உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
           நீதி மருங்கி நினைவ வவன்சூழ்ந்
          தியாதெனப் படினும் படுக விவன்பணி
          மாதரைக் காட்டுதன் மங்கல மெனக்கென
          நெஞ்சு.........................தங்கூறி
    75    அஞ்சொ லாயத் தன்றியான் கண்ட
          தாமரை முகத்தி தலைக்கை யாகப்
          பல்பெருந் தேவியர் பயந்த மகளிருள்
          நல்லிசை யார்கொ னயக்கின் றாளெனச்
          சொல்லினன் வினவுஞ் சுவடுதனக் கின்மையின்
    80    யாரே யாயினு மிவன்மக ளொருத்தியைச்
          சீர்கெழு வீணை சிறப்பொடு காட்டிப்
          பயிற்சி யுள்வழிப் பல்லோர் வருதலின்
          அழித்தது மொருநா ளன்றியான் கண்ட
          கதிர்மதி முகத்தியைக் காண்டலு முண்டென
    85    முதிர்மதிச் சூழ்ச்சியின் முற்ற நாடி
 
            71 - 85: நீதி..........நாடி
 
(பொழிப்புரை) இவ்வாறு அரசநீதியின் திறத்திலேதான் நினைத்தற் குரியன வெல்லாம் அவ்வுதயணன் நினைந்து பின்னர் அவற்றை ஆராய்ந்து நன்று இம்மன்னவன் பணிக்குக் காரணம் இவற்றுள் யாவதே யாயினும் ஆகுக. இப்பணி அவன் மகளிரை நமக்குக் காட்டுவதொன்றாகலின் நமக்கு ஆக்கமாகும் பணியே ஆகும் என்று தன் நெஞ்சு........அழகிய மொழியையுடைய மகளிர் குழாத்திடையே அன்று யான்கண்ட செந்தாமரை மலர் போலும் திருமுகத்தை உடை யாள் முதலாக இம்மன்னவனுடைய பல பெருந்தேவியர் ஈன்ற மகளிருள் வைத்து வீணை பயில விரும்புபவள் யார்? என்று வெளிப்படக் கூறிச் சிவேதனை வினவும் வாய்ப்புத் தனக்கில்லாமையாலே அங்ஙனம் வினவுதல் விடுத்து, அவள்தான் யாரேயாயினும் ஆகுக ! இம்மன்னன் மகள் ஒருத்திக்கு யான் ஆசிரியனாகி, இசைக் கருவிகளுள் தலையாய தென்னும் சிறப்புடைய வீணையினை அச்சிறப்பெல்லாம் தோன்றும்படி இயக்கிக் காட்டிப் பயிற்று விக்கும் பயிற்சி உண்டாய வழி அவண் அவனுடைய மகளிர் பலரும் வருதல் உண்டாகுமாதலின், அங்ஙனம் வரின் அன்று யான்கண்ட ஒளியுடைய திங்கள் போன்ற முகத்தையுடைய அவளை யான் காண்டலும் கூடுமன்றோ எனத் தன்முதிர்ந்த அறிவின் ஆராய்ச்சியாலே முழுதுற ஆராய்ந்து என்க.
 
(விளக்கம்) நீதி - அரசநீதி. அஃதாவது
' எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்,
  எண்ணுவ மென்ப திழுக்கு' (குறள் - 467)
என்பது. நினைவ : பலவறிசொல். இவன் - பிரச்சோதனன், தலைக்கை -முதன்மை. மங்கலம் - ஆக்கம். இவன்பணி மாதரைக் காட்டுதலானே எனக்கு மங்கலம் ஆகும் என்க. சுவடு - வாய்ப்பு. அழித்தும் - மீட்டும்.