உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
          பன்னாள் கழிந்த பின்னர் முன்னாள்
     45   எண்மெய்ப் பாட்டினு ளிரக்க மெய்ந்நிறீஇ
          ஒண்வினை யோவியர் கண்ணிய விருத்தியுட்
          டலையத னும்பர்த் தான்குறிக் கொண்ட
          பாவை நோக்கத் தாரணங் கெய்தி
          முற்றான் கண்ட முகஞ்செய் காரிகை
     50   உட்கொண் டரற்று முறுபிணி தலைஇக்
          கட்கொண் டாங்குக் களிநோய் கனற்றத்
          தீமுகத் திட்ட மெழுகிற் றேம்பியும்
          தாய்முகத் தியாத்த கனறிற் புலம்பியும்
 
           (உதயணனுக்கு வாசவதத்தை மீது வேட்கை மிகுதல்)
              44 - 53: முன்னாள்..........புலம்பியும்
 
(பொழிப்புரை) நகைகழிந்த நாள்களிலே நகை முதலிய எண் வகை மெய்ப்பாட்டினுள் வைத்து அவலம் என்னும் மெய்ப்பாடு ஒன்றனையே தனது மெய்யின்கண் நிறுத்தி ஒண்மையுடைய தொழிலாகிய ஓவியம் தீட்டும் புலவர் தங்கள் ஓவியங்கட்கு வேண்டும் எனக் கருதிய ஒன்பது வகை யிருக்கையுள் முதலாவதாகிய தாமரையிருக்கையின்கண் நாடோறுமிருந்து தன்னையே நோக்கியவளும் தான் அடைதற்குக் குறிக்கொள்ளப்பட்டவளும் ஆகிய கொல்லிப்பாவையை ஒத்த அவ்வாசவதத்தையின் நோக்கத்தாலே உதயணன் தீர்த்தற்கரிய துன்ப மெய்தி முன்னர்க் களிறடக்கிய நாளிலே ஊழானே தன்னாற் காணப்பட்டவளும் தனக்கு முன்னர்ப் புகுமுகஞ்செய்து நின்றவளுமாகிய வாசவதத்தையின் பேரழகினைத் தன்கண்வழி உள்ளத்தே பதித்துக் கொண்டமையானே அரற்றுதற்குக் காரணமான மிக்க காம நோயானது நாளுக்கு நாள் பெருகிக், கள்ளைப்பருகினார்க்கு அக்கள் வெறி உள்ளத்தே வெதுப்புவது போன்று வெதுப்பா நிற்றலால் நெருப்பிலிட்ட மெழுகு உருகுவதுபோன்று நெஞ்சம் உருகியும், தாய்ப்பசுவின் முன்னர்ப் பாலுண்ணாதபடி தறியிற் கட்டப்பட்ட கன்று வருந்துவது போல வருந்தியும் என்க.
 
(விளக்கம்) எண்மெய்ப்பாடு -- "நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளி உவகை" என்பன. இவற்றுள் ஈண்டு இரக்கம் என்றது அழுகையை. இதனை அவலம் என்றும் கூறுப. அஃது இருவகைப்படும்; தானே அவலித்தலும் பிறர் அவலங் கண்டு அவலித்தலும் ஆம். பின்னது கருணை அல்லது இரக்கம் எனப்படும் ஈண்டு வாசவதத்தை உதயணன் அவலங்கண்டு கருணையுடையளாகவே இருந்தாள் என்பது கருத்து. விருத்தி - இருக்கை. இவை பதுமுகம் உற்கட்டிதம் ஒப்படியிருக்கை சம்புடம் அயமுகம் சுவத்திகம் தனிப்புடம் மண்டிலம் ஏகபாதம் என ஒன்பது வகைப்படும். இவை ஓவியப்புலவர்கள் தான் வரையும் ஓவியத்தின் பொருட்டுக் கொள்ளப்படுவன ஆதலால் ஒண்வினை ஓவியர் கண்ணிய விருத்தி யென்றார். இவற்றுள் தலையது என்றது பதுமுகத்தை (பதுமாசனம்). இதனாற் கூறியது யாதெனின் வாசவதத்தை யாழ்பயிலும் நாளெல்லாம் உதயணன்பால் இரக்கமுடையவளாய்ப் பதுமாசனத்திலிருந்து பயின்று வந்தனள் என்பதாம். தான் - உதயணன். குறிக்கொண்ட - எய்தக் கருதியுள்ள. பாவை - வாசவதத்தை. முகம் செய்தல் - புகுமுகம் புரிதல் அஃதாவது, தலைவன் தன்னைக்காண வேண்டும் என்னும் அவாவுடன் அவன் நோக்கிற்கு எதிரே நிற்றல் என்பதாம். பாவை நோக்கம் என்றது, நோக்கெதிர் நோக்கியதனை. இது களவிற்குச் சிறந்த மெய்ப்பாட்டினுள் முதல் மெய்ப்பாடாகும். கள்கொண்டாங்கு - கள்ளை உட்கொண்டாற்போல. தேம்பியும் புலம்பியும் என்பன துன்பத்துப் புலம்பல் என்னும் மெயப்பாடுகள்.