உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
         
    220   பொத்தின் றமைந்த புனைவிற் றாகிச்
          சொத்துற் றமைந்த சுதையில் செஞ்சுவர்
          வெண்கோட்டு நெடுந்தூண் விதானந் தூக்கித்
          தேநவின் றோங்கிய திருநா றொருசிறைக்
          கீத சாலை வேதி நிறைய
    225   மல்லற் சுற்றமொடு கல்லெனப் புகுதந்
          தரக்குப் பூமி யாயமொ டேறிப்
          பரப்புமல ரொருசிறைப் பாவையை நிறீஇ
 
        220 - 227: பொத்தின்..........நிறீஇ
 
(பொழிப்புரை) குற்றமற்றதாக நல்லிலக்கணமுடையதாய்ப் பொன்னாலமைத்தமையால் சுதை தீற்றப்படாமே இயல்பாகவே சிவந்துள்ள சுவர்களும,் வெள்ளிய யானை மருப்பானியன்ற நெடிய தூண்களும், உடையதாய் மேற்கட்டி கட்டப்பட்டுத் தெய்வத்தை வணங்கி உயர்ந்த தெய்வத்தன்மை விளங்காநின்ற ஒரு பக்கத்தே யமைந்த இசைமன்றத்து மேடை நிரம்பும்படி வளமுடைய சுற்றத்தாரோடு கல்லெனும் ஆரவார முண்டாகப் புகுந்து, சாதிலிங்கம் வழித்த நிலத்தின்கண் தோழியர் குழாத்தோடு ஏறி ஆங்கு மலர் பரப்பப்பட்ட ஒரு பக்கத்தே வாசவதத்தையை நிறுத்தியபின் என்க.
 
(விளக்கம்) செம்முது செவிலியர் (187) ஏத்தி ஆட்டி வாரி உறீஇக் கட்டி யாத்துச் சூட்டிச் சேர்த்து நீக்கிச் செய்து எழுதி சுடரவும் சுடரவும் அடிநோமென (இட்ட) தவிசின்மேல் ஆர்ப்பவும் ஏற்றவும் அசைப்பவும் புகுந்து நிறீஇ என வினையியைபு காண்க. பொத்து - குற்றம். புனைவிற்று - செயலையுடையது. சொத்து - பொன். பொன்னாலியன்றமையின் சுதையிலதாயிற்று. கோடு - யானைக் கோடு. தே - தெய்வம். திரு - காண்போர் கண்ணையும் நெஞ்சத்தையும் கவரு மொரு தெய்வத்தன்மை. கீதசாலை - இசைமன்றம். வேதி - மேடை. மல்லல் - வளம். ஒலிக்குறிப்பு. அரக்குவழித்த பூமி என்க. பாவை - வாசவதத்தை.