27. பறை விட்டது

 

இதன்கண் : கால்வல் இளைஞர் ஆருணிக்குக் கூறுதலும், வருடகாரன் செயலும், ஆருணியின் உட்கோளும், வருடகாரன் செயலும், உதயணன் செயலும், ஆருணியின் மனநிலையும், தீய நிமித்தங்கள் தோன்றுதலும் பூரண குண்டலன் கூற்றும், வருடகாரன் கூற்றும், ஆருணியின் செயலும், போர் நிகழ்ச்சியும், உதயணன் செயலும், ஆருணியின் செயலும், கடகபிங்கலர் செயலும், ஆருணியின் கூற்றும், உதயணன் செயலும், ஆருணியின் செயலும், உதயணன் செயலும், உதயணன் தருமதத்தன் ஆருணிஅரசனைக் கொல்லலும், உதயணன் செயலும், வருடகாரன் செயலும், நகரமாந்தர் கூறுதலும், யாவரும் நகர்புகுதலும் விரிவாகக் கூறப்படும்.
 
              பெருஞ்சிறப்பு எய்தியவன் இருந்த செவ்வியுள்
            வண்டார் தெரியல் வருட காரனின்
            பண்டே பயிர்குறிக் கொண்டுநன் கமைந்த
            கால்வல் இளையர் பூசல் வாயா
      5     வேல்வல் வேந்தன் விரும்புபு கேட்ப
            வடுவில் பெரும்புகழ் வத்தவன் மந்திரி
            இடவகன் பணியின் ஏழா யிரவர்
            சவரர் புளிஞரும் குவடுஉறை குறவரும்   
            குறுநில மன்னரும் நிறைவனர் ஈண்டி
      10     வஞ்ச காந்தையொடு கந்த வதிஎனும்
            குளிர்புனல் பேரியாறு கூடிய எல்லையுள்
            நளிபுனல் நாட்டகம் நடுங்கக் கவர்ந்துஆண்டு
            ஒளிதரும் இருக்கையின் ஒடுங்கினர் தாமெனப்
 
 

            பைந்தளிர்ப் படலைப் பாஞ்சால ராயற்கு
      15    வந்துகண் கூடிய வருட காரன்
            அருளிக் கேண்ம்எனத் தெருளக் கூறும்
            மாரிப் பெரும்புனல் வருவாய் அடைப்பின்
            ஏரிப் பெருங்குளம் நீர்நிறை இலவாம்
            அற்றே போலப் பற்றா மன்னற்குத்
      20    தலைவரும் பெரும்படை தொலைய நூறில்
            சுருக்கம் அல்லது பெருக்கம் இல்லை

 
              கல்லிடை இட்ட காட்டகம் கடந்து
            வெள்ளிடைப் புகுந்த வேட்டுவப் படையினை
            ஆட்டுதும் சென்றென அத்திசை மருங்கினும்
      25    வாள்படை வகுத்துச் சேண்படப் போக்கி
            மறுத்தும் உரைத்தனன் மன்னவன் கேட்ப
 
              வெறுத்த வேந்தனை வெற்பிடை முற்றி
            நாற்பெரும் படையும் நம்புறஞ் சூழ
            மேற்படை நெருங்கு காலை மாற்றவன்
      30    சில்படை யாளரொடு செல்படை இன்றிக்
            கூழ்பட அறுப்பப் பாழ்படப் பாய்ந்து
            பற்றிய படைஞரும் அப்பாற் படர்தர
            உற்றது செய்தல் உறுதி உடைத்தென
 
              இயற்கை யாக வென்தொழில் மாட்டுஇவன்
      35    முயற்சி உடைமையின் முடிக்குவன் தானெனப்
            பெயர்த்தும் மவற்கோர் பெருஞ்சிறப்பு இயற்றிச்
            சொல்லிய எல்லாம் நல்குவனன் ஆகித்
            தன்படை சிறிதே ஆயினும் இவன்படை
            என்படை என்னும் எண்ணம் உண்மையின்
      40    எழுதும் என்றவன் மொழியா மாத்திரம்
 
              கருதியது எல்லாங் கால்வல் இளையரின்
            உருவ வெண்குடை உதயணற்கு உணர்த்த்
 
              அடற்கரும் பெரும்படை அற்றப் படாமைப்
            படுப்பதோர் வாயில் பாங்குற நாடி
      45    வெம்பரி மான்தேர்த் தம்பியர்த் தழீஇ
            மதில்வடிவு ஆகிய மலைப்புடை மருங்கே
            அதிர்குரல் வேழமும் புரவியும் அடக்கி
            அவற்றுமுன் மருங்கே அகற்றுதற்கு அரிய
            ஒள்வாள் பெரும்படை உள்ளுற அடக்கி
      50    அப்படை மருங்கே அயில்படை நிறீஇத்
 
              தரும தத்தனைப் பெருமுகம் பெய்தவன்கு
            எருத்துப்புடை யாக இடவகன் கொளீஇயவன்
            உருத்தெழு பெரும்படைக் கோடுபுறம் காட்டிப்
            பவட்த்தொழு வாரியின் இடைப்படப் புகுத்தி
      55    உருள்படி போல வருட காரன்
            போக்கிடம் இன்றி யாப்புற அடைப்ப
 
              இருங்கணி காரன் எண்ண மாக
            வரம்பணி வாரியுள் வந்துடன் புகுந்த
            அருந்திறல் ஆருணி என்னும் யானையைப்
      60    படைக்கலப் பாரம் பற்பல சார்த்தி
            இடுக்கண் யாம்செய இயைந்தது இன்றென
            வாரிப் பெரும்படை மற்றவண் வகுத்து
            நேரா மன்னனை நீதியில் தரீஇப்
            போரில் கோடற்குப் புரிந்துபடை புதையா
      65    வார்கழல் நோன்றாள் வத்தவன் இருப்ப
 
 

            வாய்த்த சூழ்ச்சி வருட காரனொடு
            யாத்த நண்பினன் யானென ஆருணி
            மேற்சென்று அழித்தல் மேயினன் விரும்ப

 
              அந்தமில் ஆற்றல் அலவந்தியன் யானை
      70    வெந்திறல் நளகிரி தன்படி வாகும்
            மந்தரம் என்னும் மத்த யானை
            நீல நெடுவரை நெற்றித் தாகிய
            கோலக் கோங்கின் கொழுமலர் கடுப்புறு
            சூறைக் கடுவளி பாறப் பறந்தெனப்
      75    பட்டம் அடுத்த கொட்டையொடு பாறவும்
            உருமுறழ் முரசின் கண்கிழிந்து அதனொடு
            சக்கர நெடுங்கொடி அற்றன ஆகி
            இருநில மருங்கில் சிதைவன வீழவும்
            புள்ளும் நிமித்தமும் பொல்லா வாகி
 
        80    விள்ளா நண்பின் விறலோன் அமைச்சன்
            பூரண குண்டலன் தாரணி மார்ப
            பெயர்த்தும் நகரம் புகுதும் இந்நாள்
            அகைத்தது அறிந்தனை அருண்மதி நீயேன்று
            அடையார்க் கடந்து தடைபாடு அகற்றிய
      85    அறிந்துபடை விடுப்பது அன்னது பொருளெனச்
            செறிந்த தாகச் செப்பலில் சீறிக்
 
              கொள்ளார் அழிவினைக் கூறும் இவையென
            வள்ளிதழ் நறுந்தார் வருட காரன்
            ஊக்கங் கொளுவ ஆக்கங் கருதி
 
              ஊக்கங் கொளுவ ஆக்கங் கருதி
      90    ஆருணி யரசன் அடற்களிறு கடாஅய்க்
            காரணி முகிலிடைக் கதிரொளி கரந்து
            மங்கும் அருக்கனின் மழுங்குபு தோன்றச்
            சங்கமும் முரசுஞ் சமழ்த்தன இயம்பப்
            பொங்குநூல் படாகையொடு வெண்கொடி நுடங்க
      95    நிரந்த பெரும்படை பரந்தெழுந்து ஓடி
            மாற்றோன் இருந்த மலையகம் அடுத்துக்
 
              கூற்றாய் எடுத்த கோல விற்படை
            காற்றிசை மருங்கினுங் கார்த்துளி கடுப்பக்
            கடுங்கணை சிதறிக் கலந்துடன் தலைப்பெய
      100    நடுங்கினர் ஆகி உடைந்துபுறங் கொடுத்துப்
            பொறிப்படை புதைந்த குறிக்களம் புகலும்
            எண்திசை மருங்கினும் இயமரத் தொலியொடு
            விண்தோய் வெற்பொலி விரவுபு மயங்கி
            ஆர்ப்பிசை அரவமும் போர்க்களிற்று அதிர்ச்சியும்
      105    கார்க்கடல் ஒலியெனக் கலந்துடன் கூடித்
 
              திமிரம் பாய்ந்த அமர்மயங்கு அமயத்துச்
            சிலைத்தன தூசி மலைத்தன யானை
            ஆர்த்தனர் மறவர் தூர்த்தனர் பல்கணை
            விலங்கின ஒள்வாள் இலங்கின குந்தம்
      110    விட்டன தோமரம் பட்டன பாய்மாத்
            துணிந்தன தடக்கை குனிந்தன குஞ்சரம்
            அற்றன பைந்தலை இற்றன பல்கொடி
            சோர்ந்தன பல்குடர் வார்ந்தன குருதி
            குழிந்தது போர்க்களம் எழுந்தது செந்துகள்
      115    அழிந்தன பூழி விழுந்தனர் மேலோர்
 
              இப்படி நிகழ்ந்த காலை வெப்பமொடு
            பெரும்படைச் செற்றத்து இருங்கடன் மாந்திக்
            குஞ்சரக் கொண்மூக் குன்றுஅடைந்து குழீஇக்
            காலியல் இவுளிக் கடுவளி ஆட்ட
      120    வேலிடை மிடைந்து வாளிடை மின்னக்
            கணைத்துளி பொழிந்த கார்வரைச் சாரல்
            ஒருபெருஞ் சிறப்பின் உதயண குமரன்
            பொருபடை உருமில் பொங்குபு தொடரத்
 
              தாரணி மார்பன் ஆருணி யரசனும்
      125    காந்தா ரகனுங் கழற்கால் சாயனும்
            தேந்தார்ச் சூரனும் திறல்பம சேனனும்
            இந்நால் தலைவரும் எரிகான்று எதிர்ப்பச்
            செந்நே ராகச் செல்வுழி எதிரே
 
              காந்தா ரகனைக் கடக பிங்கலர்
      130    தேந்தார் மார்பம் திறப்ப வெய்ய
            ஆழ்ந்த அம்போடு அழிந்தனன் ஆகி
            வீழ்ந்தனன் அவனும் வீழ்ந்த பின்னர்
 
              பெய்கழல் ஆருணி பிறந்த நாளுள்
            செவ்வாய் விருச்சிகஞ் சென்றுமேல் நெருங்க
      135    ஆற்றல் சான்ற வடல்வேல் ஆருணி
            ஏற்றோர் யாவர் ஈண்டுவந்து எதிர்க்கெனச்
 
              சீற்றத் துப்பில் சேதியர் பெருமகன்
            கழலணி காலினன் கரண யாப்பினன்
            நிழலணி நல்வாள் அழல வீசித்
      140    தாங்கருங் காதல் தம்பியர் சூழப்
            பூங்கழல் தோழர் புடைபுடை ஆர்தர
            ஒன்னாப் பகையான் உதயணன் என்பேன்
            இன்னா மன்ன நின்னுயிர் உணீஇய
            வந்தனென் என்றே சென்றுமேல் நெருங்க்
 
        145    இடுகளி யானை எதிர்கண் டாங்குஉருத்து
            அடுதிறல் ஆருணி அவனுரை பொறாஅன்
            பன்மயிர் அணிந்த பத்திச் சேடகம்
            மின்னொளிர் வாளொடு பின்னவன் வாங்கக்
 
              காதி வெவ்வினை கடையறு காலைப்
      150    போதி பெற்ற புண்ணியன் போல
            வீதல் சான்ற வெகுளி முந்துறீஇ
            எதிர்த்த மன்னனைச் செயிர்த்தனன் தலைப்பெய்து
            யாவரும் வேண்டா இதன்பின்மற்று இவனை
            வீய நூறி வெஞ்சினந் தணிகென
      155    ஏயர் பெருமகன் எதிர்வது விரும்ப்
 
              வேற்று வேந்தனை வீழ நூறுதல்
            மாற்றாது எனக்கு மன்ன அருளெனக்
            கருமம் ஆதல் காரணங் காட்டித்
            தரும தத்தன் என்னுங் கடுந்திறல்
      160    அருமுரட் கலுழனின் ஆர்த்துமேல் ஓடிப்
            பொருமுரண் அழிக்கும் புனைபடை பயிற்றி
            இமைப்போர் காணா இகல்தொழில் திரிவொடு
            பலர்க்குப் பதமின்றிப் பாஞ்சால ராயனைத்
            தனக்குப் பதமாகத் தலைப்பெய்து ஏற்றலின்
 
        165    வார்கவுள் வேழமும் வசத்தது அன்றியவன்
            ஊர்வழிச் செல்லாது ஒல்குபு நிற்றரக்
            கூர்கெழு வச்சிரங் கொண்டு வானவன்
            கார்கெழு மாமலைக் கவின்அழித் ததுபோல்
            தாரணி மார்பன் யானையை வீழாக்
      170    கனல்சொரி மலையின் கவிய நூறித்
            தார்கெழு மார்புந் தலையுந் தகர
            முடிஅணி ஆரம் முத்துநிரை துளங்கத்
            தொடிஅணி திண்தோள் துணிந்துநிலஞ் சேரப்
            பணிவிலன் எறிதலின் படைக்கலஞ் சோரத்
 
        175    தறுகண் இமையான் தருக்கினொடு உறுதியேய்பு
            இறுமுனை மருங்கின் ஏடுபடத் திருகி
            மான்முதல் வகையின் நான்மறை யாளன்
            மழுவேறு உண்ட மன்னவன் போலக்
            கொழுநிணக் குருதியுள் குஞ்சரத் தோடும்
      180    அழிவுகொண்டு ஆருணி அவிந்தனன் வீழ்தலின்
 
               கொற்றம் பெற்றனன் குருகுலத்து இறையென
             வெற்றி முரசம் வேழம் ஏற்றி
             நகரினும் நாட்டினும் பகர்வனர் அறைகெனப்
             பின்னுரை போக்கி ன்னான் குறுகிப்
      185     படைத்தொழில் வதுவை நம்மாட்டு எய்த
             முடித்தனன் என்று சமழ்த்தனன் நோக்கி
             நடுக்கமில் வேந்தனை நாமும் முன்னின்று
             அடக்கற் பாலம்என்று யாழறி வித்தகன்
             அமரார் புகழத் தமரின் அடக்குவித்து
      190     ஈமம் ஏற்றியவன் உரிமைச் சனத்திற்கு
             ஏமம் ஈகென்று றிடவகன் போக்கி
 
               வரிகழழ் நோன்தாள் வருட காரன்
             இரியல் படையொடு இயைந்துஒருங்கு ஈண்டிக்
             கொடிக்கோ சம்பிக் கொற்ற வாயில்
      195     அடுத்தனன் குறுகி அஞ்சன்மின் யாவிரும்
             வடுத்தீர் பெரும்புகழ் வத்தவர் கோமான்
             படுத்தனன் கண்டீர் பாஞ்சால ராயனை
             அடைத்தனிர் வையாது அகற்றுமின் கதவென
 
               நகரத் தாளர் புகரறக் கூறுவர்
      200    தொல்வழி வந்தஎம் பெருமகன் எழுதிய
             வெல்பொறி ஓலை விடுத்தபின் அல்லது
             புகுதர விடோம்இந் நகர்வயின் யாமென
 
               உடன்அயிர்ப்பு இரிய உதயணன் மந்திரி
             இடவகன் வந்தமை இசைத்தலும் விரும்பிக்
      205    கொடியும் படாகையும் வடிவுபட உயரிச்
             செறிந்த கதவம் திறந்தனர் எதிர்கொள
 
               வென்றியொடு புக்கு நின்ற மறவருள்
             தலைவன் ஆகிய தொலைவில் விழுச்சீர்ப்
             பாடுசால் சிறப்பின் பாஞ்சால ராயன்
      210     கண்மணி அன்ன திண்அறி வாளன்
             கும்பன்என் போனை வெம்ப நூறி
 
 

             இன்று மற்றுஇங்கு இவன்தமர் உளரெனில்
             குன்றார் அவரைக் கோறும் நாமெனக்
             கழிப்புறு வெள்வாள் தெழித்தனர் உரீஇ
      215     ஒழுக்கஞ் சான்றோர் பிழைப்பிலர் ஓம்ப
             மலைத்தொகை அன்ன மாட வீதியுள்
             சிலைப்பொலி தடக்கைச் சேதியன் வாழ்கென
             அலைகடல் வையம் அறிய எங்கும்
             பிறைமருப்பு யானைப் பிணர்எருத்து ஏற்றிப்
      220    பறைவிட்டு அன்றால் பகைமுதல் அறுத்துஎன்.

27. பறை விட்டது முற்றிற்று

மூன்றாவது மகத காண்டம் முற்றுப் பெற்றது.