1. கொற்றம்கொண்டது

 

இதன்கண்: பகைவனைக் கொன்று வெற்றிப் பறைவிட்ட வத்தவ வேந்தன் உதயணன் வருடகாரன் முதலிய அமைச்சர்க்குச் சிறப்புச் செய்தலும், அவன் அரசுகட்டி ல் ஏறுதலும் கூறப்படும்.
 
              பகைமுதல் அறுத்துப் பைங்கழல் நோன்தாள்
            வகைமிகு மான்தேர் வத்தவர் கோமான்
            வருட காரன் பொருள்தெரி சூழ்ச்சி
            பொய்யாது முடித்தலின் மெய்உறத் தழீஇ
      5     ஏறிய யானையுந் தன்மெய்க் கலனும்
            கூறுபடல் இன்றிக் கொடுத்தனன் கூறி
            அறைபோம் இவனென ஆருணி உரைத்த
            குறையா விழுப்பொருள் அன்றே கொடுத்துத்
 
              தரும தத்தனைத் தோள்முதல் பற்றிப்
     10      பரும யானையொடு பாஞ்சால ராயனை
            வெங்களத்து அட்ட வென்றி இவையென
            நெய்த்தோர்ப் பட்டிகை ஆக வைத்துப்
            பத்தூர் கொள்கஎனப் பட்டிகை கொடுத்து
 
              நன்னாள் கொண்டு துன்னினர் சூழ
     15     வெங்கண் யானைமிசை வெண்குடை கவிப்பப்
            பொங்குமயிர்க் கவரி புடைபுடை வீசக்
            கங்கை நீத்தம் கடல்மடுத் தாங்குச்
            சங்கமும் துரமும் முரசினோடு இயம்ப
            மன்பெரு மூதூர் மாசனம் மகிழ்ந்து
     20     வாழ்த்தும் ஓசை மறுமொழி யார்க்கும்
            கேட்பதை அரிதாய்ச் சீர்த்தகச் சிறப்ப
 
              ஊழி தோறும் உலகுபுறங் காத்து
            வாழிய நெடுந்தகை எம்மிடர் தீர்க்கஎனக்
            கோபுரந் தோறும் பூமழை பொழியச்
     25     சேய்உயர் மாடத்து வாயில் புக்குத்
 
              தாம மார்பன் ஆருணி தன்னோடு
            ஈமம் ஏறா இயல்புடை அமைதியர்க்கு
            ஏமம் ஈத்த இயல்பினன் ஆகிக்
            கழிந்தோர்க்கு ஒத்த கடந்தலை கழிக்கென
     30     ஒழிந்தோர்க்கு எல்லாம் ஓம்படை சொல்லி
            வேறுஇடங் காட்டி ஆறுஅறிந்து ஓம்பி
 
              வியலக வரைப்பின் கேட்டோர் புகழ
            உயர்பெருந் தானை உதயண குமரன்
            அமைச்சினும் நண்பினும் குலத்தினும் அமைதியில்
     35     பெயர்த்துநிலை எய்திப் பேரும் தழீஇ
            முதற்பெருங் கோயில் முந்துதனக்கு இயற்றி
            மணிப்பூண் கண்ணியர் மரபறி மாந்தர்
            முட்டில் கோலமொடு கட்டில் படுப்ப
            நோற்றார் விழையும் நாற்பான் மருங்கினும்
     40     முழவொலிச் சும்மையொடு முரசம் கறங்க்
 
              விழவியல் சும்மையொடு வியன்நகர் துவன்றிக்
            குடியுங் குழுவும் அடியுறை செய்ய
            ஏவல் கேட்குங் காவலர் எல்லாம்
            பெருந்திறைச் செல்வமொடு ஒருங்குவந்து இறுப்பக்
     45     களம்படக் கடந்து கடும்புகை இன்றி
            வளம்படு தானை வத்தவர் பெருமகன்
            மாற்றார்த் தொலைத்த மகிழ்ச்சியொடு மறுத்தும்
            வீற்றுஇருந் தனனால் விளங்குஅவை இடைஎன்.
 

  
1. கொற்றங்கொண்டது முற்றிற்று.