3. இயக்கன் போனது

 

இதன்கண் : இயக்கன் கூறுதலும், உதயணன் கூறுதலும் அதற்கு அவன் கூறுதலும், பிடியின் வரலாறும், பத்திராபதி யானைப்பிறப்பை விரும்பலும், அவள் குபேரன்முன் செல்லுதலும், பத்திராபதி சாபவிடை வேண்டுதலும், குபேரன் சாபவிடையும்,  பத்திராபதி பழைய உருப்பெற்றுக் குபேரனைஅடைந்து வணங்குதலும், குபேரன் சௌதருமேந்திரனை ஏத்தலும், சௌதருமேந்திரன் சோதவனுக்குக் கட்டளை இடுதலும், அவனை விடுத்தலும், சௌதருமேந்திரன் சோதவனை விடுத்தலும், சோதவன் பத்திரையை உதயணன் பால் விடுத்தலும், பத்திராபதியின் நன்றி அறிவும், இயக்கன் பத்திராபதியை நினைக்கும்படி கூறலும், அவன் ஒரு மந்திரத்தைச் செவியறிவுறுத்தலும், அவன் செல்லுதலும் கூறப்படும்.
 
 

              இயக்கன் அவ்வழி இழிந்தனன் தோன்றி
              மயக்கம் தீர்த்த மாசறு நண்பின்
              அலகை ஆகிய அரச குமரனை
              உலகுப சாரத் துறைமுறை கழித்துக்

 
       5       கிளையின் மன்னர் கேளிர் சூழத்
              தளைஅகப் பட்ட காலையும் தளைஅவிழ்
              வண்ணக் கோதை வாசவ தத்தையொடு
              பண்ணமை பிடிமிசைப் படைநரும் ஒழியத்
              தனியே போந்தோர் கனிகவர் கானத்துக்
   10         கூட்டிடைப் பட்ட கோட்புலி போல
             வேட்டிடைப் பட்ட வெவ்வப் பொழுதினும்
 
 

             அருந்திறல் அமைச்சன் அறிவின் நாடித்
             திருந்திழை அல்குல் தேவியைப் பிரிப்ப
             வருந்திய நெஞ்சமொடு மகத நன்னாட்டு
   15        அரசுஇகந்து அடர்த்த ஆறா வெகுளித்
             தருசகன் தங்கையைத் தலைப்பட்டு எய்திய
             துயரக் காலத்துத் தொன்னகர் எய்திய
             பகைகொண் மன்னனைப் பணித்த பொழுதினும்

 
               துயரந் தீர்க்குந் தோழனென்று என்னைப்
   20        பெயராக் கழலோய் பேணாய் ஆகி
             ஒன்றிய செல்வமொடு உறுகண் இல்லா
             இன்று நினைத்தது என்னெனப் படுமென
             வெஞ்சின வீரனை நெஞ்சுறக் கழறப்
 
               பட்டவை எல்லாம்..................எங்களின்
   25        மாறடு வேலோய் மற்றவை தீர்தலின்
             எம்மில் தீரா இடர்வரின் அல்லதை
             நின்னை நினைத்தல் நீர்மைத்து அன்றென
             உள்ளியது இல்லென உள்ளங் குளிர்ப்பத்
             தகுவன நாடி முகமன் கூறி
 
     30        அம்சொல் மழலை அவந்திகை என்னுநின்
             நெஞ்சமர் தோழி நிலைமை கேண்மதி
             மிசைச்செல அசாஅ விழும வெந்நோய்
             தலைச்செலத் தானும் தன்மனத்து அடக்கி
             ஏறாக் கருமம் இதுவென எண்ணிக்
   35        கூறாள் மறைப்ப ஊறுஅவள் நாடி
             உற்றியான் வினவ இற்றென இசைத்தனள்            
 
               மற்றியாந் தீர்க்கும் மதுகை அறியேம்
             நயந்த நண்பின் நன்னர் நோக்கி்
             உடைஅழி காலை உதவிய கைபோல்
   40        நடலை தீர்த்தல் நண்பனது இயல்பென
             உரத்தகை யாள உள்ளினேன் என்னத்
             திருத்தகு மார்வன் திறவதின் கிளப்பத்
 
               தாரணி மார்ப காரணம் கேண்மதி
             மெச்சார்க் கடந்த மீளி மொய்ம்பின்
   45        விச்சா தரர்உறை உலகம் விழையும்
             திருமக னாநின் பெருமனைக் கிழத்தி
             வயிற்றுஅகத்து உறைந்த நயப்புறு புதல்வன்
             அன்னன் ஆகுதல் திண்ணிதின் நாடி
            மெய்ப்பொருள் தெரியும் மிடைதார் மன்னவ
   50       பொய்ப்பொருள் நீங்கிய இப்பொருள் கேண்மதி
            உள்ளிய அசாஅஃது ஒளியின்று கிளப்பின்       
 
              மஞ்சுசூழ் நெடுவரை விஞ்சத்து அடவித்
            திருமலர் கெழீஇய தெள்நீர்ப் படுவின்
            நருமதைப் பெயர்யாற்று ஒருகரை மருங்கின்
   55       எண்ணரும் பருப்பதம் என்னும் மலைமிசை
            ஒண்நிதிக் கிழவன் உரிமையொடு இருந்துழிக்
 
              கண்அணங் குறூஉம் காரிகை நீர்மைப்
            பத்திரை மேனகை திலோத்தமை ஒருத்தி
            பத்திரா பதியோடு உருப்பசி அரம்பைமுதல்
   60       பாடகம் சுமந்த சேடுபடு சேவடி
            நாடக மகளிர் நாலிரு பதின்மருள்
            பல்வளைப் பணைத்தோள் பத்திரா பதிஎனும்
            மெல்லியல் தன்னை வேந்தன் விடுக்கஅப்
 
              பணியொடு சென்று பனிமலர் பொதுளிய
   65       ஆலங் கானத்து ஆற்றயல் மருங்கின்
            இணரும் தளிரும் இருஞ்சினைப் போதும்
            பிணர்படு தடக்கையில் பிறவும் ஏந்தி
            ஒண்ணுதல் இரும்பிடி ஒன்றே போலக்
            கண்அயல் கடாஅத்துக் களிவண்டு ஓப்ப
 
      70      மாறுதனக்கு இன்றி மறமீக் கூரி
           ஆறுதனக்கு அரணா அணிநலம் நுகர்ந்து
            மருப்பிடைத் தாழ்ந்த பருப்புடைத் தடக்கை
            செருக்குடை மடப்பிடி சிறுபுறத்து அசைஇ
            நறுமலர் நாகத் தூழ்முதிர் வல்லிப்
    75      பொறிமலர் கும்பம் புதைய உதிர
            அஞ்சாப் பைங்கண்ஓர் வெஞ்சின வேழம்
            எழுவகை மகளிர் இன்பம் எய்தி
            அகமகிழ்ந் தாடும் அண்ணல் போல
            நின்ற இன்ப நேயங் காணா
 
      80      விழுநிதிக் கிழவன் விழையும் காதலின்
            நாடக மகளிர் நலத்தொடு புணர்ந்த
            பாடகச் சீறடிப் பத்தி ராபதி
            தான மகளிரொடு தண்புனல் யாற்றுஅயல்
            கானத்து ஆடிக் கடவா நின்றோள்
   85       ஊழலர்ச் சோலைஊடு வந்துவிளை யாடும்
            வேழப் பிறவும் விழைதக்கு அதுவென
            உள்ளம் பிறழ்ந்ததை உள்ளகத்து அடக்கி
 
 

            வள்ளிதழ் நறுந்தார் வச்சிர வண்ணன்
            அடிநிழல் குறுகிய காலை மற்றென்
   90       மனத்ததை இயைகென நினைத்தனள் செல்லா

 
              பிடிஎழில் நயந்து பெயர்ந்தனள் இவளென
            ஒன்றிய உறுநோய் ஓதியின் நோக்கிச்
            செயிர்த்த உள்ளமொடு தெய்வ இன்பம்
            பொறுத்தல் செல்லாது வெறுத்தனை போன்மென
 
      95       வேழம் நினைஇ வேட்கை மீதூர்ந்து
             ஊழ்வினை வகையின் உடம்பிட்டு ஏகி
             நன்றியில் விலங்கின் பிறவி நயந்துநீ
             கானஞ் செய்தது காரண மாக
             மலைக்கணத் தன்ன மாசில் யானையுள்
   100       இலக்கணம் அமைந்ததோர் இளம்பிடியாகிப்
             பிறந்த பின்றைச் சிறந்துநீ நயந்த
             வேக யானையொடு விழைந்துவிளை யாடிப்
             போகம் நுகர்கெனப் போற்றான் ஆகிச்
             சாவம் மற்றவன் இடுதலுஞ் சார்ந்து
 
     105       தேவ வாய்மொழி திரியாது ஆகலின்
             நீடுபெறல் அரிதா நெடுங்கை விலங்கின்
             வீடுபெறல் யாதென விளங்கிழை வினவ
 
 

             அண்ணல் நல்தாள் அவந்தியர் கோமான்
             பண்ணமை வாரியுள் பண்ணுப் பிடியாப்
   110        பற்றப் படுதி பட்ட பின்னாள்
             அலகை ஆகிய ஐம்பெருங் குலத்துக்
             கொலைகெழு செவ்வேல் குருகுலக் குருசில்
             உலகம் புகழும் உதயண குமரனைப்
             பிறைமருப் பியானைப் பிரச்சோ தனன்தமர்
   115        சிறைகொளப் பட்டுச் செல்லா நின்றுழி

 
                மண்ணமை நெடுந்தோள் மறமாச் சேனன்குப்
              பண்ணமை பிடியாய் நீயும் அவற்றுள்
              யானை வித்தகர் தானத்தின் வடிப்ப
              நடையொடு நவின்ற காலை அவ்வழிப்
   120         படையுடை வேந்தன் பனிநீர் விழவினுள்
              குடைகெழு வேந்தன் குருகுலக் குருசில்
              ஒண்நறுந் தெரியல் லுதயணன் ஏறப்
              பண்ணிச் செல்க பத்திரா பதியென
 
                வீர வேந்தன் விளங்கிழைக் குறுமகள்
   125         வார்வளைப் பணைத்தோள் வாசவ தத்தையை
              ஆர்வ உள்ளத்து அவனுடன் ஏற்றி
              ஊரப் படுநீ ஓரிருள் எல்லையுள்
              உலப்பரும் நீளதர் தலைச்செல ஓடிக்
              கால கூடம் என்னும் வெந்நோய்
   130        சாலவும் பெருக மேன்மேல் நெருங்கி
              விலக்குவரை நில்லாது வெம்பசி நலிய
              வீழ்ந்த காலை மேயவன் அத்தலை   
 
                ஆய்ந்த உள்ளமொடு சேர்ந்தனன் ஆகி
              அஞ்சாது ஐம்பதம் நினைமதி நீயென
   135        எஞ்சா தவணீ இயல்பினில் திரியாது
              சிந்தையொடு முடிந்தது காரண மாக
              ஊனமை விலங்கின் உடம்பவண் ஒழிய
 
               ஈனமில் யாக்கையோடு இவ்வழி வந்துநின்
             முன்னைப் பேரொடு பெண்ணுருவு எய்தி
   140        இத்துணை வாழ்தியென்று உரைக்கப் பட்ட
             அன்ன தன்மையோஇ இறந்த ஆயிழை
 
              மன்னருள் மன்னன் நின்னருள் நிகர்க்கும்
            மாற்றுப காரம் மனத்திண் எண்ணி
            நிச்ச நிரப்பின் நிலமிசை உறைநர்க்கு
   145       எச்சம் பெறுதல் இன்பம் ஆதலின்
            மற்றது முடிக்கும் முயற்சியோடு உற்றதன்
            வளநிதிக் கிழவனை வாழ்த்துவனள் வணங்கி
            அளவில் இன்பத்து ஆடலில் பணிந்து
            பெருவரம் பாகிய பொருவில் செல்வவோர்
   150       சிறுவரம் வேண்டுவென் திரியாது ஈமென
 
 

            நிவந்த அன்பின் உவந்தது கூறெனக்
            விழ்ந்த சென்னியள் கைவிரல் கூப்பி
            வன்கண் உள்ளத்து மன்னர்க்கு ஒவ்வா
            அங்கவன் உள்ளமோடு டருண்முந்து உறீஇ
   155       என்குறை முடித்தேன் இனியென் னாது
             துன்புறு கிளவியின் தொன்னலம் அழுங்கத்
             திருமலர் நெடுங்கண் டெண்பனி உறைத்தந்து
             அருமணி ஆகத்து அகலம் நனைப்ப
             எவ்வ உள்ளமோடு இரத்தல் ஆற்றான் 

 
     160        தைவந் தளித்துத் தக்கது செய்தோய்
             படர்கூர் யாக்கையுள் பற்று விட்டகன்று
             இடர்தீர்ந்து இனியை ஆகவென் குறையெனக்
             கடவது கழித்த காவலன் தனக்கோர்
             மறுவில் சிறப்பின்ஓர் மகனை வேண்டுவேன்
   165       பெறுதற்கு ஒத்த பிழைப்பிலன் ஆயினும்
             அறாஅ அருநிதிக் கிழவன் அதனை
             மறாஅது அருளென மடமொழி உரைப்பப்
             பெரிதவன் உணர்ந்து பெற்றனை நீஎனச்
 
               சொரிதரு விசும்பில் சோதமன் குறுகிப்
   170        பாத்தில் பெருமைப் பரதன் முதலாச்
             சேய்த்தின் வந்தநின் குலமும் செப்பமும்
             வைத்த காட்சியும் வல்லிதின் கூறிச்
             சிதைவில் செந்நெறி சேர்ந்துபின் திரியா
             உதையண குமரன்கு உவகையின் தோன்றுமோர்
   175        சிறுவன் வேண்டுமது சிறந்ததென்று ஏத்தப
 
 

             பின்னை மற்றவன் மன்னிய வேட்கையொடு
             விச்சை எய்தி வெள்ளிஅம் பெருமலை
             அச்சமில் ஆழிகொண்டு அரசுவீற்று இருத்தற்கு
             நச்சி நோற்றவோர் கச்சமில் கடுந்தவச்
   180        சோதவன் என்னும் இருடி உலகத்துத்
             தேவ யாக்கையொடு போகம் எய்திய
             நிதான வகையின் நினைத்தினிது இருந்தனன்

 
               நாவலம் தண்பொழில் நலத்தொடு தோன்றிப்
             பாவம் நீக்கிய பரதன் பிறந்த
   185       ஆய்பெருந் தொல்குடித் தோன்றி இப்பால்
             மாசில் விஞ்சையர் மலைஅகந் தழீஇ
             ஆழி உருட்டி என்வயின் வரூஉம்
             ஊழி இதுவென உணரக் கூறி
 
 

              ஆய வெள்ளத்து அவனை அழைத்தே
   190        குறையா இருந்தவக் கிழவனை நோக்கி
              மன்னிய வத்தவன் தேவி வயிற்றுள்
              துன்னினை படுநாள் இன்னது ஆதலின்
              ................................................

 
                ......................நூலவன் உரைப்ப
              மேலையம் பாற்கடல் வெள்ளேறு கிடந்த
   195        வாலிதழ் நறுமலர் வைகறை யாமத்துக்
             கனவின் மற்றவன் கையில் கொடுத்து
             வினையின் எதிர்பொருள் விளங்கக் காட்டென
             இந்திரன் விடுத்த காலை வந்தவன்
             பைந்தளிர்க் கோதைப் பத்திரைக்கு அளிப்ப
 
     200       ஒள்அரி மழைக்கண் தேவியை உள்ளிநீ
             பள்ளி கொண்டுழிப் பரிவுகை அகல
             வெள்ளிய நறும்பூத் தந்தனள் விளங்கிழை
             ஆர்வ உள்ளம் உடையோர் கேண்மை
             தீர்வதன்று அம்ம தேர்ந்துணர் வோர்க்கே
 
     205       ஆயினும் அக்குறை முடித்தல் ஆற்றுவென்
             தானவள் தந்தனள் தளிரியல் ஆதலின்
             இதுவும் நன்னயஞ் சிறிதென அதனைத்
             தான்வெளிப் படாஅள் இன்னும் நுனக்கோர்
             வான்வெளிப் படூஉம் வாரி விழுப்பொருள்
   210        தருதல் வேட்கை ஒருதலை உடையள்     
 
               ஆனாக் கடுந்திறல் அண்ணல் அதனால்
             மேனாள் கிழமை விண்ணவர் மகளை
             மனத்தின் உள்ளி மந்திரம் கூறி
             நினைத்த பொழுதின் நின்முனர்த் தோன்றும்
   215        தோன்றிய பின்னர்த் தோன்றலைத் தந்த
             மகனது வரவும் முறைமையின் உணர்த்துநீ
             அகனமர்ந்து உரைத்த வயாஅ அரும்பொருள்
             இற்றென உரைத்தலும் முற்றிழை தீர்க்கும்
             மற்றிது முடியாது ஆயின் மறித்தும்
   220       வருவல் யானென ஒருபதங் கொடுத்துக்
 
               குறிகொள் மாற்றங் கொள்ளக் கூறிச்
             சென்றியான் வருவல் செம்மல் போற்றெனக்
             குன்றா நன்மொழி ஒன்றல பயிற்றிக் 
 
 

             கடிகமழ் மார்ப கவலல் என்று
   225        தொடியுடைத் தடக்கையின் தோழனைப் புல்லிப்
             பசும்பொன் பல்கலம் பல்லூழ் இமைப்ப
             விசும்பின் மின்என மறைந்தனன் விரைந்துஎன்.

               3. இயக்கன் போனது முற்றிற்று