உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
           சந்தன வேலிச் சண்பகத் திடையதோர்
          வேங்கையொடு தொடுத்த விளையாட் சேற்
          றூங்குபு மறலு முழைச்சிறு சிலதியர்
     25   பாடற் பாணியொ டளைஇப் பல்பொறி
          ஆடியன் மஞ்ஞை யகவ வயலதோர்
          வெயில்கண் போழாப் பயில்பூம் பொதும்பிற்
          சிதர்தொழிற் றும்பியொடு மதர்வண்டு மருட்ட
          மாத ரிருங்குயின் மணிநிறப் பேடை
     30   காதற் சேவலைக் கண்டுகண் களித்துத்
          தளிப்பூங் கொம்பர் விளிப்பது நோக்கியும
 
        22 - 31: சந்தன...........நோக்கியும்
 
(பொழிப்புரை) பின்னர் அயலேயுள்ள சந்தன மரங்களையே வேலியாகக் கொண்டுள்ள சண்பகப்பூம் பொழிலிற் புகுந்து ஆங்குக் குற்றேவல் மகளிர் வேங்கை மரத்தின்கண் தொடுத்த விளையாட்டு ஊசலின்கண் ஏறி அசைந்தாடி ஒருவரோடொருவர் மாறுபட்டுப் பாடும் ஊசற்பாட்டின் தாளத்திற்கேற்பப் பலவாகிய புள்ளிகளை யுடைய கூத்தாடும் இயல்புடைய மயில் ஆடா நிற்பவும், அயலிடத்தே வெயில் தானும் ஊடுருவிச் செல்லற்கியலாமல் தழைத்த விளையாடற்கியன்றதோர் அழகிய இளமரச் சோலையின்கண் பூந்துகளைக் கிண்டிசிந்துந் தொழிலையுடைய ஆண் வண்டினை மதர்த்த பெண் வண்டு இசை முரன்று மருள்வியா நிற்பவும் காதலையும் நீலமணி போன்ற நிறத்தையும் உடைய கருங்குயிற் பேடையொன்று தன் காதற்றுணையாகிய சேவலைத் தூரத்தே கண்டு கண் களித்துத் தானிருக்கும் தேன்றுளிக்கும் மலர்க் கொம்பிற்கு வருமாறு அதனைக் கூவி அழைப்பவும் அவற்றை நிரலே நோக்கியும் என்க.
 
(விளக்கம்) ஊசலிலே தூங்கி என்க. உழைச்சிறு சிலதியர் - பக்கத்திருந்து சிறுபணிகளைச் செய்யும் மகளிர். சிலதியர் - குற்றேவன் மகளிர். பாடற்பாணி - பாடற்குரிய தாளம். அகவ - ஆட. பயில்பூம் பொதும்பு - பயிலும் இளமரக்கா. பயிலுதல் - ஆடுதல். தும்பி - ஆண்வண்டு. வண்டு - பெண்வண்டென்க. மாதர் - காதல். கொம்பர்க்கு வருமாறு விளிப்பதும் என்க.