உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
           திருமலி யாகத்துத் தேவியர் பயந்த
          நங்கைய ருள்ளு மங்கை முற்றாப்
          பெதும்பை யாயத்துப் பேதையர் வருகெனப்
   115     பளிக்கறைப் பூமியும் பந்தெறி களத்தும்
          மணிக்கயிற் றூசன் மறலிய விடத்தும்
          கொய்ம்மலர்க் காவும் பொய்கைக் கரையும்
          அந்தக் கேணியும் வந்துபெயர் கூவித்
          தவ்வை மகளிருந் தாய்கெழு பெண்டிரும்
   120    அவ்வழி யாயமு நொய்தகப் படுப்ப
 
        112 - 120: திரு..........படுப்ப
 
(பொழிப்புரை) அதுகேட்ட மன்னன் மகிழ்ந்து ஏவன் மகளிரை நோக்கி அழகுமிக்க திருமேனியையுடைய நந்தேவிமார் ஈன்ற பெண்களுள் வைத்து மங்கைப் பருவம் எய்தாத பெதும்பைப் பருவமுடைய மகளிர் எம்முன் வருவாராக என்று பணித்தருள, அத்தகைய மகளிரின் செவிலிமார்களும் உசாத் துணைத் தோழி மார்களும் தாய்மைத் தன்மை பொருந்திய ஏனைப் பணிமகளிரும் தோழியர்களும் விரைந்து அம்மகளிர் ஆடா நின்ற பளிக்கறைக ளிடத்தும் பந்தாடுமிடத்தும் முத்துவடத்தாற் றூக்கிய ஊசலில் ஏறியிருந்து ஒருவரோடொருவர் மாறுபட்டு ஆடுமிடங்களினும் அவர் மலர் கொய்யா நின்ற பூம்பொழில்களினும் நீர்நிலையின் கரையிடத்தும் கரப்புக் கேணி களிடத்தும் வந்து வந்து அம்மகளிர் பெயர் சொல்லிக் கூவியழைத் தழைத்து விரைவில் ஒருங்கே கூட்டாநிற்றலாலே வந்து குழுமிய என்க.
 
(விளக்கம்) ஆகம் - கொங்கையுமாம். மங்கை பெதும்பை என்பன மகளிரின் பருவப் பெயர்கள். பேதையர் என்றது ஈண்டுப் பருவம் குறியாமல் மகளிர் என்னுந் துணையாய் நின்றது. அந்தக் கேணி நிலத்தினுள் மறைந்திருக்கும் கேணிகள். தாய் - தாய்மை. அவ் வழி ஆயம் - ஆங்காங்கு விளையாடுகின்ற தோழிமாரும் என்க. நொய்து - விரைவில். அகப்படுத்தலாவது கண்டுபிடித்து ஒருங்கே கூட்டுதல்.