18. தருசகனோடு கூடியது

 

இதன்கண் - சங்க மன்னரை உதயணன் வென்ற பின்னர் உருமண்ணுவா முதலியோர் செயலும், வயந்தகன் செயலும், தருசகன் செயலும், தருசகன் உதயணனை எதிர் கொள்ளச் செல்லுதலும், அமைச்சருள் சிலர், தருசகனைத் தடுத்தலும், அவன் அவர் அறிவுரை கேளாமல் உதயணனை எதிர் கொள்ளலும், உதயணனை முகமன் கூறி அரியணையில் இருக்கச் செய்தலும் பிறவும் கூறப்படும்.
 
 

              அரணமை பெருமலை அடைவது பொருளென
              முரணமை மன்னர் முடுகிய பின்னர்

 
 

              ஆளூறு படாமைக் கோளூறு புரிந்த
              செம்ம லாளர் தம்முள் கூடி
     5        ஒன்னா மன்னரை ஒட்டினம் ஆதலின்
              மின்னேர் சாயலை மேயநம் பெருமகன்கு
              ஆக்கம் உண்டெனுஞ் சூழ்ச்சியோடு ஒருபால்
              புலர்ந்த காலை மலர்ந்துஅவண் அணுகிக்
              களங்கரை கண்டு துளங்குபு வருவோர்
     10        மகத மன்னற்கு உகவை யாகக்

 
                கோடாச் செங்கோல் குருகுலத்து அரசன்
              ஓடாக் கழற்கால் உதயண குமரன்
              கோயில் வேவினுள் ஆய்வளைப் பணைத்தோள்
              தேவி வீயத் தீரா அவலமொடு
     15        தன்னாடு அகன்று பன்னாடு படர்ந்து
              புலம்பிவள் தீர்ந்து போகிய போந்தோன்

  

 
                சலந்தீர் பெரும்புகழ்ச் சதானிக அரசனும்
              மறப்பெருந் தானை மகத மன்னனும்
              சிறப்புடைக் கிழமை செய்ததை அறிதலின்
     20       அகப்பாட்டு அண்மையன் அல்லதை இகப்பத்
              தாதுஅலர் பைந்தார்த் தருசகன் நமக்கு
              வேறலன் அவனை வென்றியின் நீக்கி
              மாறுசெயற்கு இருந்த மன்னரை ஓட்டியது
              பண்ணி கார மாகக் கண்ணுற்று
     25       முற்பால் கிழமை முதலறவு இன்றி
              நற்கியாப் புறீஇப் போதும் நாமெனச
              சிறந்த தோழர் சிலரொடு சென்று
 
                விரவுமலர்த் தாரோய் இரவெறிந்து அகற்றினன்
              என்பது கூறென மன்பெருஞ் சீர்த்தி
     30        வயந்தக குமரனை வாயி லாகப்
              போக்கிய பின்றைஅவன் புனைநகர் வீதியுள்
 
                கேட்போர்க்கு எல்லாம் வேட்கை உடைத்தா
              மறைத்தல் இன்றி மறுகுதோறு அறைய
 
                அகன்பெருந் தானை அரசத் தாணியுள்
     35       நிகழ்ந்தது இற்றென நெடுந்தகை கேட்டு
              நன்னாடு நடுக்கம் உறீஇத் தன்மேல்
              ஒன்னா மன்னர் உடன்றுவரு காலை
              வணக்கும் வாயில் காணான் மம்மரொடு
              நினைப்புஉள் ளுறுத்த நெஞ்சமொடு இருந்தோற்கு
     40       வென்றி மாற்றஞ் சென்றுசெவிக்கு இசைப்பப்
 
                பூப்புரி முற்றம் பொலியப் புகுந்து
              வாய்ப்பொரு ளாக அறிந்துவந் தோர்களைக்
              காட்டுக விரைந்தெனக் காவலன் அருள
              நகர்அங் காடிதொறும் பகர்வனன் அறையும்
     45       வாள்தொழில் தடக்கை வயந்தகன் காட்டி
              உட்பட்டு அதனை ஒழிவின்று உணர்ந்துநின்
              கட்பட்டு உணர்த்துதல் கரும மாக
              வந்தனன் இவனென வெந்திறல் வேந்தன்
              பருகு வன்ன பண்பினன் ஆகி்
 
 

     50       அருகர் மாற்றம் மங்கையின் அவித்துக்
              கேட்குஞ் செவ்வி நோக்கம் வேட்ப
              இருபெரும் மன்னர் இறைவருந் தம்முள்
              ஒருபெருங் கிழமை உண்மை உணர்த்தலும்
              வயந்தகன் வாயது நிற்க உயர்ந்த

    55       நண்பே அன்றி நம்மொடு புணர்ந்த
              கண்போல் கிழமைக் கலப்பும் உண்டெனத்
              தானை நாப்பண் தான்எடுத்து உரைத்து

 
                வீணைந வின்ற விறல்வேல்  உதயணன்
              இவண்வரப் பெற்றேன் தவமிக வுடையெனென்று
     60       ஏதம் இன்மையும் நீதியும் வினாஅய்
              இன்னா மன்னர் இகலடு பெரும்படை
              தாக்கிய வாறுந் தகர நூறிப்
              போக்கிய வாறும் போந்த வண்ணமும்
              முறைமையில் கேட்டு நிறைநீர் வரைப்பில்
 
       65       கெட்ட காலையும் கேட்டோர் உவப்ப
              நட்டோர்க்கு ஆற்றும் நன்ன ராளன்
              வரவெதிர் கொள்கென வாயிலும் வீதியும்
              விரைமலர்ப் பூங்கொடி வேறுபட உயரி
              வனப்பொடு புணர்ந்த வார்கவுள் வேழம்
     70       சினப்போர் அண்ணற்குச் செல்கெனப் போக்கிக்
 
                 குலத்தில் தன்னொடு நிகர்க்குநன் ஆதலின்
               கவற்சியொடு போந்த காவலன் முன்னர்ப்
               புகற்சியொடு சேறல் பொருத்தம் இன்றெனப்
               போற்றுங் கவரியுங் குடையுங் கோலமும்
     75        மாற்றுவனன் ஆகி மகதவர் கோமான்
               இடுமணி இல்லதோர் பிடிமிசை ஏறிப்
               படுமணி வாயில் பலரொடும் போதர
 
                வானுயர் உலகம் வழுக்குபு வீழ்ந்த
              தேனுயர் நறுந்தார்த் திறலோன் போலத்
     80       தோழர் சூழ வேழ மேல்கொண்டு
              உதையண குமரன் புகுதர ஓடிச
 
                சிதைபொருள் தெரியுஞ் செந்நெறி யாளர்
              கடல்கண் டன்ன அடலருந் தானையை
              இனைய கூட்டமொடு எண்ணாது அகம்புக்கு
    85       வினைமேம் பட்ட வென்றி வேந்தனைத்
              தெளிவது தீதெனச் சேர்ந்துசென்று இசைப்ப
 
                நட்புவலைக் கிழமையினன் அம்பொருட் டாக
              உட்குறு பெரும்படை உலைத்த ஒருவனை
             வேறெனக் கருதுதல் விழுப்பம் அன்றெனத்
     90      தேறக் காட்டித் தெளிவு முந்துறீஇச்
             சென்றுகண் உற்ற குன்றா.........
             இடத்தொடு ஒப்புமை நோக்கி இருவரும்
             தடக்கை பிணைஇச் சமயக் காட்சியர்
            அன்பில் கலந்த இன்பக் கட்டுரை
     95     இருவருந் தம்முள் ஏற்பவை கூறித்
            திருஅமர் கோயில் சென்றுபுக்கு அவ்வழி
 
              உஞ்சையம் பெரும்பதி உழக்குபு கொல்லும்
            வெஞ்சின வேழத்து வெகுட்சி நீக்கிப்
            பல்உயிர்ப் பருவரல் ஓம்பிய பெருமகன்
    100      மல்லல் தானை வத்தவர் கோமான்கு
            ஒன்னா மன்னர் உடல்சினம் முருக்கி
            இன்னா நீக்கலும் ஏயர் குலத்தோற்கு
            இயைந்துவந் ததுஎன வியந்துவிரல் விதிர்த்துப்
            பக்க மாக்கள் தித்தமுள் உரைக்கும்
    105      உறுபுகழ்க் கிளவி சிறிய கேளாத்
 
 

           தானும் அவனுந் தானத்து இழிந்தோர்
           மணிக்கால் மண்டபத்து அணித்தக இருந்து
           தொன்றுமுதிர் தொடர்பே அன்றியும் தோன்ற
           அன்றைக் கிழமையு மாற்ற அளைஇப்
    110     பள்ளி மாடமொடு கோயிலும் பாற்படுத்து
           எள்ளி வந்த இன்னா மன்னரைப்
           போரடு வருத்தந் தீரப் புகுகெனத்
           தாருடை வேந்தன் தான்பின் சென்று
           கோயில் புகீஇ வாயிலுள் ஒழிந்து
   115     விருப்பின் தீரான் வேண்டுவ அமைத்து
           வருத்தம் ஓம்பினன் வத்தவன் பெற்றென்.

                18. தருசகனோடு கூடியது முற்றிற்று