8. மதனமஞ்சிகை வதுவை

 

இதன்கண் : யூகி உதயணனுக்குக் கூறலும், உதயணன் செயலும், நரவாணதத்தனுடைய இளமைப் பருவமும், நரவாணதத்தனது காளைப்பருவமும், கணிகையர் இயல்பும், கலிங்கசேனையும், மதனமஞ்சிகை பந்தாடுகையில் பந்து கீழே விழுதலும், நரவாணதத்தன் உலா வரலும், நரவாணதத்தன் மதனமஞ்சிகையைக் கண்டு விரும்பலும், நரவாணதத்தன் கோமுகனை வினாதலும், கோமுகன் மதனமஞ்சிகையின் உருவத்தை எழுதுவதும், கோமுகன் மதனமஞ்சிகை வீடு சென்று பரிசங் காட்டலும், பரத்தையர் செயலும், கோமுகன் கூறலும், உதயணன் மதனமஞ்சிகைக்குப் பொன் விடுத்தலும் நரவாணதத்தன் மணமும் கூறப்படும்.
 
 

             நலம்பெறு நகரம் புக்கனன் ஆகி
             நிலம்பெறு திருவின் நெடுமுடி அண்ணலைக்
             கண்டுகண் கூடிக் கழலுறப் பணிந்து
             மண்டமர்க் கடந்த மறமாச் சேனன்
   5         உள்ளத்து அன்ன உவகைசெய் தனவும்
             வள்ளல் தனமும் வகுத்தனன் கூறி

 
 

             அவந்தி நாடும் அணியுஞ் சேனையும்
             இயைந்து முந்துறீஇ இருபால் குலனும்
             தெம்முன் இழியாத் தெளிவிடை யாகச்
   10        செம்மையின் செய்த செறிவும் திண்மையும்
             நம்பிக்கு ஈத்த நன்புகழ் நாடும்
             இன்னவை என்று பன்முறை பயிற்றி

 
 

             நாட்டு வாயுளுங் காட்டு வாயுளும்
             கரத்தல் இன்றிப் பரத்தல் நன்றெனத்
   15        தாமுடை நாடும் நகரமும் தரீஇ
             வாய்முறை வந்த வழக்கியல் வழாமை
             ஏட்டுமிசை எற்றி இயல்பினின் யாப்புறுத்து
             ஆற்றல் சான்ற அரும்பெறல் சுற்றமொடு்
             கூற்றமும் விழையக் கோல்இனிது ஓச்சிக்

 
 

   20        கோட்டம் இன்றிக் குடிபுறங் காத்து
             வாள்தொழில் தானை வத்தவர் பெருமகன்
             அன்புடைத் தோழரோடு இன்புற்று ஒழுகச்
             சிறந்த திருவொடு செல்வம் பெருகப்
             பிறந்த நம்பி திறங்கிளந்து உரைப்பேன்

 
 

   25        குலக்குவிளக் காகத் தோன்றிக் கோலமொடு
             நலத்தகு சிறப்பின் நல்லோர் நாப்பண்
             இலக்கணம் பொறித்த வனப்புடை யாக்கையன்
             விசும்பிற்கு அவாவும் வேட்கையன் ஆகிப்
             பசும்பொன் பல்படை இலங்குங் கழுத்தினன்
   30        திருஆ ணாய தேங்கமழ் மார்பன்
             நரவாண தத்தன் நள்தொறும் நந்தி

 
 

             உலம்பொரு மார்பின் உதயண குமரன்
             நலம்பெறு தோழர் நால்வரும் பெற்ற
             வலம்பெறு சிறப்பின் வனப்பொடு புணர்ந்த
   35        நலம்பெறு கோமுகன் நாம வரிசிகன்
             தகைமிகு பூதி தவந்தகன் என்னும்
             நன்னர் அமைந்த நால்வருஞ் சூழத்      

 
 

             தளர்நடைக் காலத்து இளமை இகந்து
             நல்ஆ சாரமொடு நல்லோர் காட்ட
   40        நற்பொருள் ஞானம் நவின்றுதுறை போகி
             விற்பொருள் நன்னூல் விதியின் நுனித்துப்
             படைக்கலக் கரணம் பல்வகை பயிற்றிக்
             கொடைக்கடம் பூண்ட கொள்கைய னாகிக்

 
              குறைவில் செல்வமொடு குமார காலம்
   45       நிறையுற உய்த்து நீர்மையின் வழாஅ
            ஏமஞ் சான்ற இந்நில வரைப்பின்
            காமன் இவனெனக் கண்டோர் காமுறத்
            தாளுந் தோளுந் தருக்கி நாளும்
            நடவா நின்ற காலை மடனார்ந்து
உரை
 
 

   50       ஈற்று மந்தி இற்றெழு பூங்கொடி
            புற்புல முதிரக நல்துற விக்கே
            போல்வர் என்னுஞ் சால்வுடை ஒழுக்கிற்
            கலைதுறை போகிய கணிகா சாரத்துப்
            பலதுறை பயின்று பல்லுரைக் கேள்வியொடு
   55       படிவம் குறிக்கும் பாவனை மேற்கொண்டு
            அடிமையிற் பொலிந்த வகன்பரி யாளத்துத்
            தலைக்கோல் சிறப்பின் அலத்தகு மகளிர்
            ஆயிரத்து இரட்டி ஐந்நூற் றுவர்களுள்
            காசில் சிறப்பிற் கலிங்க சேனையென்று
   60       ஓசை போகிய ஒளியின ளாகிய
            மாசில் கற்பின் மடமொழி மடமகள்

 
 

            வானோர் உலகின் அல்லது மற்றவட்கு
            ஈனோர் உலகின் இணைதான் இல்லெனக்
            கண்டோர் ஆயினுங் கேட்டோர் ஆயினும்
   65       தண்டாது புகழுந் தன்மையள் ஆகித்
            துதைபூங் கோதை சுமத்தல் ஆற்றா
            மதர்மான் நோக்கின் மாதர்அம் சாயல்
            பதரில் பணிமொழிப் பணைத்தோள் சின்னுதல்
            மதர்வை நோக்கின் மதனமஞ் சிகைதன்
   70       மலைபுரை மாடத்து உயர்நிலை மருங்கின்
            அணிச்சா லேகத்து அணித்தகு துளையூடு
            எறிபந்து இழுக்குபு விழுதலின் நோக்கிச்

 
 

            செறிவளைத் தோளி செம்முக மாக
            வேகத் தானை வேந்தன் ஒருமகன்
   75       போகுகொடி வீதியில் புகுந்துபலர் ஏத்த
            அருவரை மருங்கின் அருவி போல
            இருகவுள் மருங்கினுஞ் சொரிதரு கடாத்ததோர்
            இடுமணி யானை எருத்தம் ஏறிப்
            படுமுகில் மீமிசைப் பனிமதி போல
   80       உலாஎனப் போந்தோன் நிலாவுறழ் பூந்துகில்
            தானைப் படுதலின் தானே கொண்டுஇஃது
            இட்டோள் ஆர்கொஎன்று எட்டி நோக்கினன்

 
 

            நிறைமதி வாள்முகத்து உறழ்வன போல
            நீளரி ஒழுகி நிகர்தமக் கில்லா
   85       வாள்புரை தடங்கண் வளைத்தவள் வாங்கி
            நெஞ்சகம் படுப்ப வெஞ்சின வீரன்
            அறியா மையின் மறுகுறு சிந்தையன்
            பந்துவலி யாகப் பைஎனப் போகியோர்
            அந்தண் காவினுள் அசைந்தனன் இருந்து

 
 

   90       கொய்ம்மலர்ப் படலைக் கோமுகன் கூஉய்க்
            கைபுனை வனப்பில் கணிகையர் சேரியில்
            செய்பந்து ஈதுடைச் சேயிழை மாதரை
            ஐய மின்றி அறிதி யாயின்
            மெய்பெற உரையென மேயினன் வினவக்

 
 

   95      கையில் கொண்டோன் கண்டனன் அதன்மிசை
            ஒற்றிய ஒற்றைத் தெற்றெனத் தெரிந்து
            நறுவெண் சாந்தம் பூசிய கையால்
            செறிவுறப் பிடித்தலின் செறிவிரல் நிரைவடுக்
            கிடந்தமை நோக்கி உடங்குணர் வெய்தி

 
 

   100       விரலும் விரலிற்கு ஏற்ற அங்கையும்
            அங்கைக் கேற்ற பைந்தொடி முன்கையும்
            முன்கைக் கேற்ற நன்கமை தோளும்
            தோளிற் கேற்ற வாளொளி முகமும்
            மாப்படு வடுஉறழ் மலர்நெடுங் கண்ணும்
   105       துப்பன வாயும் முத்தொளி முறுவலும்
            ஒழுகுகொடி மூக்கும் எழுதுநுண் புருவமும்
           சேடமை செவியும் சில்லிருங் கூந்தலும்
           ஒல்குமயிர் ஒழுக்கும் அல்குல் பரப்பும்
           மருங்கின் நீளமும் நிறங்கிளர் சேவடித்
   110       தன்மையும் எல்லாம் முன்முறை நூலின்
            அளந்தனன் போல வளம்பட எழுதிப்

 
 

           பாவை இலக்கணம் பற்றி மற்றதன்
           நிறமும் நீளமும் பிறவுந் தெரியாச்
           செறிதாள் அண்ணலைச் செவ்வியின் வணங்கி
   115       இதன்வடி ஒப்போள் இந்நகர் வரைப்பின்
           மதன மஞ்சிகை ஆகுமென வலித்துப்

 
 

            பந்துகைக் கொண்டு மைந்தன் போகிக்
            காழார் வனமுலைக் கணிகையர் சேரித்
            தோழன் உள்ளத்து ஆழ்நனி கலக்கிய
   120       மாதர் மனைவயின் தூதுவன் ஆகிப்
           பல்கால் சென்று மெல்லெனச் சேர்ந்து
           குறிப்புடை வெந்நோய் நெறிப்பட நாடிய
           பாசிழை நன்கலம் பரிய மாக
           மாசில்பந்து அறிவு படமேல் வைத்தாண்டு
   125       ஈன்ற தாய்முதல் தோன்றக் காட்டிப்

 
 

           பட்டது கூறலின் ஒட்டிய உவகையள்
           வழிபடு தெய்வம் வரந்தரு கின்றென
           மொழிவன ளாக முகத்தின் விரும்பித்
           தாயுந் தவ்வையுந் தம்மொடு பயின்ற
  130       ஆய்வளை மகளிரும் நிகழ்ந்ததை அறிந்து
           சீரின மதித்துச் சிற்றினம் ஒரீஇப்
           பேரினத்து அவரொடு பெருங்கிளை பிரியாத்
           தலைக்கோல் மகளிர் தன்மை கூறிக்

 
 

           கற்கெழு கானவன் கைக்கோல் உமிழ்ந்த
  135       எற்படு சிறுதீ எழுச்சியில் காமம்
           மிகுமனத்து உவகையின் ஒல்லை விருப்பம்
           முறையின் முறையின் முறுக மூட்டிக்
           கொடித்தேர்க் கோமான் குறிப்பின் அல்லதை
           அடித்தியை அருளுதல் யாப்பின்று எமக்கெனப்
  140       படிற்றுரை மகளிர் பரிய மறுப்ப

 
 

           இருங்கண் வையகத்து ஏந்தலும் உரியன்
           மருந்தேர் கிளவி மதனமஞ் சிகைதன்
           காமரு நோக்கங் காணக் கூடும்
           ஏம வைகல் இயல்வதாம் எனினென 

 
 

  145      அன்றுகை நில்லாது சென்ற உள்ளமொடு
           பகல்மதி போலப் பசந்த குமரன்
           இகல்மிசை உள்ளத்து எவ்வங் கேட்டுத்
           தலைப்பெருந் தேவியுந் தந்தையுங் கூடிக்
           குலப்பெருந் தேவியாக் கோடி விழுநிதி
  150       சிறப்பின்விட் டிருந்து நலத்தகு கிழமைக்கு
           யாவரும் உரியோர் இவளின் இல்லெனக்
           காவல் வேந்தன் காணங் காண்டலின

 
 

           உறாஅர் போல உற்ற காதலொடு
           மறாஅர் மாதர் வதுவை வலித்தபின்
  155       மதிபுரை முகத்தியை மன்னவன் ஒருமகன்
           வதுவைச் செல்வமொடு வான்றோய் வியன்நகர்
           விதியின் எய்தி விழவு முந்துறீஇப்
           பதனறிந்து நுகருமால் பண்புமிகச் செறிந்துஎன்.         

             8.மதன மஞ்சிகை வதுவை முற்றிற்று