உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
         
   130    பெண்டுணை சார்வாக் கண்டுழிக் கலங்கிக்
          கடைக்கண் சிவப்புங் கதிர்முலை யுருப்பும்
          மடக்காக் கூழையு மருங்குலும் பற்றிப்
          புதையிருந் தன்ன கிளரொளி வனப்பினர்
          அரங்கொல் கிண்கிணி யிரங்க வொல்கிப்
   135    பொற்கிடுகு செறிந்து போர்வை முற்றி
          முத்துக்காழ் தொடர்ந்த சித்திரக் கூடத்துப்
          பவழக் கொடுங்காழ் பத்திமுகத் தழுத்தித்
          திகழ்கோட் டியன்ற திமிசுகுடப் பொற்கால்
          உரிமைச் சுற்றத் துரியோர்க்குத் திறந்த
   140    திருமணி யம்பலத் திமிழ்முழாத் ததும்பும்
          அரங்க நண்ணி
 
           130 - 141: பெண்டுணை........நண்ணி
 
(பொழிப்புரை) பெண்டிரே தமக்குச் சார்வாக வந்து தம்மைக் கூவுகின்ற செவிலி முதலியோரைக் கண்டபொழுது மனந்துணுக் குற்றுக் கடைக் கண்ணின் கண் சிவப்பு நிறமும் ஒளியுடைய முலைகளின் முகிழ்ப்பும் வாரிக் கைசெய்யாத கூந்தலும் இடையும் கொண்டு அழகு என்னும் தெய்வம், தான் மறைந்துறையும் இடமாகக் கொண்டு தம்பாற் குடியிருந்தாற் போன்ற ஒளிமிகும் எழிலையுமுடைய அம்மகளிர் அரத்தால் அராவப்பட்ட தம் கிண்கிணி யணிகள் நடவேன் மின் ! நும்மிடை ''இறும் இறும் !'' என்று புலம்பா நிற்பத் தம் தம் நுண் ணிடை துவளப் பொன்னாலியன்ற கிடுகுகள் செறிக்கப்பட்டுச் சுற்றுப் பலகை தைக்கப்பட்டு முத்துமாலைகள் தூக்கப்பட்ட சித்திரக் கூடத்தையுடை யதும் பவழத்தாலாய வளைந்த காம்பினை வரிசையாக முகத்தின்கண் பதித்து ஒளிவிடுகின்ற யானை மருப்பாலே அழகு செய்த திமிச மரக்குடங் களையுடைய பொற்பட்டம் கட்டப்பட்ட தூண்களையுடையதும் உரிமை மக ளிர் குழுவின் வைத்து மிகவும் உரிமையுடையோர்க்கு மட்டும் திறக்கப்பட்டது மாகிய திருமணியம்பலத்தின்கண் முழங்கும் முழவும் இடையறாது முழங்கு கின்ற அரங்கத்தையடைந்து என்க.
 
(விளக்கம்) அம்மகளிர்க்குப் பாதுகாவல் செய்வோரும் மகளிரே ஆகலின் பெண் துணை சார்வா என்றார். சார்வாக வந்து என ஒரு சொல் பெய்து கொள்க. தம்மைக் கூவியழைப் போரைக் கண்டுழி என்க வழக்கத்திற்கு முரணாக ஞெரேலெனக் கூவியழைத்தலான் காரணம் தெரியாமல் கலங்கினர் என்பது கருத்து. இஃது அவர் அச்சப்பண்பினை எடுத்துக் காட்டியபடியாம். கண் சிவப் பினும் முலையுருப்பினும் கூழையினும் இடையினும் மறைந்திருந்தே நாடொறும் பெண்மையழகு மிகுதல் பற்றி வனப்பு இவற்றின்கண் புதை யிருந்தன்ன வனப்பினர் என்றார். கிடுகு - கட்டிடத்தின் மேலே வேயப் படும் ஓர் உறுப்பு, போர்வை - சுற்றுப் பலகை. காழ் - வடம். பத்தி - வரிசை. உரிமைச் சுற்றம் - தேவிமாரும் மக்களும் அவருள்ளும் சிறப் புடைய கோப்பெருந் தேவியர்க்குமட்டும் என்பது கருத்து.