உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
           பதரில் செம்பொன் காயழ லுறுத்த
    195    கதழ்வுறு சின்னஞ் சிதறிய மருங்கிற்
          றிருநுதற் சுட்டி திகழச் சூட்டி
          முத்தக் கலனணி மொய்ம்புறச் சேர்த்துப்
          பொன்செ யோலையொடு பூங்குழை நீக்கி
          மணிச்செய் கடிப்பிணை மட்டஞ் செய்து
    200    தேய்வுற் றமைந்த திருவெள் ளாரத்
          தேக விடுகொடி யெழிற்றோ ளெழுதிக்
          கச்சியாப் புறுத்த கால்வீங் கிளமுலை
          முத்த வள்ளியொடு மும்மணி சுடர
 
           194 - 205: பதரில்......சுடர
 
(பொழிப்புரை) ஓட்டற்ற செவ்விய பொன்னை அழலிலிட்டு உருக்கிப் பின்னர்ச் சுண்ணமாக்கிய சிறந்த பொற்பொடியைத் தூவிய நுதலிடத்தே அழகிய நுதற்சுட்டியை விளங்கும்படி சூட்டி முத்தாலியன்ற அணிகலன்களைத் திரட்சியாக அணிந்து முன்பணிந் திருந்த பொன்னாலியன்ற காதோலையையும் அழகிய குழையையும் அகற்றிச் செவியின்கண் சிறந்த அணிகலனாகிய கடிப்பிணையைச் சமஞ்செய்து பெய்து இழைத்தற் றொழிலினா லியற்றிய அழகிய வெண்ணிற வடமாகிய ஒற்றை மாலையணிந்த அழகிய தோளின்கண் தொய்யில் எழுதிக் கச்சிறுக்கிய அடிபருத்த இளமுலைகளின் மேலே முத்தவள்ளியும் மும்மணி மாலையும் சுடரவும், மணிக்கால்............... கவைஇ -- குளிர்ந்த பொன்வடம் அழகிய ஒளியாற் சுடர்வீசவும், என்க.
 
(விளக்கம்) பதர் - குற்றம். அழலுறுத்துச் சுண்ணமாக்கிய சின்னம் என்க. கதழ்வுறுதல் - சிறப்புறுதல். சின்னம் - பொற்பொடி. மருங்கு - இடம். நுதலிடம் என்க. மொய்ப்புற - திரட்சியுற. கடிப் பிணை - ஒருவகைக் காதணி. மட்டஞ் செய்தல் - இருசெவியினுஞ் சமமாகத் தூங்கவிடுதல். ஏகவிடுகொடி - ஒற்றைவடம். முத்தவள்ளி - ஒருமுத்துமாலை. மும்மணி - மூன்றுவகை மணிகள் பதித்த ஓர் அணிகலம். பொற்றோரை - பொன்வடம்.