| (விளக்கம்)  இன்பமுந்துன்பமும் மாறி வருமியல்புடைய இவ்வுலகத்தே எனக்குத்   துன்பம் 
      ஒன்றும் இடையறாது வருகின்றது என்றிரங்குவான் உயலருந்துன்பமொ   டொருவழிப் 
      பழகி என்றான்.         பயலை கொண்ட என்பையுள் யாக்கை என்றது, 
      பசலை பாய்தல் என்னும்   மெய்ப்பாடு. பையுள் - துன்பம். இது - இந்த மறை. 
      அலர் - ஊரவர் கூறும்   பழமொழி. நோய்முத னாடுவோர் இஃது இவன் 
      வாசவதத்தையைக் காமுறுதலானே   உண்டாயிற்று என்பர். இதனால் அவட்குப் 
      பழிச்சொல் பிறக்கும் என்றவாறு. |