23. படைஎழுச்சி

 

இதன்கண் : பதுமாபதியைத் திருமணம் செய்துகொண்ட பின்னர் உதயணன் நிலைமையும், தருசகன் நினைதலும், தருசகன் உதயணனுடன் தன் அமைச்சரையும் படைகளையும் விடுதலும், தருசகன் கூறுதலும் அப்படையோடு உதயணன் தன்நகரத்திற்குப் போதலும் கூறப்படும்.
 
              கட்டில் ஏறிய காவல் வேந்தன்
            ஒட்டிய நண்பின் உருமண் ணுவாவினை
            விடுத்தல் வேண்டும் வல்லே விரைந்தெனத்
            தடுத்த பெரும்புகழ்த் தருசகன்கு உணர்த்தித்
      5     தெய்வமும் விழையும் மைதவழ் கோயிலுள்
            ஆடல் கண்டும் பாடல் கேட்டும்
            மிசைஉலகு எய்திய அசைவில் ஊக்கத்து
            அண்ணல் நெடுமுடி அமர்இறை போலப்
            பண்ணொலி அரவத்து உள்மகிழ்வு எய்திக்
      10     கழுமிய காதலொடு கவவுக் கைவிடாது
            ஒழுகுங் காலை நிகழ்பொருள் கூறுவேன்
 
              தம்முறு கருமந் தாம்சேர்ந் ததுஎனப்
            பின்னிது முடித்தல் பெருமை அன்றால்
            முன்உப காரத்து நன்னர் ஆற்றிய
      15     நட்பும் அன்றி நம்மொடு கலந்த
            சுற்றம் ஆதலின் சுடர்ப்பூண் உதயணன்
            அற்றம் எல்லாம் அறிந்தனம் ஆகிக்
            கொற்றநன் னாடு கொண்டனம் கொடுத்தல்
            கடன்நமக்கு அதுவென விடனுறு சூழ்ச்சியன்
 
        20    தாமே சென்று தம்வினை முடிக்கும்
            மாமாத் தியருள் மதிமீக் கூறிய
            பகைப்புலந் தேய்க்கும் படைத்திறல் தடக்கை
            வகைப்பொலி மான்தேர் வருட காரனும்
            வீர வென்றி விறல்வெந் துப்பின்
      25    தாரணி மார்பின் தார காரியும்
            செருமிகு சேனைச் செய்தொழில் நவின்ற
            பொருமாண் ஊக்கத்துத் தரும தத்தனும்
            பத்திப் பைம்பூண் சத்திய காயனொடு
            வேல்வருந் தானை நால்வரும் முதலா
 
        30    இருநூறு ஆனையும் இராயிரங் குதிரையும்
            அறுநூற்று இரட்டி அடல்மணித் தேரும்
            அறுபதின் ஆயிரர் எறிபடை மள்ளரும்
            திருமணிச் சிவிகையும் பொருவினைப் படாகையும்
            செங்கால் பாண்டியம் நன்று பூண்ட
      35    பைம்பொன் ஊர்தியும் பவழக் கட்டிலும்
            படாஅக் கொட்டிலும் பண்டிபண் டாரமும்
            கடாஅக் களியானைக் காவலற்கு இயைந்த
            பணைத்தோள் சிலசொல் பதுமா நங்கைக்கு
            அமைக்கப் பட்ட அகன்பரி யாளமும்
      40    அன்னவை எல்லாம் அந்நிலை நல்கி
 
              மன்ன குமரனொடு செல்கெனச் செப்பாச்
            செயற்படு கருமம் எல்லாம் மற்றவற்கு
            இயற்பட ஈவல்என்று அமைச்சரொடு கிளந்து
            வேறுவே றாகத் தேறக் காட்டி
      45    நினக்கே அவனை நிறுத்துதல் கடனென
 
              அவர்க்கே அவர்க்கே அருளுரை அளைஇ
            வடுத்தொழில் அகன்ற வருட கார
            உடற்றுநர்க் கடந்த உதயண குமரன்
            அடைக்கலம் நினக்கென வவன்வயின் கையடுத்து
      50    ஓம்படைக் கிளவி பாங்குறப் பயிற்றி
            நிலைமை அறிய நீட்டம் இன்றி
            மறைபுறப் படாமை மனத்தே அடக்கி
 
             ஒற்றொற் றியவரை யொற்றி னாய்ந்து
           முன்னங் கொள்ளு முபாய முயற்சியொடு
     55     நாவாய் தொகுத்து நளிபுனற் பேரியாற்
           றூர்மடி கங்கு னீர்நெறி போகி
           மலையர ணடுங்க நிலையர ணடுங்க
           ஒற்றி னானும் உபாயத் தானும் 
           ஆற்றல் சான்ற ஆருணி தொலைச்சிக்
     60    கோல்தொழில் கொற்றம் கொடுத்துநீர் பெயர்மின்என்று
           ஏற்றுரி முரசின் இறைமகன் பணித்த
 
 

           மாற்றம் எல்லாம் மனத்தகம் புகற்றக்
           கூற்றியல் தகையர் கொற்றம் ஆகென
           ஓங்கிய தோற்றத்து உதயணன் தழீஇச்
     65    செழுங்கோ சம்பிச் செம்முகம் முன்னி
           எழுந்தது மாதோ பெரும்படை இருள்என். 

(23.படைஎழுச்சி முற்றிற்று)