உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
33. மாலைப் புலம்பல்
 
           செவ்வி யிலளெனச் சேர்ந்தகம் படுப்பச்
          செம்பொன் விளக்கொடு சேடியர் முந்துறத்
     190   திண்ணிலைப் படுகாற் றிருந்தடிக் கேற்ற
          மணிக்கல மொலிப்ப மாட மேறி
          அணிக்காற் பவழத் தியவன ரியற்றிய
          மணிக்காழ் விதானத்து மாலை தொடர்ந்த
          தமனியத் தியன்ற தாமரைப் பள்ளிக்
     195   கலனணி யாயங் கைதொழ வேறிப்
          புலம்புகொண் மஞ்ஞையிற் புல்லெனச் சாம்பிப்
          புனல்கொல் கரையி னினைவனள் விம்மிப்
          பாவையும் படரொடு பருவரல் கொள்ள
 
        188 - 198: செவ்வி............கொள்ள
 
(பொழிப்புரை) இவள் இப்பொழுது பிசியும் நொடியும் பேசி விளையாடற்கேற்றதொரு நிலைமையை யுடையவள் அல்லள் என்று கருதி அனைவரும் குழீஇக் கன்னிமாடத்துள்ளே வாசவதத்தையை அழைத்துப் போகா நிற்ப அப்பொழுது ஏவன் மகளிர் செவ்விய பொன் விளக்கைக் கையிலேந்தி வழிகாட்டி முற்பட்டுச் செல்லா நிற்பத் திண்ணிய நிலையினையுடைய படிகள் வழியாகத் தத்தை தனது திருந்திய திருவடிகளிலே அணிந்துள்ள மணிகள் பெய்த சிலம்பு முதலிய அணிகலன்கள் ஒலிக்கும்படி அக்கன்னி மாடத்தின் மேனிலை மாடத்தின்கண் ஏறிச்சென்று, அம்மேனிலை மாடத்தே அழகிய பவளத்தாற் கால்களமைத்து யவன நாட்டுத் தச்சர் இயற்றியதும், மணிகள் பதித்த கால்கள் நிறுத்திய பந்தரின்கீழ் மலர் மாலைகள் தூக்கப்பட்டதும், பொன்னாற் றாமரை மலர் வடிவிற்றாய் இயற்றப்பட்டதுமாகிய படுக்கையின்மேல் தன்னைச் சூழ்ந்து வந்த அணிகலனணிந்த தோழியர் எல்லாம் கைகூப்பித் தொழா நிற்ப ஏறியிருந்து தன் சேவலைப் பிரிந்து தனிமையுற்றதொரு பெடைமயில் போன்று ஒளி மழுங்கி வாடி, மிக்க நீராற் குத்தியிடிக்கப்பட்ட கரைபோன்று நெஞ்சழிந்து படர்மெலிந்திரங்கி விம்மித் துயருறாநிற்ப என்க.
 
(விளக்கம்) செவ்வி - விளையாட்டிற் கலந்துகொள்ளுந் தன்மை. படுகால் - படிக்கட்டு. சேடியர் - ஏவன் மகளிர். புலம்பு - தனிமைத் துன்பம். மஞ்ஞை - மயில். படர் - பிரிவாற்றாத தலைவி தானுறுந் துன்பத்தை இடையறாது நினைத்து மெலிதல். பருவரல் - துன்பம்.