உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
         
     110   உண்டெனக் கேட்டோர் கண்டினித் தெளிகெனத்
          திருவின் செய்யோ ளுருவமெய்த் தோன்றத்
          தீட்டிரும் பலகையிற் றிருத்தித் தேவர்
          காட்டி வைத்ததோர் கட்டளை போலக்
          கலன்பிற வணிந்து காண்போர் தண்டா
     115   நலந்துறை போகிய நனிநா ணொடுக்கத்து
          மணிமுகிழ்த் தன்ன மாதர் மென்முலைத்
          தணிமுத் தொருகாழ் தாழ்ந்த வாகத
 
        (உதயணன் வாசவதத்தையை நினைத்து நெஞ்சழிதல்)
          110 - 117: உண்டென..........ஆகத்து
 
(பொழிப்புரை) நூலோர் திருவுடைமைக்குத் தெய்வமாகச் சிவந்த நிறமுடைய திருமகள் என்னுமொரு தெய்வம் உண்டு என்று கூறுதலைச் செவியான் மட்டும் கேட்டுணர்ந்த மாந்தர் இனி அத்தெய்வத்தின் உருவத்தைத் தங்கண்ணாலும் கண்டு தெளிவாராக என்று தேவர் அவளுருவம் உண்மையாகத் தோன்றும்படி ஓவியப் பலகையிலே எழுதித் திருத்தி உலகத்தவர்க்குக் காட்டி வைக்கப்பட்ட ஓர் எடுத்துக் காட்டுருவம் போன்று விளங்கி அவ்வழகிற்கும் அழகு செய்யும் அணிகலன்களையும் வேறு அணிந்துகொண்டு தன்னைக் கண்போர் கண்டு கண்டமையாமைக்குக் காரணமான பெண்மை நலத்தானும் மிக்கு, மிக்க நாணத்தாலுண்டான அடக்கத்தோடே மணியே முலையாக உருக்கொண்டாற் போன்ற அழகிய மெல்லிய முலைகளையும் குளிர்ந்த ஒற்றைவடமாகிய முத்துமாலை தூங்கா நின்ற மார்பகத்தையும் என்க.
 
(விளக்கம்) தேவர் கேட்டோர் கண்டு தெளிக எனப் பலகையில் செய்யோள் உருவம் மெய்யாகத் தோன்றத் திருத்திக் காட்டி வைத்த கட்டளைபோன்று என இயைத்து விளங்கி என ஒரு சொல் வருவித்துரைக்க. விளங்கி அணிந்து ஒடுக்கத்தையும் முலையினையும் ஆகத் தினையும் முகத்தினையும் நுதலையும் காட்டி (121) கரந்த கள்வி தன் காரிகை (325) என முடித்துக் கொள்க.திருவின் செய்யோள் - திருவின் தெய்வமாகிய செய்யோள் என்க. மெய்த்தோன்ற - மெய்யாகத் தோன்றும்படி. தீட்டிரும் பலகை - ஓவியந்தீட்டும் பெரிய பலகை. கட்டளை - எடுத்துக்காட்டாகச் செய்த உருவம். தண்டா - (கண்டுகண்டு) அமையாத. நலம் - பெண்மை நலம். அதன்கண் துறைபோதலாவது - தலைசிறப்ப மிகுதல். தணி முத்து - குளிர்ந்த முத்து, ஒருகாழ் - ஒற்றைவடம். ஆகம் - மார்பு.