உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
           சுடர்வெண் ணிலவின் றொழிற்பயன் கொண்ட
          மிசைநீண் முற்றத் தசைவளி போழ
          விதானித்துப் படுத்த வெண்கா லமளிச்
          சேக்கை மகளிர் செஞ்சாந்து புலர்த்தும்
     65   தேக்க ணகிற்புகை திசைதொறுங் கமழக்
          கன்றுகண் காணா முன்றிற் போகாப்
          பூத்தின் யாக்கைமோ..................
          ................குரால் வேண்டக் கொண்ட
          சுரைபொழி தீம்பா னுரைதெளித் தாற்றிச்
     70   சுடர்பொன் வள்ளத்து மடல்விரற் றாங்கி
          மதலை மாடத்து மாண்குழை மகளிர்
          புதல்வரை மருட்டும் பொய்ந்நொடி பகரவும
 
                 (மகளிர் செயல்)
              61 - 72: சுடர்.........பகரவும்
 
(பொழிப்புரை) அப்பொழுது ஒளியுடைய வெண்ணிலவின் செயலால் வரும் இன்பத்தை நுகர்தற் கிடனான மேனிலை மாடத்துள்ள நிலா முற்றத்தின்கண் இயங்குகின்ற தென்றல் ஊடுருவித் தவழா நிற்ப, மேற்கட்டியிட்டுக் கீழே இடப்பட்ட வெள்ளிய யானை மருப்பாலாய கால்களையுடைய கட்டிலின் மேல் விரித்த படுக்கையிடத்தாராகிய இளமகளிர், தாம் பூசியுள்ள செஞ்சாந்தினைப் புலர்த்தும் பொருட்டு எழுப்பப்பட்ட தேனைத் தன்னிடத்தே கொண்ட அகிலினது புகை நாற்றிசையினும் பரவிக் கமழாநிற்பவும், குவளைமலரை மேய்ந்த கொழுவிய உடலை யுடைய குராற் பசு முற்றத்திடத்தே சென்று தனது கன்றினைக் கண்டு...........சுரந்து சுரையினின்று பொழிந்த தீம்பாலினைக் (கலத்திலேற்று) அதன் நுரையடங்கச் செய்து ஒளியுடைய பொன் வள்ளத்தே மலரிதழ் போன்ற தம் விரலிலே ஏந்திக் கொண்டு மாண்புடைய குழையணிந்த மகளிர் கொடுங்கையுடைய மாடத்திலேறி நின்று தம் புதல்வரை மருட்டித் தம் வழிப் படுத்துதற்குப் பொய்யேயாகிய நொடிப் பேச்சினைப் பேசா நிற்பவும் என்க.
 
(விளக்கம்) பயன் - இன்பம். மிசை - மேனிலைமாடம், முற்றம் - நிலா முற்றம். "நிலவுப் பயன் கொள்ளும் நெடுநிலா முற்றம்" (சிலப் - 4.31) என்றார் இளங்கோவும். விதானித்து - மேற்கட்டி கட்டி. வெண்கால் - வெள்ளிய காலையுடைய கட்டில். அமளி - படுக்கை. குரால் - குராற்பசு. சுரை - மடி. மடல் - மலரிதழ். பொய்யாகிய நொடி என்க. மகவு வாய்மை என்றே நினைக்கும்படி ''நிலவே நிலவே வா! வருகுவையாயின் நினக்கும் பால் தருகுவன்'' என அழைப்பது போலும் மொழி என்க.