உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
     75    ஒருநூற் றொருகழஞ் சுரைகண் டெண்ணிய
           கனபொன் மாசை காண வேந்தி
           மன்றமு மறுகுங் கம்பலை கழும
           வனப்புமுத லாக வழிவர வமைந்து
           குணத்துமுறை வகையிற் கோல மெய்தி
     80    வீழ்ந்தோர் நல்கும் வெறுக்கை யன்றிக்
           காணி கொண்டுங் கடன்றிந் தெண்ணிய
           ஒன்றுமுத லாக வோரெட் டிறுத்த
           ஆயிரங் காறு மாத்த பரிசத்
           தியாழ்முத லாக வறுபத் தொருநான்
     85    கேரிள மகளிர்க் கியற்கையென் றெண்ணிக்
 
        (வயந்தகன் நருமதைக்குப் பரிசம் கொண்டு போதல்
                75 - 85: ஒருநூற்று..........எண்ணி
 
(பொழிப்புரை) அது கேட்ட வயந்தகன் பின்னர், வனப்பு முதலாக நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த சிறப்பெல்லாம் தாம் பிறந்த குடி வழியாகவே தமக்குக் கைவருதலானே அவற்றொடு பொருந்தித் தமது பண்பிற்கேற்ற வகையிலே கோலமும் புனைந்து கொண்டு தம்மை விரும்பினோர் வழங்கும் பொருளைப் பெறுதலே யன்றியும் நிலமுதலியன பெற்றும் சான்றோர் பரத்தை மகளிரை விரும்பினோர் அவர்க்கு வழங்கும் கடமைப் பொருள் என்று ஒரு கழஞ்சுப்பொன் முதலாக ஓராயிரத்தெட்டுக் கழஞ்சுப்பொன் ஈறாக வரையறை செய்யப்பட்ட பரிசப் பொருளையும் பெறுதல், யாழ்வித்தை முதலிய அறுபத்து நான்கு வித்தைகளும் பயின்ற அழகிய இளமையுடைய பரத்தை மகளிர்க்கு இயல்பு என்று கருதி, உரையாணியிட்டு மாற்றறிந்து எண்ணப்பட்ட ஒரு நூற்று ஒருகழஞ்சு கனவிய பொற்காசுகளைப் பலரும் காணும்படி கையிலேந்தி மன்றங்களினும் தெருக்களினும் ஆரவாரம் நிரம்புமாறும் சென்று என்க.
 
(விளக்கம்) வனப்புமுதலா அமைந்து எய்தி வெறுக்கையன்றியும் கொண்டும் பரிசத்தினையும் பெறுதல் இயற்கை என ஒருசொல் வருவித்துக்கொள்க. எண்ணி (85) பொன்மாசை ஏந்திக் கம்பலை கழுமச் சென்று என மாறியியைத்துக் கொள்க.

   பரத்தையர்க்கு ஒரு கழஞ்சுப்பொன் முதலாக ஆயிரத்தெட்டுப் பொன்னீறாகப் பரிசப்பொருள் வங்கும் வழக்கத்தை "ஒப்பவொன்றாகியாக ஆயிரத்தெட்டீறாச் செப்பி" எனவும் (சீவக. 107) "நூறு பத்தடுக்கி எட்டுக்கடை நிறுத்த வீறுயர் பசும்பொன் பெறுவது" எனவும், (சிலப் 3: 164 - 5) " எட்டுக்கடை நிறுத்த ஆயிரத்தெண் கழஞ்சு முட்டா வைகன் முறைமையின் வழாஅத் தாக்கணங் கனையார்" எனவும் (சிலப் - 14: 158 - 60) பிறசான்றோர் கூறுமாற்றானும் உணர்க.

   வனப்பு முதலாக வழிவர அமைந்து என்றது அழகும் ஆடலும் பாடலுமாகிய இம்மூன்று நலங்களும் அவர்க்குக் குலப்பண்பாலேயே கைவருவன என்றவாறு. 'குலவிச்சை கல்லாமற் பாகம்படும்' என்பதும் நினைக. கோலம் - ஒப்பனை. வனப்பு முதலியன அவர்க்கு இயற்கையாக மேலும் தத்தம் குலத்து முறைமைக் கேற்பக் கோலமும் செய்துகொண்டு என்க. இவற்றாலே தம்மை வீழ்ந்தோர் என்க. வெறுக்கை - பொன். காணி - நிலம். பரத்தையர்க்குப் பரிசப் பொருள் இவ்வளவு என வரையறை செய்தல் அரசியல் நூல் வழக்காதலின் ஒன்றுமுதலாக.......ஆயிரங்காறும் ஆத்தபரிசம் என்றார். ஆத்தல் - வரையறுத்தல்.