உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
         
     160  இணையி லொருசிறைக் கணையுளங் கிழிப்பத்
          தனித்தொழி பிணையி னினைப்பன ணின்ற
          எல்லொளிப் பாவையைக் கல்லெனச் சுற்றி
          அளகமும் பூணு நீவிச் சிறிதுநின்
          திலக வாணுதற் றிருவடி வொக்கும்
     165  பிறையது காணா யிறைவளை முன்கை
          திருமுகை மெல்விரல் கூப்பி நுந்தை
          பெரும்பெயர் வாழ்த்தாய் பிணையென் போரும்
 
        160 - 167: இணையில்..........பிணையென்போரும்
 
(பொழிப்புரை) அம்மாளிகையின்கண் ஒரு பக்கத்தே வேடர் எய்த அம்பு மார்பகத்தைக் கிழித்துவிடத் தன் இனத்தினின்றும் அலமந்தோடித் தன் துணையாகிய கலைமானை யின்றித் தனித்து நிற்குமொரு பெண்மான் போன்று காமவேள் எய்த கணை தன்னுளங் கிழிப்ப ஆயத்தினின்றும் நீங்கி உதயணனையே நினைப்பவளாய் நின்ற பேரொளி படைத்த வாசவதத்தையைக் கண்டு கல்லென்னும் ஆரவாரமுடையராகி அவளைச் சூழ்ந்து கொண்டு, அவருட்சிலர் அவள் கூந்தலையும் அணிகலன்களையும் நீவித் திருத்திவிட்டு, அவள் திருமுகம் நோக்கிப் பிணைமானே! உதோ மேலை வானத்தே தோன்றி நினது திலகந் தீட்டிய ஒளியுடைய நெற்றியினது அழகிய வடிவத்தை ஓரளவு ஒத்திருக்கின்ற பிறைத்திங்களை நோக்குக! நினது வளையணிந்த இறை முன்கையவாகிய அழகிய காந்தண் மலரிதழை யொத்த மெல்லிய விரல்களைக் கூப்பி நின் தந்தையாகிய மன்னர் பெருமானின் பெரிய புகழைப் பாடி வாழ்த்துவாயாக! என்று வேண்டுவாரும், என்க.
 
(விளக்கம்) கணையுளங்கிழிப்ப தனித்தென்னுந்துணையும் வேடன் கணை யென்றும் காமன் கணை யென்றும் உவமைக்கும் பொருட்கு மேற்ற பெற்றி கூறிக்கொள்க. இணையில் பிணை தனித்தொழிபிணை என்று இயைத்துக்கொள்க. சிறிது ஒக்கும் என வொட்டுக. இறை - கையின் சந்து. முகை - காந்தண்முகை, பிறை தொழுதல் கன்னி மகளிர் வழக்கம்.