உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
           பானிறச் சேவல் பாளையிற் பொதிந்தெனக்
          கோண்மடற் கமுகின் குறிவயிற் காணாது
          பவழச் செங்காற் பன்மயி ரெருத்திற்
     35   கவர்குர லன்னங் கலங்கல் கண்டும்
          தனித்துளங் கவல்வோன் றான்வீழ் மாதர்
          மணிக்கேழ் மாமை மனத்தின் றலைஇப்
          புள்ளுப்புலம் புறுக்க வுள்ளுபு நினைஇ
          மன்றனா றொருசிறை நின்ற பாணியுட்
 
        32 - 39: பானிற..........பாணியுள்
 
(பொழிப்புரை) பவழம் போன்று சிவந்த காலையும் பலவாகிய மயிரையுடைய எருத்தினையும் கவர்தலையுடைய குரலையும் உடைய பெடை யன்னம் தன் காதற்றுணையாகிய பால்போலும் நிறமுடைய சேவலானது காய்களையுடைய மடலையுடைய கமுகமரமாகிய அக்குறியிடத்தே அதன் பாளையால் மறைக்கப்பட்டுக் காணப்படாமையால் உளங்கலங்கா நிற்றலைக் கண்டும், தனியே நின்று உள்ளங் கவலையுறா நின்ற உதயணகுமரன் தன்னாற் பெரிதும் விரும்பப்பட்ட வாசவதத்தையினது மணிபோன்ற நிறமுடைய மாமை நிறம் தன்னெஞ்சத்தே நன்கு பதிந்து இடையறாது வருத்தாநிற்பவே மேலும் மேற்கூறிய பறவைகளின் செயலும் தன்னுடைய பிரிவாற்றாமையை மிகுவியா நிற்ப மேன் மேலும் அவளையே நினைந்து திருமணப்பந்தர் போன்று பல்வேறு நறுமணமும் விரவிக் கமழாநின்ற ஓரிடத்தே நின்ற காலத்தே. யென்க.
 
(விளக்கம்) பாளை - கமுகம்பாளை. சேவல் ஈண்டு அன்னச்சேவல். கோள் - காய். குறி - தாங்கூடுதற்குக் குறித்தவிடம். கவர் குரல் - வினைத் தொகை. அன்னம் - பெடையன்னமென்க, மாதர் - வாசவதத்தை. அலைஇ - அலைத்து; அலைப்ப எனத் திரித்துக் கொள்க. புள்குயின் முதலிய மேற்கூறிய பறவைகள். அவைகளும் தந்துணையிற் பிரிந்து கலங்குதல் இவன் தனிமைத் துன்பத்தை மிகுவித்தன என்றவாறு. பாணி - காலம். கதிரவன் மறைதல்)