்கு மேவன உரைத்து
     85     விடுத்தவன் போகிய பின்றை மடுத்த
 
              இருநிலம் புகுதலும் ஒருவிசும்பு இவர்தலும்
            வருதிரை நெடுங்கடல் வாய்க்கொண்டு உமிழ்தலும்
            மந்தரம் ஏந்தலும் என்றிவை பிறவும்
            பண்டியல் விச்சை பயிற்றிய மாக்களைக்
     90     கண்டும் அறிதும் கண்கூ டாகச்
 
              செத்தோர்ப் புணர்க்கும் விச்சையொடு புணர்ந்தோர்க்
            கேட்டும் அறியலம் வீட்டருஞ் சிறப்பிற்
            புண்ணியன் உடைமையின் நண்ணினன் நாம்இவன்
            ஒருதலை யாகத் தருதல் வாயென
     95     உறுதி வேண்டி உருமண் ணுவாவும்
            மருவிய தோழரும் மன்னனைத் தேற்றி
 
              மாய ஒழுக்கமொடு சேயதை நோக்கி
            மிகுதிக் காதல் மகத மன்னனோடு
            சுற்ற மாக்குஞ் சூழ்ச்சிய ராகிக்
     100     கொற்ற வேந்தன் குறிப்புவழி ஓடி
            அகத்துறைந்து ஒடுங்குதல் செல்லார் அகன்மதில்
            புறத்துஒடுங் கினரால் பொருள்பல புரிந்தென்.