26. பாஞ்சாலராயன் போதரவு

 

இதன்கண் : ஆருணியால் வருடகாரனோடு மறைவாகச் செலுத்தப்பட்ட தூதுவர் நால்வரையும் வருடகாரன் அழைத்துப்  போய் ஒரு குகையின்கண் வைத்தலும், அவர் அறியாமல் அச்செய்தியை வருடகாரன் உதயணனுக்குக் கூறிவிடுதலும், உதயணன் தன் மறவர்களை விடுத்துப் பற்றிக்கொணர்வித்தலும், அவருள் சிலரைத் தீக்குழியில் தள்ளிக் கொல்வித்தலும், பின்னர் உதயணன் உட்பகைக்கஞ்சி வேறிடம் புகுபவன்போலத் தானிருந்த குரம்பையையும் கொளுத்திவிட்டுப் படையாளரோடும் அடிமைத் திரளோடும் ஒரு மலைஅரணை அடைதலும், வருடகாரன் பகைவர்பால் நடித்தலும், ஆருணியரசன் வருடகாரன் கூறியபடி தான் அரண்மனையைக் காவல் உத்திப் படையோடு போர்க்கெழுந்து நகர்ப்புறத்தே வருதலும், ஆருணியை வருடகாரன் காண்டலும் ஆருணி வருடகாரனுக்குச் சிறப்பு வழங்குதலும் கூறப்படும்.
 
              மறைந்தனர் வந்து மாற்றோன் தூதுவர்
            செறிந்த சூழ்ச்சியில் செய்வது கூறலும்
            உவந்த மனத்தன் ஊன்பால் படுவளை
            ஒடுங்கிநீர் இருக்கென ஒளித்தனன் வைத்துத்
      5     தார காரியைத் தரீஇ நீசென்று
 
              ஊர்கடல் தானை உதயணன் குறுகி
            எண்ணிய கருமம் எல்லாந் திண்ணிதின்
            திரிதல் இன்றி முடிந்தன அதனால்
            பரிதல் வேண்டா பகைவன் தூதுவன்
      10    சகுனி கௌசிகன் தன்னை அன்றியும்
            விசயவில் லாளரை விடுத்தனன் விரைந்தென்று
            ஓடினை சொல்லென நீடுதல் இன்றி
 
              வகைமிகு தானை வத்தவன் குறுகித்
            தகைமிகு சிறப்பில் தார காரி
      15    உணர்த்தா மாத்திரம் மனத்தகம் புகன்று
 
              பிங்கல சார மாணி முதலாப்
            பைங்கழல் மறவர் பதின்மரைக் கூஉய்
            ஆடியல் யானை ஆருணி தூதுவர்
            மாடியந் தானை வருட காரனொடு
      20    கூடிய வந்தனர் கொணர்மின் சென்றுஎன
 
              நிறைநீர் அகவயின் பிறழுங் கெண்டையைச்
            சிறுசிரல் எறியுஞ் செய்கை போல
            உறுபுகழ் உதயணன் தறுகண் மறவர்
            பற்றுபு கொண்டுதம் கொற்றவன் காட்ட
 
        25    இடவகன் கையுள் இருக்க இவரெனத்
            தடவரை மார்பன் தலைத்தாள் உய்ப்ப
 
              அந்தி கூர்ந்த அம்தண் மாலைச்
            செந்தீ ஈமம் செறியக் கூட்டி
            அகணி ஆகிய ஆய்பொருள் கேள்விச்
      30    சகுனி கௌசிகன் தன்னொடு மூவரை
            இடுமின் என்றவன் கடுகி உரைப்ப
            நொடிபல உரைத்து நோக்குதற்கு ஆகா
            அடல்எரி அகவயின் ஆர்த்தனர் இடுதலும்
 
              உள்ளுடைக் கடும்பகை உட்குதக்கு அன்றென
      35    நள்ளிருள் அகத்தே பொள்ளென உராஅய்
            இன்கண் பம்பை எரூஉக்குரல் உறீஇ
            இருந்த குரம்பை எரியுண எடுப்பிக்
            கருவியும் முரிமையுங் காப்புறத் தழீஇ
            அருவி மாமலை அரணென அடைதலின
 
        40    மறஞ்சால் பெரும்படை வருட காரனும்
            அறஞ்சால்க எண்ணிய தவப்பட் டதுஎனக்
            கைவிரல் பிசைந்து செய்வதை அறியான்
            வந்தோர் தெளிய நொந்தனன் நுவல
 
              உய்ந்தோர் ஓடி ஊரகங் குறுகிப்
      45    பைந்தார் வேந்தனைக் கண்டுகை கூப்பி
            அகலாது ஆகிய அரும்பெறல் சூழ்ச்சிச்
            சகுனி கௌசிகன் சார்ச்சியை முன்னே
            உதையணன் உணர்ந்து புதைவனர்த் தம்மெனத்
            தமர்களை ஏவலின் அவர்வந் தவரைக்
      50    கொண்டனர் செல்ல வண்டுஅலர் தாரோன்
            விடைப்பேர் அமைச்சனுழை விடுத்தலின் மற்றவன்
 
              கண்டவர் நடுங்கத் தண்டந் தூக்கி
            இன்னுயிர் தபுக்கஎன எரியகத்து இட்டதும்
            பின்னர் மற்றவன் பெருமலை அடுத்ததும்
      55    நம்மொடு புணர்ந்த நண்புடை யாளன்
            எம்மொடு போதந்து இப்பாற் பட்டதும்
            இன்னவை நிகழ்ந்தவென மன்னவன்கு உரைப்ப
 
              அயிர்த்தவன் அகன்றனன் ஆதலின் இவனொடு
            பயிர்ப்பினி வேண்டா பற்றுதல் நன்றெனப்
      60    பெயர்த்தவன் மாட்டுச் செயற்பொருள் என்னென
            அகத்தரண் நிறையப் பெரும்படை நிறீஇப்
            புறப்படப் போந்தென் புணர்க புணர்ந்தபின்
            செறப்படு மன்னனைச் சென்றனம் நெருக்குதும்
            என்றனன் விடுத்தலின் நன்றென விரும்பிக்
 
        65    கோயிலும் நகரமுங் காவலுள் நிறீஇக்
            காழார் எஃகமுதல் கைவயின் திரீஇயர்
            ஏழா யிரவர் எறிபடை யாளரும்
            ஆறா யிரவர் அடுகடு மறவரும்
            வீறார் தோன்றலொடு விளங்குமணிப் பொலிந்தன
      70    ஆயிரந் தேரும் அடர்பொன் ஓடையொடு
            சூழியில் பொலிந்தன பாழியில் பயின்றன
            ஐந்நூறு யானையும் அகில்நாறு அகற்சிய
            ஆர்க்குந் தாரொடு போர்ப்படை பொலிந்தன
            மிலைச்சர் ஏறித் தலைப்படைத் தருக்குவ
      75    ஒருபதின் ஆயிரம் விரைபரி மாவும்
            முன்ன ஆகத் தன்னொடு கொண்டு
 
              நாவாய்ப் பெருஞ்சிறை நீர்வாய்க் கோலிச்
            சாந்தார் மார்பில் சாயனுஞ் சாயாக்
            காந்தா ரகனும் கலக்கமில் பெரும்படைச்
      80    சுருங்காக் கடுந்திறல் சூர வரனெனும்
            பெரும்பேர் மறவனும் பிரம சேன்எனும்
            அரும்போர் அண்ணலும் அவர்முத லாகப்
            பெரும்படைத் தலைவரும் பிறருஞ் சூழப்
            பூரண குண்டலன் என்னும் அமைச்சனொடு
      85    ஆருணி அரசன் போதர அறிந்தபின்
 
              அடக்கருஞ் சீற்றத் ஆருணி கழலடி
            வடுத்தீர் வருடகன் வணங்கினன் காண
 
              எடுத்தனன் தழீஇ இன்னுரை அமிர்தம்
            கொடித்தேர்த் தானைக் கோமான் கூறி
      90    இருக்கென இருந்த பின்றை விருப்போடு
            ஆய்தார் மார்பன் நீர்வயின் நிரைத்த
            நாவாய் மிசையே மேவார் உருட்கப்
            பதினா றாயிரர் அடுதிறன் மறவரும்
            அதிராச் செலவின ஆயிரங் குதிரையும்
      95    முதிரா யானை முந்நூற்று அறுபதும்
            காணமும் வழங்கி நாள் தோறும்
 
              ஊனிடை அறாமை உணாத்தந் திடூஉம்
            சேனை வாணிகம் செறியக் காக்கென
 
 

            வல்வினைக் கடுந்தொழில் வருட காரன்
      100    செல்படைக்கு உபாயம் செறியக் கூறி
            மறுகரை மருங்கில் செறியப் போக்கிப்
            பாஞ்சால ராயனைப் பாங்குறக் கண்ணுற்று
            தாம்பால் கருமம் மாண்புறக் கூற
            அருஞ்சிறைத் தானை ஆருணி யரசனின்
      105    பெருஞ்சிறப்பு எய்தி இருந்தன இனிதென். 

(26.பாஞ்சாலராயன் போதரவு முற்றிற்று)