உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
         
          துன்ப நீங்குந் தொழின்முறை போக்கி
          முடிகெழு மன்னரொடு முற்றவை நீங்கிக்
          கடிபெருங் கோயிலுட் காட்சி விரும்பி
    35    உதயண குமரனை யுழைத்தரல் விரைந்தென
          உழைநிலை யாள ரோடின ரிசைப்ப
 
               32 - 36 : துன்பம்...........இசைப்ப
 
(பொழிப்புரை) தன் நாட்டின் துன்பத்தை நீக்கும் பொருட்டு அற்றைநாள் தான் செய்யவேண்டிய செயல்களை ஆராய்ந்து செய்து முடித்த பின்னர் ஆங்குக் குழுமியுள்ள மன்னர்களுடனே முதிர்ந்த அவ்வவையினின்றும் புறப்பட்டுத் தனது காவல்பொருந்திய அரண்மனைக்கட் சென்று உதயண குமரனை நேரிற் கண்டு அளவளாவ விரும்பி, ஏவலரை நோக்கி நீயிர் சென்று உதயணனை எம்பால்அழைத்து வருக என்று பணிப்ப அது கேட்ட ஏவன்மாக்கள் ஓடிச்சென்று உதயண னைக் கண்டு மன்னவன் கருத்தினைக் கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) ' நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறு நாடு கெடும்' (குறள்-553)
என்பவாகலின் அற்றைநாள் தான்நாடி முறைசெய்ய வேண்டிய செயல் களை நாடிச் செய்தனன் என்பார் துன்பநீக்குந் தொழில் முறை போக்கி என்றார். முற்றவை - நல்லவைக்குரிய இலக்கண மெல்லாம் நிரம்பிய அவை. அத்தகைய அவையின் இலக்கணத்தை, 'எட்டு வகை நுதலிய அவையத் தானும்' எனவரும் நூற்பாவானும் (தொல்-புறத். .21)
'குடிப்பிறப் புடுத்துப் பனுவல் சூடி
விழுப்பே ரொழுக்கம் பூண்டு காமுற
வாய்மை வாய்மடுத்து மாந்தித் தூய்மையிற்
காத லின்பத்துத் தூங்கித் தீதறு
நடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும்
அழுக்கா றின்மை யவாஅ வின்மையென
இருபெரு நிதியமு மொருதா மீட்டுந்
தோலா நாவின் மேலோர் பேரவை'
எனவரும் பழம் பாடலானும் (ஆசிரியமாலை - புறத்திரட்டு - அவையறிதல்) உணர்க. தரல் : வியங்கோள்.