உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
           இல்லெழு முல்லையொடு மல்லிகை மயங்கிப்
          பெருமணங் கமழவும் பிடகைப் பெய்த
     75   வதுவைச் சூட்டணி வண்டுவாய் திறப்பவும்
          பித்திகக் கோதை செப்புவாய் மலரவும்
          அறவோர் பள்ளி யந்திச் சங்கமும்
          மறவோன் சேனை வேழச் சங்கமும்
          புதுக்கோள் யானை பிணிப்போர் கதமும்
     80   மதுக்கோண் மாந்த ரெடுத்த வார்ப்பும்
          மழைக்கட லொலியின் மயங்கிய மறுகின்
          விளக்கொளி பரந்த வெறிகமழ் கூலத்துக்
          ஒளிறுவே லிளையர் தேர்நீ றளைஇக்
     85   களிறுகா லுதைத்த புஞ்சப் பூழியொடு
          மான்றுக ளவிய மதுப்பலி தூவவும்
          தெற்றி முதுமரத் துச்சிச் சேக்கும்
          து.........க.........ரக் குரலளைஇச்
          சேக்கை நல்லியாழ் செவ்வழி பண்ணிச்
     90   செறிவிரற் பாணியி னறிவரப் பாடவும்
          அகினா றங்கை சிவப்ப நல்லோர்
          உள்ளிழு துறீஇய வொள்ளடர்ப் பாண்டிற்
          றிரிதலைக் கொளீஇ யெரிதரு மாலை
 
           (மாலைக்காலத்துப் பிறநிகழ்ச்சிகள்)
              73 - 94: இல்லெழு............மாலை
 
(பொழிப்புரை) இல்லத்துத் தோட்டத்தின்கண் வளர்ந்த முல்லையும் மல்லிகையும் ஒருசேர மலர்ந்து மிக்க நறுமணங் கமழாநிற்பவும், பூந்தட்டிலிட்டு, வைத்த திருமண மாலைகள் வண்டுகள் கிண்டுதலாலே மலரா நிற்பவும், செப்பின்கண் இட்டு வைத்த பிச்சிப் பூமாலை மலரா நிற்பவும், துறவறத்தோர் பள்ளியின்கண் அந்திப் பொழுதில் ஊதும் சங்குகளும், மறமாச்சேனனுடைய படையின்கண் யானைகளின் பொருட்டு ஊதப்படும் சங்குகளும் புதுவதாகப் பிடிக்கப்பட்ட யானைகளை அடக்கிக் கட்டும் பாகரின் உரப் பொலியும், கள்ளுண்ட மாக்கள் எடுத்த ஆரவாரமும், விரவி மழை பெய்துழிக் கடலின்கண் எழுகின்ற பேரொலி போன்று ஆரவாரிக்கின்ற விளக்கின் ஒளிகள் பரவிய கடைத் தெருவின்கண், அணிகலக் கடைகளின் கதவுகளை அடைத்து நறுமணங் கமழும் மலர்க் கடைக் கதவுகளைத் திறவாநிற்பவும், விளங்குகின்ற வேன்மறவரும் தேர்களும் இயங்குதலானே உண்டான புழுதியோடு கலந்த யானைகள் காலானுதைத்தலானுண்டான திரளான புழுதியும் குதிரைகள் பாய்தலானுண்டான துகளும் அவிந்தடங்குமாறு கள்ளாகிய பலியைத் தூவா நிற்பவும், மேடையாற் சூழப்பட்ட முதிய மரத்தின் உச்சியின்கண் வதியும்..........குரலோடு விரவும்படி மகளிர் தம் படுக்கையின்கண் நல்ல யாழைப் பண்ணுறுத்திச் செவ்வழிப் பண்ணைச் செறிந்த விரலாலே அளக்கப்படும் தாளத்தோடு இனந்தெரியும்படி பாடாநிற்பவும், அகின்மணங் கமழுகின்ற அழகிய கை சிவக்கும்படி மகளிர் வெள்ளிய துகிலிற் கிழித்த துணியின் பஞ்சாகிய நுனியை நெருடி அகத்திலே நெய்வார்க்கப்பட்ட ஒள்ளிய பொன் தகட்டாலாய பாண்டில் என்னும் விளக்கின்கண் திரியாகயிட்டு ஏற்றப்பட்டு எரியாநின்ற அந்த மாலையின்கண் என்க.
 
(விளக்கம்) பிடகை - பூந்தட்டு. பித்திகைக் கோதை - பிச்சிப் பூமாலை. செப்பு - மலரிடும் செப்பு. மலர்களையும் மாலைகளையும் செப்பினுள் வைத்தல் பழைய வழக்கம். இதனை, ''மடைமாண் செப்பிற்றமிய வைகிய பொய்யாப்பூவின்'' எனவும் (குறுந் - 9) ''வகைவரிச் செப்பினுள் வைகிய கோதையேம்'' எனவும் (கலி - 68.) வரும் பிற சான்றோர் மொழிகளானு முணர்க. மறவோன் என்றது பிரச்சோதன மன்னனை. வேழச்சங்கம் - யானைக்காக முழக்கும் சங்கம்; யானைக் கூட்டத்தின் முழக்கம் எனினுமாம். கதம் - சினம். சினந்து கூறும் ஒலிக்கு ஆகுபெயர். கூலம் - கடைத்தெரு. கூலத்து மறுகின் எனவும் வெறிகமழ் மலர்க்கடை எனவும் இயைத்துக் கொள்க. இளையரானும் தேரானும் உண்டாய நீறு என்க. புஞ்சம் - திரள். பூழி - புழுதி. மான் - குதிரை. 88-ஆம் வரியிற் சில சொற்களழிந்தன. செவ்வழி - மாலைப் பொழுதிற்குரிய பண். விரற்பாணி - விரலான் அளக்குந் தாளம். நிமிடி - நெருடி. இழுது - நெய். பாண்டில் - ஒருவகை விளக்கு.