உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
34. யாழ் கைவைத்தது
 
            நன்னர்க் கிளவி நயவாப் பயிற்றி
    235   ஆசான் கொடுக்கு மரும்பெறல் விச்சை
          காண்போர் செய்யுங் கடப்பா டிதுவென
          வெள்வளை முன்கை தோழியர் பற்றி
          ஒள்ளிழை மாத ரொழுக்கஞ் செய்கெனக்
          காந்த ளழித்த கைம்முகிழ் கூப்பிக்
    240    கஞ்சிகை திறந்த பொழுதி னன்
 
        234 - 240: நன்னர்.........திறந்தபொழுதின்
 
(பொழிப்புரை) அங்ஙனமிருந்தபொழுது தோழியர் ஒள்ளிய அணிகலன்களையுடைய மாதராய்! நன்மையுடைய இனிய மொழிகளைக் கேட்கும் மாணவர்க்கு விருப்பம் உண்டாகும்படி கற்பித்து நல்லாசிரியன் வழங்கும் பெறற்கரிய கலையைப் பயிலும் நன்மாணாக்கர் தொடக்கத்தே செய்யும் கடமை இஃதாம் என்றுணர்த்தி அவளுடைய வெள்ளிய வளையல் அணிந்த இருமுன் கைகளையும் எடுத்து ஒரு சேரப்பற்றி நீ நின்னுடைய ஆசானை வணங்கும் கடமையைச் செய்தருள்க! என்று அறிவிக்க, அதுகேட்ட நங்கை காந்தண்மலரின் அழகைக் கெடுத்த தன் கைம்மலரைக் கூப்பத் தோழியர் உருவு திரையைத் திறந்த பொழுதின்கண் என்க.
 
(விளக்கம்) நன்னர்க்கிளவி - கேள்வியானும் பயனானும் இனிய மொழி. நயவர - விருப்பம் உண்டாகும்படி. காண்போர் - மாணவர். ஒழுக்கம் - சான்றோர் வகுத்த ஒழுக்கமாகிய வழிபாடு என்க. மாதர் - விளி. கஞ்சிகை - உருவுதிரை. கூப்ப - எனத் திரித்துக்கொள்க.