21. மகள்கொடை வலித்தது

 

இதன்கண் உதயணமன்னன் பதுமாபதியைத் திருமணம் செய்துகோடற்கு உரிய வழிகளை ஆராய்தலும், தருசகன் கருதுதலும், தருசகன் அமைச்சனை உதயணன்பால் விடுத்தலும், ஒரு முதுமகள் பதுமாபதிக்கு அறிவித்தலும், பதுமாபதி தன்னுள் கருதுதலும், அமைச்சன் உதயணனைஅடைந்து தருசகன் கருத்தைத் தெரிவித்தலும், உதயணன் தன்னுள் எண்ணுதலும், அவன் வஞ்சகமாக மறுத்துரைத்தலும், அமைச்சன் வேண்டுகோளும்,  உதயணன் உடன்பாடும், அமைச்சன் தருசகன்பால் மீளலும், பிறவும் கூறப்படும்.
 
              கோயில் புக்கபின் ஆய்புகழ் உதயணன்
            கரந்த உருவொடு கலந்துஅகத்து ஒடுங்கிப்
            பிரிந்த பொழுதின் ஒருங்குஅவள்கு மொழிந்த
            அருந்தொழில் தெளிவும் அன்பும் என்றிவை
      5     பெரும்புணை யாக இருந்துஅகத்து உறையும்
            பொற்றொடிப் பணைத்தோண் முற்றிழை மாதரை
            இற்பெருங் கிழமையொடு கற்புக்கடம் பூட்ட
            வரையும் வாயில் தெரியுஞ் சூழ்ச்சியுள்
 
              ஈரைம் பதின்மரை இகல்கெட நூறி
      10     வீரம் மிக்க விறல்தறு கண்மைக்
            குருகுலத்து ஐவருள் ஒருவன் போலத்
            தனிப்படச் செய்கை தன்கண் தாங்கிய
            மணிப்பூண் மார்பன் வத்தவ மன்னனொடு
            சுற்றத் தார்எனுஞ் சொல்லுடை வேந்தர்
      15     முன்தவம் உடையர்என்று உற்ற உள்ளமொடு
            பகைகொள் மன்னரைப் பணித்துஅதற் கொண்டு
            தகைகொள் வேந்தன் தமரொடு சூழ்ந்து
            செங்கடை வேல்கண் வெள்வளைப் பணைத்தோள்
            தங்கையைப் புணர்க்குஞ் சிந்தையன் ஆகி
 
        20    உள்பொருள் வலிக்கும் உறுதிச் சூழ்ச்சியன்
            மல்லல் தானை மறப்பெரும் சீற்றத்துச்
            செல்பொறி செறித்த பல்புகழ் அமைச்சனை
            வள்ளிதழ் நறுந்தார் வத்தவர் கோமான்கு
            அங்கண் விட்டு மடுக்கற் பாலதுஊழ்
      25    இங்கண் இவனை எளிதுதரப் பெற்றும்
            கோல மங்கையைக் கொடாஅம் ஆகுதல்
            கால நோக்கில் கருமம் அன்றென
            வலித்ததை உணர்த்தி வருதி நீஎனத்
            தலைப்பெரு வேந்தன் தான்அவண் போக்க
 
        30    மந்திரம் அறிந்த தந்திர முதுமகள்
            செந்தளிர்க் கோதைக்குச் சேடநீட்டிப்
            பொலிக நங்கை பொருபடை அழித்த
            வலிகெழு நோன்தாள் வத்தவர் இறைவன்
            யானை வணக்கும் வீணை வித்தகன்
      35    துதைமலர்ப் பைந்தார் உதையண குமரற்கு
            நேர்ந்தனன் நின்னை நெடுந்தகை இன்றெனத்
            தீர்ந்த கோட்டியுள் தெரிந்தனள் உணர்த்தத்
 
              துப்புஉறழ் செவ்வாய் துளங்குபு நிரைத்த
            முத்துஉறழ் முறுவல் முகிழ்த்த முகத்தள்
      40    மந்திர நாவின் அந்தணன் கேண்மை
            இருநிலம் பேரினும் திரிதல் இன்றெனப்
            பெருநல மாதர் ஒருமை உள்ளமொடு
            வாழ்வது வலியாள் சூழ்வனள் இருப்ப
 
              அரும்பொருள் நாவின் அமைச்சன் சேதியர்
      45    பெரும்பெயர் அண்ணலைப் பொருந்துபு வணங்கிக்
            காவலன் கருதிய கட்டுரை உணர்தி
            பூஅலர் தாரோய் புனைகழல் நோன்தாள்
            எம்இறை மாற்றம் இசைப்பேன் யான்எனத்
            தன்அமர் தோழரொடு மன்னவன் கேட்பப்
 
        50    பயங்கெழு வையத்து உயர்ந்த தொல்சீர்
            விழுத்திணைப் பிறந்துதம் ஒழுக்கங் குன்றாப்
            போரடு மன்னர் புலம்பு முந்துறீஇ
            ஆரஞர் உழக்கல் அறிவெனப் படாது
            நீர்முதல் மண்ணகம் சுமந்த நிறைவலி
      55    தான்முழுது கலங்கித் தளரும் ஆயின்
            மலைமுதல் எல்லாம் நிலைதளர்ந்து ஒடுங்கும்
 
              அலகைப் பல்லுயிர்க்கு அச்சம் நீக்குநர்
            கவலை கொண்டுதம் காவலில் தளரின்
            உலகம் எல்லாம் நிலைதளர்ந்து அழியும்
 
        60    அற்றே அன்றிக் கொற்றக் கோமான்
            தானும் தனிமையொடு என்தலை வந்தனன்
            ஆனா வுவகையின் அமைந்தபுக ழுடையன்
            மேனாள் கொண்ட மிகுதுயர் நீக்கி
            மறுத்தல் செல்லாச் சிறப்பு முந்துறீஇ
      65    அற்றமில் நண்பின் யாப்பே அன்றியோர்
            சுற்றப் பந்தமும் வேண்டினேன் என்றனன்
            கொற்றவன் வலித்தது இற்றென உரைப்பச்
 
              செருஅடு குருசில் ஒருபகல் தானும்
            மறுமொழி கொடாஅன் மனத்தே நினைஇ
      70    நறுமலர்க் கோதையை நாள்பூங் காவினுள்
            கண்ணுறக் கண்டதுங் கரந்தகம் புக்கதும்
            திண்ணிதின் அறிந்தோர் தெரிந்துதனக்கு உரைப்ப
            ஆராய்ந்து அதனை அறிந்ததை ஒன்றுகொல்
            கருதி வந்த காவல குமரனும்
      75    பொருகளத்து அவிந்தனன் பொருள்இவற்கு ஈதல்
            பின்நன் றாகும் என்பதை நாடி
            நன்னர் நோக்கி நயந்ததை ஒன்றுகொல்
 
              கோல்வளைப் பணைத்தோள் கொடுங்குழைக் காதின்
            நீலத்து அன்ன நெறிஇருங் கூந்தலைப்
      80    பால்வகை புணர்க்கும் படிமை கொல்என
            இனையவை பிறவும் மனவயின் நினைஇ
            யான்குறை கொள்ளும் பொருளினை மற்றுஇவன்
            தான்குறை கோடல் தவத்தது விளைவென
            உவந்த உள்ளமொடு கரந்தனன் உரைக்கும்
 
        85    மண்ணகத்து இறைவன் மறமாச் சேனன்
            ஒண்ணுதல் பாவை ஒருபெருங் கிழத்தி
            மண்ணக வரைப்பின் மகளிர் மற்றுத்தன்
            வனப்பெடுத்து உரைக்கென வயங்குஅழல் குளிப்ப
            மனத்தெழு கவற்சியொடு மண்முதல் நீக்கி
      90    நயத்தகு மாதரொடு அமைச்சனை இழந்துஇனி
            வாழேன் என்று வலித்த நெஞ்சமொடு
            போகியது எல்லாம் பொய்யே போலும்
 
              இன்பம் எய்தலென் அன்புஅவட்கு ஒழிந்தனென்
            வாழ்ந்த காலை அல்லது யாவர்க்கும்
      95    ஆழ்ந்த காலை அன்பும் இல்லெனப்
            புறத்தோர் உரைக்கும் புன்சொல் கட்டுரை
            நிறத்துஏறு எஃகின் அனைய ஆதலின்
            ஒத்த நிலைமையேன் அல்லேன் ஒழிகென
            வத்தவர் கோமான் வஞ்சமொடு மறுப்ப
 
        100    மிக்க பெருங்குடிப் பிறந்த மாந்தர்க்கு
            ஒப்பின்று அம்மநின் உரையென வணங்கி
            மத்த யானை வணக்கும் நல்லியாழ்
            வித்தக வீரஅது பெற்றனென் யானென
            மறுத்து மந்திரி குறைக்கொண்டு இரப்பத்
 
        105    தெரிபொருள் கேள்வித் தெரிசக குமரன்
            தானும் நீயும் ஆகல் வேண்டலின்
            மாற்றும் மாற்றம் இல்லென மற்றவற்கு
            அருளொடு புணர்ந்த அன்புமிகு கட்டுரை
            பொருளொடு புணர்ந்தவை பொருந்தக் கூறலின்
 
 

      110    அமைப்பருங் கருமம் அமைத்தனன் யானென
            அமைச்சன் மீண்டனன் அகநனி புகன்றுஎன்.

(21.மகள்கொடை வலித்தது முற்றிற்று)