20. சங்க மன்னர் உடைந்தது

 

இதன்கண் மகத மன்னன் படைகளிடத்தும் சங்க மன்னர் படைஇடத்தும் அமைந்த காலாட்படை குதிரை மறவர் யானை இவர்களின் இயல்பும், போர் நிகழ்ச்சியும், உதயணன் முதலியோர் செயலும், போரின்கண் அச்சுவப் பெருமகன் இறந்து படுதலும், அச்செய்தியை உதயணன் தருசகனுக்குக் கூறுதலும், தருசகன் வருந்துதலும், தருசகனும் உதயணனும் நகர் புகுதலும், நகர மாந்தர் செயலும், உதயணனைப் புகழ்தலும், சிலர் வாசவதத்தையை இகழ்தலும்; சிலர் அவளைப் புகழ்தலும் பிறவும் கூறப்படும்.
 
              பரந்த பெரும்படை எதிர்ந்த காலை
            அருங்கணை நிறைந்த ஆவ நாழிகை
            பெரும்புறத்து இட்ட கருங்கச் சீர்ப்பினர்
            பிறர்ப்பிறக்கு இடீஇச் சிறப்பிகந்து எள்ளி
       5    நகுவன போலத் தொகைகொண்டு ஆர்ப்புறும்
            பைங்கழல் அணிந்து பரிபுஅசை வில்லா
            இசைகொள் நோன்தாள் அசைவில் ஆண்மையர்
 
              வணங்குசிலைச் சாபம் வார்கணை கொளீஇ
            நிணம்பட நெஞ்சமும் நெற்றியும் அழுத்திக்
      10    கைபுடை பரந்து கலங்கத் தாக்குநர்
            புடைநிரைத் தாரைக் கடிநீர்க் கைவாள்
            படையு நெருக்கிப்........................
            பாலிகை விளிக்கும் பண்அமை பற்றினர்
            மாலையும் வயிரமும் ஊழூழ் பொங்கக்
      15    கால்வல் இளையர் கலங்கத் தாக்கவும்
 
              படைமிசை நிரைத்த வடிவமை வார்நூல்
            சித்திரக் குரத்தின வித்தகக் கைவினைப்
            புடைப்பொன் புளகமொடு பொங்குமயிர் அணிந்த
            அரத்தப் போர்வைய யாப்பமை கச்சின
      20    முற்றுமறை பருமமொடு பொற்பூஞ் சிக்கத்
            தாண வட்டத்து யாப்புப் பிணிஉறீஇக்
            கோண வட்டக் கோல முகத்த
            வெண்கடல் திரையென மிசைமிசை நிவந்தரும்
            பொங்குமயிர் இட்ட பொலிவின வாகி
 
        25    அரிபெய் புட்டில் ஆர்ப்பக் கருவியொடு
            மேலோர் உள்ளம் போல நூலோர்
            புகழப் பட்ட போர்வல் புரவி
            இகழ்தல் இன்றி ஏறிய வீரர்
            வெம்முரண் வீரமொடு தம்முள் தாக்கவும்
 
        30    போர்ப்பறை முழக்கினும் ஆர்ப்பினும் அழன்று
            கார்ப்பெயல் அருவியில் கடாஞ்சொரி கவுள
            கொலைநவில் பல்படை கொண்ட மாட்சிய
            மலைநிமிர்ந்து அன்ன மழகளிற்று எருத்தில்
            சிலையுங் கணையுஞ் சீர்ப்பமை வட்டும்
      35    மழுவுங் குந்தமும் முழுமயிற் பீலியும்
            சங்கமுங் கணையமுஞ் சத்தியும் வாளும்
            பிண்டி பாலமும் பிறவும் எல்லாம்
            தண்டாக் கருவி தாந்துறை போகிய
            வண்டார் தெரியல் மறவர் மயங்கி
      40    அருநிலம் அதிரத் திரிதரல் ஓவா
            வீதி வட்டமொடு ஆதிய கதிவயின்
            பாழி பயிற்றி நூழில் ஆட்டவும்
 
              போர்க்கள வட்டங் கார்க்கடல் ஒலியெனக்
            கடற்படைக் கம்பலை கலந்த காலை
      45    மடற் பனை இடைத்துணி கடுப்பப் பல்லூழ்
            அடக்கரும் வேழத் தடக்கை வீழவும்
            வார்ப்பண் புதைஇய போர்ப்பமை வனப்பின்
            துடித்தலை போல வடித்தலை அறவும்
            சுற்றார் கருவில் துணியெனத் தோன்றி
      50    அற்றம் இல்வால் அற்றன கிடப்பவும்
 
              சித்திரத் தாமரைப் பத்திரப் பரூஉத்தொடி
            நுதிமுக வெண்கோடு முதலற எறிதலின்
            செக்கர்க் குளிக்கும் வெண்பிறை போல
            உட்குவரு குருதியுள் ளுடன்பல வீழவும்
      55    கார்முகக் கடுமுகில் ஊர்தி யாக
            விசும்பிடைத் திரிதரும் விஞ்சை மாந்தரைக்
            கடுந்தொழில் விச்சை கற்ற மாற்றவர்
            மறத்தால் நெருங்கி மற்றவர் உடனே
            நிறத்துஏ றுண்டு நிலத்துவீழ் வதுபோல்
      60    மார்பின் வெம்படை ஆர மாந்தி
            வீர நோக்கினர் வேழமொடு வீழவும்
 
              பூணேற்று அகன்ற புடைகிளர் அகலத்துத்
            தாமேற்று அழுத்திய சத்தி வாங்கிப்
            புரைசை உய்த்த பொருகழல் காலினர்
      65    வரைமிசை மறிநரின் மறப்படை திருத்தி
            வெம்முரண் வேழம் வீழ்த்து மாற்றார்
            தம்முயிர் நீங்கத் தாழ்ந்தனர் வீழவும்
 
              அடுத்தெழு பெருந்திரை அகன்கடல் நடுவண்
            உடைத்த நாவாய்க் கடைத்தொடை தழீஇ
      70    இடைத்திரைக்கு அணவரூஉம் எழுச்சி ஏய்ப்ப
            வாக்கமை பிடிவார் வலித்த கையினர்
            ஊற்றமில் புரவித் தாள்கழி வாகிய
            குருதிப் புனலிடைக் கருதியது முடியார்
            மாவொடு மறிந்து மயங்கி வீழவும்
 
        75    அலைகடல் வெள்ள மலைய ஊழி
            உலக மாந்தரின் களைகண் காணார்
            ஒண்செங் குருதியில் செங்கணிப் போரால்
            நீலக் கொண்மூ நீர்த்திரைப் பெய்வதோர்
            கோலம் ஏய்ப்பக் கருந்தலை வீழவும்
 
 

      80    கால்வல் புரவியுங் கடுங்கண் யானையும்
            வேல்வல் இளையரும் விழுந்துகுழம் பாகிய
            அள்ளல் செஞ்சேறு உள்ளோர் உழக்கலின்
            துப்புநிலத்து எழுந்த துகளென மிக்கெழுந்து
            தந்தர விசும்பி னந்தியிற் பரப்பவும்
      85    தெரிவருங் குணத்துத் திசைதொறும் பொருந்தப்
            போர்வலம் வாய்த்த பொங்குஅமர் அழுவத்து

 
              வார்தளிர்ப் படலை வத்தவர் பெருமகன்
            எலிச்செவி அரசன் தம்பி ஏறிய
            கொலைப்பெருங் களிற்றின் எருத்தத்துப் பாய்ந்தவன்
      90    தம்முன் காணத் தலைதுமித் திடாது
            நின்னின் முடியும்எம் கருமம் ஈண்டுஎனக்
            கடுத்த கட்டுரை எடுத்தனன் கச்சின்
            திண்டோள் கட்டிய வென்றி நோக்கி
 
              ஒண்தார் மார்பன் கொண்டமை கண்டே
      95    ஒருக்கி நிரல்பொரூஉம் உருமண் ணுவாநம்
            கருத்துவினை முடிக்குங் காலம் இதுவென
            வேக வெள்வேல் கேகயத்து அரசனை
            அடைதர்க வல்விரைந்து அமரார் பெரும்படை
            உடைவிடம் போல உண்டென உரையா
 
        100    இருவருங் கூடி எலிச்செவி அரசன்
            பொருமுரன் படையொடு மயங்கிய பொழுதவன்
            அரணக் கருவி அழிய வாங்கிக்
            கரண வகையால் கண்இமைப் பளவில்
            மாசில் விழுச்சீர்க் கேகயத் தரசன்
      105    ஆசில் பைந்தலை அரிந்துநிலஞ் சேர
            வீசிய வாளினன் விறலோர்ச் சவட்டி
 
              வென்றோன் ஏறிய வேழஞ் சார்ந்தவன்
            ஆற்றல் தன்மையன் ஆதலின் தம்பி
            சிறைகொளப் பட்ட செல்லல் நோக்கி
      110    உறைகழி வாளின் உருமண் ணுவாவின்
           மத்த யானை மருங்கில் குப்புற்று
            ஒள்வாள் ஓக்கி எள்ளுநர் ஒட்டிய
            எம்பி உற்ற இன்னாச் சிறைவிடின்
            உய்ந்தனை யாகுதி அஞ்சல் நீயென
      115    ஆர்ப்பக் கண்டே அடுதிறல் உதயணன்
 
              தாக்கருந் தானைத் தருசகன் தன்னொடு
            வேற்றுமை இலன்இவன் போற்றினை ஆயில்
            பெறற்கரு நும்பியைப் பெறுதி நீயெனத்
            திறப்படக் கூறி மறப்படை நூறக்
 
        120    கடும்புனல் நெருங்க உடைந்துநிலை ஆற்றா
            உப்புச் சிறைபோல் உள்நெகிழ்ந்து உருகி
            வெப்ப மன்னர் வீக்கஞ் சாய
            உடைந்துகை அகலஅவ ருரிமை தழீஇக்
            கடந்தலை கழித்துக் கடுவாய் எஃகமொடு
      125    இகலாள் படுகளத்து அகலமர் ஆயத்து
            உதயண குமரன் உற்றோர் சூழ
            விசய முரசொடு வியன்நகர் அறிய
            மகத மன்னற்கு உகவை போக்கலின்
 
              கேட்டுப்பொருள் நல்கி வேட்டுவிரைந்து எழுந்து
      130    வெற்றத் தானை முற்றத்துத் தோன்றிப்
            பகைக்கடன் தீர்த்த தகைப்பொலி மார்பனைப்
            பல்லூழ் புல்லி வெல்போர் வேந்த
            படைத்தொழில் மாற்றம் பட்டாங்கு உரைக்கென
 
              எடுத்த பெரும்படை எழுச்சியு இறுதியும்
      135    பரப்புஞ் சுருக்கும் பாழியும் அறியான்
            விலக்கவும் நில்லான் தலைக்கொண்டு ஓடித்
            தமரையுந் தீர்ந்து நமரையும் நண்ணான்
            கேள்அல் மன்னன் வாள்வாய்த் துஞ்சி
            மாக விசும்பின் இன்துயில் ஏற்றனன்
      140    கேகயத்து அரசன் எனவது கேட்டே
 
              என்கடன் தீரேன் ஆயின் ஏனவன்
            தன்கடன் தீர்த்துத் தக்கது ஆற்றினன்
            என்பது கூறி அன்புநெகிழ்ந்து உருகிப்
            பேரா இடும்பையுள் ஆராய்ந்து அவனைக்
      145    ரெரிப் படுத்துக் குறைவினை நீக்கி
 
              மகதவர் இறைவனும் வத்தவ மன்னனும்
            அகன்நகர் புகுந்த காலை முகன்நக
            மணிச்சுதைக் குன்றமும் மண்டபத்து உச்சியும்
            அணித்தகு மாடமும் அரும்பெறல் புரிசையும்
      150    நிலைக்கால் ஏணியுந் தலைச்சிறந்து ஏறி
            இரும்பேர் உலகம் ஒருங்கியைந் ததுபோல்
            தெருவும் மன்றமும் திருமணல் முற்றமும்
            மலரணி முகத்து வந்துஇறை கொண்டு
 
              கீழும் மேலுங் கேட்புழி எல்லாம்
      155    வாழ்க மற்றிவ் வத்தவர் பெருமகன்
            என்நாடு இதுவன்று என்னான் சென்றுழி
            அந்நாட்டு இடுக்கணும் அச்சமும் அகற்றும்
            தத்துவ நெஞ்சத்து உத்தமன் என்மரும்
            வனப்பிற்கு ஏற்ற வலியும் விச்சையும்
      160    சினப்போர் இவன்கே சேர்ந்தஎன் போரும்
            வஞ்சச் சூழ்ச்சியின் வணக்கின் அல்லதை
            அஞ்சாது இவனை அமர்வென்று அழிக்கும்
            வெஞ்சின வேந்தர்இங்கு இல்என் போரும்
 
              ஆசில் செங்கோல் அவந்தியன் மடமகள்
      165    வாசவ தத்தைஇவன் வலியொடு புணர்ந்த
            செருவடு தோள்மிசைச் சேர்ந்தனள் வைகும்
            திருவிலள் ஆதலின் தீப்பட் டாள்எனப்
            படுசொல் மாற்றம் தெளிந்த பரிவினர்
            தொடிகெழு தோளி திருஇழிப் போரும்
 
        170    அலைகடல் ஞாலத்து ஆக்கையொடு ஆருயிர்
            நிலைநின்று அமையாது நிரைவளைத் தோளி
            துஞ்சியும் துஞ்சாள் தோள்நலம் நுகர்ந்த
            வெஞ்சின வேந்தன்அவள் விளிவு முந்துறீஇப்
            புன்கண் கூரப் புலம்புகொண்டு ஆற்றான்
      175    தன்நகர் துறந்து தலைமை நீக்கிப்
            பின்இவண் இரங்கப் பெற்றனள் ஆதலின்
            அவளே புண்ணியம் உடையள்என் போரும்
 
              வலிகெழு நோன்தாள் வத்தவ மன்னன்குத்
            தருசகன் தங்கை தகைஏர் சாயல்
      180    பத்திப் பைம்பூண் பதுமா நங்கை
            தக்கனள் கொடுப்பின் மிக்கதுஎன் போரும்
 
              வேண்டி வந்த வேந்தனும் வீய்ந்தனன்
            ஈண்டுஇனி இவன்கே இயைந்த பால்வகை
            ஆதலும் உண்டுஅஃது அறிவோர் யாரென
      185    வாயின் மிகுத்து வலித்துரைப் போரும்
 
              பொன்அணி மார்பன் முன்னர் ஆற்றிய
            நன்னர்க்கு உதவும் பின்உப காரம்
            அலைதிரைப் பௌவம் ஆடை ஆகிய
            நிலம்முழுது கொடுப்பினும் நேரோ என்மரும்
      190    நகர மாக்கள் இவைபல பகர
            மாசில் செங்கோல் மகத மன்னனொடு
            கோயில்புக் கனனால் கோமகன் பொலிந்தென்.

(20.சங்கமன்னர் உடைந்தது முற்றிற்று)