உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
           உள்ளகத் தெழுதரு மருளின ளாகித்
     145   தெளிதல் செல்லா டிண்ணிறை யழிந்து
          பொறியறு பாவையி னறிவறக் கலங்கிக்
          காம னென்னு நாமத்தை மறைத்து
          வத்தவ னென்னு நற்பெயர் கொளீஇப்
          பிறைக்கோட் டியானை பிணிப்பது மன்றி
     150   நிறைத்தாழ் பறித்தென் னெஞ்சகம் புகுந்து
          கள்வன் கொண்ட வுள்ள மின்னும்
          பெறுவென் கொல்லென மறுவந்து மயங்கித்
          தீயுறு வெண்ணெயி னுருகு நெஞ்சமொடு
          மறைந்தவ ணின்ற மாதரை
 
                   (இதுவுமது)
            144 - 154 உள்ளகத்து....... ....மாதரை
 
(பொழிப்புரை) உள்ளத்தினின்றும் தோன்றா நின்ற மயக்கத்தையுடையளாகிச் சிறிதும் தெளிவு பெறாதவளாய்த் தனது திண்ணிய நிறையழியப்பட்டு இயங்கும் பொறி அறுந்துபோன பாவை போன்று செயலற்று அறிவு துவர நீங்கிப் போதலானே பெரிதும் கலங்கி "காமவேள் தான் தனது பெயரை மறைத்து உதயண குமரன் என்னும் கேட்டற் கினியதொரு பெயரையும் புனைந்து மதங் கொண்ட பிறை போன்ற மருப்பினையுடைய களிற்றுயானையைத் தனது இசையாலே வயப்படுத்தியதுமன்றி என் கண்வழி என் மனமாகிய கருவூலத்தின்கண் நிறையென்னும் தாழ்க்கோலை முறித்தொழித்து உள் நுழைந்து அரும்பொருளாகிய என் உள்ளத்தையும் கொள்ளை கொண்டான்; இங்ஙனம் அக்கள்வன் கவர்ந்துகொண்ட என் உள்ளத்தை இன்னுமொருகால் யான் என்னுடையதாக மீட்டுக் கொள்ளவல்லேனோ? மாட்டேனோ?" என்று சுழன்று மயங்கித் தீயிற் பெய்த வெண்ணெய்போல நெஞ்சம் உருகிப் பிறர் அறியா வகை அவ்விடத்தே மறைந்து நின்றாளாக; அங்ஙனம் நிற்கும் வாசவதத்தையை, என்க.
 
(விளக்கம்) தெளிதல்செல்லாள், ஒரு சொல். பொறி - இயந்திரம். நிறையாகிய தாழ்க்கோலை என்க. கள்வன் - உதயணன். "நெஞ்சிறை கொளீஇய நிறையமை நெடுந்தாழ் வெந்தொழிற் காம வேட்கை திறப்ப'' எனப் பிறாண்டும் (3 - 6: 56 - 7) கூறுவர். மாதரை - வாசவதத்தையை.