5. பதுமாபதி போந்தது

 

இதன்கண்; மகதமன்னனாகிய தருசகன் இயல்பும், அவன் தங்கையாகிய பதுமாபதியின் இயல்பும், பதுமாபதி காமவேள்கோட்டம்  புகுவாள்  என  முரசு அறைதலும்,  நகரமாந்தர் காமவேளுக்கு விழா எடுத்தலும்; பதுமாபதி புறப்படுதலும்,அவள் ஏறும் வண்டி எருதுகள் இயல்பும், மகளிர் ஏந்திய பொருளியல்பும் பதுமாபதி வண்டியேற வருதலும் வண்டியேறிக் காமன் கோயில் செல்லலும் கூறப்படும்.
 
              பொருள்புரி அமைச்சர் பூங்கழல் குருசிலொடு
            இருளறு திருமணி இராசகிரி யத்துப்
            புறமதில் ஒடுங்கிய பொழுதில் மறனுவம்
            தமரா மன்னர் அருஞ்சமம் முருக்கிப்
     5      பைங்கழல் அமைந்த பாடமை நோன்றாள்
            வெண்கதிர் மதியின் வீறொளி திகழ்ந்து
            தான்மீக் கூரிய ஏம வெண்குடை
            மணிமுடிச் சென்னி மகத மன்னவன்
            தணியா வேகத்துத் தருசகன் தங்கை
 
       10      பசும்பொன் கிண்கிணி பரடுசுமந்து அரற்ற
            அசும்பமல் தாமரை அலைத்த அடியினள்
            சிறுபிடித் தடக்கையில் செறிவொடு புணர்ந்து
            மென்மையின் இயன்று செம்மைய வாகி
            நண்புவீற் றிருந்த நலத்தகு குறங்கினள்
     15      மணியும் பவழமும் அணிபெற நிரைஇய
            செம்பொன் பாசிழை செறிய வீக்கிய
            பைந்துகில் அணிந்த பரவை அல்குலள்
            துடிதோம் கூறிய இடுகிய நடுவிற்குப்
            பார மாகிய வீரத் தானையள்
 
       20     ஊக்க வேந்தன் ஆக்கம் போல
            வீக்கங் கொண்டு வெம்மைய வாகி
            இலைப்பூண் திளைக்கும் ஏந்திள முலையள்
            திலதம் சுடரும் திருமதி வாண்முகத்து
            அலரெனக் கிடந்த மதரரி மழைக்கண்
     25     கதிர்வளைப் பணைத்தோள் கணங்குழைக் காதில்
            புதுமலர்க் கோதை புனைஇருங் கூந்தல்
            பதுமா பதியெனும் பைந்தொடிக் கோமகள்
 
              கன்னி ஆயம் துன்னுபு சூழ
            மதில்புறம்  கவைஇய புதுப்பூங் காவின்
     30     மகர வெல்கொடி மகிழ்கணைக் காமன்கு
            நகரங் கொண்ட நாளணி விழவினுள்
            எழுநாள் தோறுங் கழுமிய காதலொடு
            வழிபாடு ஆற்றிய போதரும் இன்றென
            அழிகவுள் வேழத்து அணிஎருத் தேற்றிய
     35     இடியுமிழ் முரசின் இருங்கண் தாக்கி
            வடிவேல் கொற்றவன் வாழ்கெனப் பல்லூழ்
            அணித்திரள் கந்தின் மணிப்பொன் பலகைச்
            சித்திர முதுசுவர் வித்தக வேயுள்
            ஆவணம் தோறும் அறைந்தறி உறுத்தலின்
 
       40     இடையற வில்லாக் கடைமுதல் ஏறும்
            கைவல் ஓவியர் மெய்பெற எழுதிய
            உருவப் பூங்கொடி ஒசிய எடுத்துத்
            தெருவும் அந்தியுந் தெய்வச் சதுக்கமும்
            பழமணல் நீக்கிப் புதுமணல் பரப்பி
     45     விண்மிசை உலகின் விழவுஅமைந் தாங்கு
            மண்மிசை உலகின் மன்னிய சீர்த்தி
            முழவுமலி திருநகர் விழவுவினை தொடங்க
 
              அரும்பொறி நுனித்த யவனக் கைவினைப்
            பெரும்பொறி வையத் திருந்தியாப் புறீஇ
     50     மங்கலச் சாந்தின் மலர்க்கொடி எழுதிப்
            பைம்பொன் பத்திரம் புளகமொடு வீக்கிக்
            கதிர்நகைத் தாமம் எதிர்முகம் நாற்றிப்
            பத்திர மாலை சித்திரம் ஆகப்
            புடைப்புடை தோறும் தொடக்கொடு தூக்கிக்
     55     கட்டி தோய்த்த காழகில் நறும்புகை
            பட்டுநிணர் கட்டில் பல்படை குளிப்ப
            உள்ளக மருங்கின் விள்ளாக் காதல்
            துணைநலத் தோழியர் துப்புரவு அடக்கி
            அணிநலத் தோழிக்கு அமைந்தன இயற்றி
 
       60     நெய்ந்நிறம் கொண்ட பைந்நிற மஞ்சளின்
            வைம்மருப்பு அணிபெற வண்ணம் கொளீஇக்
            கைவினைக் கண்ணி கவின்பெறச் சூட்டித்
            தகைமலர்ப் பொன்தார் வகைபெற அணிந்து
            காண்தகு வனப்பில் காலியல் செலவில்
     65     பாண்டில் வையம் பண்ணிப் பாகன்
            கோலுடைக் கையில் கூப்புவனன் இறைஞ்சி
            வையம் வந்து வாயில் நின்றமை
            தெய்வ மாதர்க்கு இசைமின் சென்றென
 
              இசைத்த மாற்றத்து உரைப்பெதிர் விரும்பிப்
     70     போதுவிரி தாமரைத் தாதகத்து உறையும்
            தீதுதீர் சிறப்பின் திருமகள் ஆயினும்
            உருவினும் முணர்வினும் ஒப்புமை ஆற்றாத்
            தெரியிழை அல்குல் தேமொழிக் குறுமகள்
 
              பாவையும் பந்தும் கழங்கும் பசும்பொன்
     75     தூதையும் முற்றிலும் பேதை மஞ்ஞையும்
            கிளியும் பூவையும் தெளிமணி அடைப்பையும்
            கவரியும் தவிசும் கமழ்புகை அகிலும்
            சாத்துக் கோயும் பூத்தகைச் செப்பும்
            இன்னவை பிறவும் இயைய ஏந்தி
 
       80     வண்ண மகளிர் வழிநின்று ஏத்திச்
            செண்ணச் சேவடி போற்றிச் சேயிழை
            மென்மெல விடுகெனப் பன்முறை பணிய
            ஒண்செங் காந்தள் கொழுமுகை உடற்றிப்
            பண்கெழு தெரிவிரல் அங்கை சிவப்ப
     85     மயிலெருத்து அணிமுடி மாதர்த் தோழி
            கயிலெருத் தசைத்த கையள் ஆகித்
            தாழியுள் மலர்ந்த தண்செங் குவளை
            ஊழுறு நறும்போது ஒருகையில் பிடித்து
            விண்ணக மருங்கின் வேமா னியர்மகள்
     90     மண்ணகத்து இழிதர மனம்பிறழ்ந்து ஆங்குக்
            கன்னிக் கடிநகர்ப் பொன்நிலத்து ஒதுங்கி
            விடுகதிர் மின்என விளங்குமணி இமைப்ப
            இடுமணல் முற்றத்து மெல்லென இழிதர
 
              வாயில் போந்து வைய மேறிற்
     95     சாய னோமெனத் தாய்அகட்டு எடுத்துப்
            போற்றுப்பல கூற வேற்றுவனள் இருப்பப்
 
              பாகனை ஒழித்துக் கூன்மகள் கோல்கொளப்
            பொதியில் சோலையுள் கதிரெனக் கவினிய
            கருங்கண் சூரல் செங்கோல் பிடித்த
     100     கோல்தொழி லாளர் மாற்றுமொழி விரவி
            நலத்தகு நங்கை போதரும் பொழுதின்
            விலக்கரும் வேழம் விடுதிர் ஆயின்
            காயப் படுதிர் காவலன் பணியென
            வாயில் கூறி வழிவழி தோறும்
     105     வேக யானைப் பாகர்க்கு உணர்த்தி
 
              உட்குவர் உருவம் கட்புல மருங்கில்
            காண விடாஅர் ராணையின் அகற்றிக்
            கச்சுப்பிணி உறுத்துக் கண்டகம் பூண்ட
            அச்சுறு நோக்கின் அறுபது கழிந்த
     110     காஞ்சுகி மாக்கள் சேர்ந்துபுடை காப்பக்
 
              கண்டோர் விழையும் தண்டாக் காதலொடு
            அருந்தவம் உண்மை அறிமின் நீரெனப்
            பெருஞ்சாற்று உறூஉம் பெற்றியள் போலப்
            பைந்தொடி மகளிர் நெஞ்சுநிறை அன்பொடு
     115     வண்ண மலரும் சுண்ணமும் தூவ
            அநங்கத் தானத்து அணிமலர்க் காவில்
            புலம்புஅடை வாயில் புக்கனள் பொலிந்தென்.