(விளக்கம்) பாகராற்
கைவிடப்பட்டு வெறிகோள் பண்ணி உழலும் யானை என்க. பண்ணியும் என்புழி
உம்மை இசைநிறை. பெயர்த்தவன்: உதயணன். பெயர்த்தவன் அரசவை விடுத்துப்
போகிப் பிணிக்கெனக் (கூறி) இழிதந்து அகம் புக்கனன் என
இயைக்க. வெறிகோள் - வெறிகொண்டு கொலைசெய்தல். கலி - ஆரவாரம். இஃது
உதயணனைக் கண்டுழி மாந்தர் மகிழ்ச்சியாலெடுத்த ஆரவாரம். ஆவணம் -
அங்காடித்தெரு. கைதொழுதல் - நன்றி யுணர்வினை உணர்த்தல். அரைமதி இரும்பு
- தோட்டி, கரீஇ - கருவி. வேணு - மூங்கில். தானம் - கூடம். தகை -
அழகு. ஆல், அசை. விடுத்தென் என்புழி னகரவீற்றான் முடிவது காண்க.
இவ்வாறே இந்நூலின் ஒவ்வொரு காதையும் னகரவீற்றான் முடிவதும்
காண்க. இஃது இயைபு என்னும் வனப்பாகும். இதுபற்றிப் பேராசிரியர், தொல்
- செய்யுளியல் 236 ஆம் சூத்திரவுரை விளக்கத்தே 'இயைவு என்றதனானே
பொருளும் இயைந்து சொல்லும் இயைந்து வரும் என்பது கருத்து; சீத்தலைச்
சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும் கொங்கு வேளிராற் செய்யப்பட்ட
தொடர்நிலைச் செய்யுளும் போல்வன; அவை னகர வீற்றான் இற்றன' என்று
கூறுதலும் உணர்க.
32. கரடு பெயர்த்தது முற்றிற்று.
|