16. விரிசிகை போத்தரவு

 

இதன்கண் : விரிசிகையின் தமர் அவளைக் கொணர்தலும், அவளைப் புனைதலும், அவளை ஓம்படை கூறி அவள் தமர் விடுத்தலும் கூறப்படும்
 
 

            நெருங்கிய பல்சனம் விரும்புபு நோக்க
            ஒள்ளிழை மாதரைப் பள்ளியுள் நின்று
            திருவமர் சிவிகையுள் சுமந்தனர் கொணர்ந்து
            பெருநகர் நெடுமதில் புறமருங்கு இயன்ற
     5      தேவ குலத்தொரு காவினுள் இரீஇ

 
              வேரியுந் தகரமும் விரையும் உரிஞ்சி
            ஆர்கலி நறுநீர் மேவர ஆட்டித்
            துய்யறத் திரண்டு தூறலும் இலவாய்
            நெய்தோய்த்து அன்ன நிறத்த ஆகிக்
     10      கருமையில் கவினிப் பருமையில் தீர்ந்த
            சில்லென் கூந்தலை மெல்லென வாரிக்
            கானக் காழ்அகில் தேன்நெய் தோய்த்து
            நறுந்தண் கொடிப்புகை அறிந்தளந் தூட்டி
            வடித்து வனப்பிரீஇ முடித்ததன் பின்னர்த்
 
       15      தளிரினும் போதினும் ஒளிபெறத் தொடுத்த
            சேடுறு தாமம் சிறந்தோன் சூட்டிய
            வாடுறு பிணையலொடு வகைபெற வளாஅய்க்
            குளிர்கொள் சாதிச் சந்தனக் கொழுங்குறைப்
            பளிதம் பெய்த பருப்பின் தேய்வையின்
     20     ஆகமும் முலையுந் தோளும் அணிபெறத்
            தாரையுங் கொடியுந் தகைபெற வாங்கி
 
              இருந்தாள் இளம்பனை விரிந்திடை விடாஅ
            முளைநுகும்பு ஓலை முதல்ஈர்க்கு விரித்துத்
            தளைஅவிழ் ஆம்பல் தாஅள் வாட்டி
     25     நீல நெடுமயிர் எறியுங் கருவிக்
            காலென வடிந்த காதணி பெறீஇச்
            சில்லென் அரும்பு வல்லிதின் அமைத்து
            நச்சரவு எயிற்றின் நல்லோன் புனைந்த
            நெற்சிறு தாலி நிரல்கிடந்து இலங்கக்
     30     கடைந்துசெறித் தன்ன கழுத்துமுதல் கொளீஇ
 
              உடைந்துவேய் உகுத்த ஒண்முத்து ஒருகாழ்
            அடைந்துவில் இமைப்ப அணிபெறப் பூட்டிக்
            கல்லுண் கலிங்கம் நீக்கிக் காவலன்
            இல்லின் மகளிர் ஏந்துவனர் ஈத்த
     35     கோடி நுண்துகில் கோலம் ஆக
            அவ்வரி அரவின் பையெனப் பரந்த
            செல்வ அல்குல் தீட்டிவைத் ததுபோல்
            வல்லிதின் வகைபெற உடீஇப் பல்லோர்
 
              வல்லிதின் வகைபெற உடீஇப் பல்லோர்
            காணச் சேறல் ஆற்றா மகள்கு
     40     நாண்உத் தரீகந் தாங்கிக் கையுளோர்
            நீள்நீர் நறுமலர் நெரித்துக் கொடுத்து
            மலரினும் புகையினும் மாத்தொழில் கழிப்பி
 
              உரையினும் ஓத்தினும் உவப்பக் கூறிய
            சாங்கிய மடமகள் தலையாச் சென்ற
     45     காஞ்சுகி மாந்தர்க்கு ஓம்படை கூறி
            அடுத்த காதல் தாயர் தவ்வையர்
            வடுத்தீர் தந்தை வத்தவர் கோவென
            விடுத்தனர் மாதோ விரிசிகை தமர்என்.