உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
           முள்ளெயி றிலங்கு முறுவ லடக்கிச்
          சொல்லெதிர் கொள்ளாண் மெல்லிய லிறைஞ்சிப்
          பந்தெறி பூமியுட் பாணி பெயர்ப்புழி
     180  அஞ்செங் கிண்கிணி யடியலைத் தனகொல்
          திருக்கிளர் வேங்கையும் பொன்னும் பிதிர்ந்து
          மருப்பியல் செப்புங் குரும்பையு மிகலி
          உருத்தெழு மென்முலை முத்தலைத் தனகொல்
          பிணைய லலைப்ப நுதனொந் ததுகொல்
     185   இனையவை யிவற்றுள் யாதுகொ லிந்நோய்
          பெருங்கசி வுடையளிப் பெருந்தகை மகளெனத்
          தவ்வையுந் தாயுந் தழீஇயினர் கெழீஇச்
 
        (உசாத்துணைத் தோழியும் செவிலியும் ஆராய்தல்)
                  177 - 187: முள்.........கெழீஇ
 
(பொழிப்புரை) மெல்லிய சாயலையுடைய வாசவதத்தை அத்தோழியார் மொழி கேட்டும் தனது முள்போலும் கூரியபற்கள் விளங்குதற்குக் காரணமான புன்னகையும் தோன்றாதபடி அடக்கி அவர்தம் கூற்றிற்கு மாற்றமொன்றும் கூறாமே தலை கவிழ்ந்து நிற்க. அந்நிலை கண்ட உசாத்துணைத் தோழியும் செவிலித்தாயும், இவட்கு இவ்வருத்த முண்டாகக் காரணந்தான் என்னையோ? ஒரோவழி இவள் பந்தெறிந்த களத்தின் கண்ணே கைகளை வீசி யியங்கியபொழுது இவளுடைய அழகிய சிவந்த அடிகளைக் கிண்கிணிகள் தாக்கி வருத்தினவோ! அல்லது, அழகு விளங்குகின்ற வேங்கை மலரையும் பொற் சுண்ணத்தையும் சிதறினாலொத்த சுணங்குகளையுடையவாய் யானை மருப்பினாற் செய்யப்பட்ட சிமிழையும் தெங்கிளங்காயையும் மாறுபட்டு இவள் மார்பின்கட் சினந்தெழா நின்ற மெல்லிய முலைகளை முத்துமாலைகள் தாக்கி வருத்தினவோ! அல்லது, நெற்றிச் சூட்டாகிய மலர்மாலை தாக்குதலாலே இவளுடைய நுதல் நொந்ததோ? இன்னோரன்ன காரணங்களுள் வைத்து யாதோ? அறிகின்றிலேமே? இப்பெருந்தகைப் பெண் பெரிய வருத்தமுடையளாக விருக்கின்றனள் என்று கருதி அவளைப் பொருந்தித் தழுவிக் கொண்டவராய் என்க.
 
(விளக்கம்) இறைஞ்சி - இறைஞ்ச. பாணி - கை. அம்செவ்வடி என்க. கிடந்தவாறே கிண்கிணிக்கே கோடலுமாம். வேங்கை - வேங்கை மலர். பொன் - பொற்சுண்ணம், இவை தேமலுக்கு உவமைகள். குரும்பை - தெங்கிளங்காய். பனங்குரும்பை எனினுமாம். பிணையல் - மாலை. கசிவு - துன்பம். தவ்வை என்றது - உசாத்துணைத் தோழியை. இவள் செவிலிமகள். ஈண்டுத் தவ்வை என்றது, காஞ்சன மாலையை. தாய் - சாங்கியத்தாய் என்க.