உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
           என்னிதற் படுத்த நன்னுதன் மாதரைப்
          பேரும் பெற்றியுந் தேரு மாத்திரம்
    95    நேர்வது பொருளென நெஞ்சு வலியுறீஇச்
          செறுநரைப் போலச் சிறையிற் றந்துதன்
          சிறுவரைப் போலச் செய்தோன் முன்னர்த்
          தவன்முறை யாயினுந் தன்மன முவப்பன
          இயல்முறை யாற்றி யென்கடன் றீர்ந்த
    100    பின்ன ராகுமென் பெயர்முறை யென்ன
 
        93 - 100: என்னிதன்..........முறையென்ன
 
(பொழிப்புரை) என்னை இத்தகைய துயரக் கடலில் வீழ்த்திய பேரழகுடைய நங்கையின் பெயரும் பண்பும் யான் தெரிந்து கொள்ளுமளவும் இப்பணிக்கு யான் உடன்படுதலே அறிவொடு பொருந்திய செயலாகும் என்று துணிந்து தன் பகைவனைப் போன்று என்னைப் பற்றிச் சிறைக் கோட்டத்தே வைத்துப் பின்னர்த் தன் மக்களைப் பேணுவதுபோல என்னைப் பேணு மிவ்வரசன்பா னின்றும் காலமும் இடனும் வாய்த்துழி அகன்று போதலே நன்முறையாயினும் அவன் செய்த நன்றியைக் கருதுங்கால் அவன் மனமுவக்கும் செயல்களை என்னாலியலுந்துணையும் செய்து எனது கடமையை யான் தீர்த்தலும் நன்றி மறவாமை என்னும் நல்லறம் ஆகுமன்றோ! ஆகவே அக்கடன் தீர்ந்த பின்னரே யான் இவனிடத்தினின்றும் பெயர்தல் செயற்பாலதாம் என்று கருதி என்க.
 
(விளக்கம்) இதன் - இத்துயர்க் கடலுள். தேருமாத்திரம் - தெரியுமளவும். செறுநர் - பகைவர். சிறுவர் - மக்கள். தவல் - அகன்று போதல். தன் - பிரச்சோதனனுடைய பெயரும் முறை என்க.