உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
           நிதியங் காட்டப் பொதியொடு சிதறிக்
           குறையொடு வந்தவக் குமரன் கேட்க
           சிறியனேன் வந்தவச் சிறுநில மன்னற்
     130    கம்மனை நயந்தியா னவ்வயிற் சேறல்
           என்மனை மருங்கி னில்லெனச் சீறித்
           தன்றுறைக் கொவ்வாத் தகையில கிளவி
           பைந்தொடி மாதர் பண்பில் பயிற்றத்
 
               (நருமதையின் சீற்றம்)
           127 - 133: நிதியம்..........பயிற்ற
 
(பொழிப்புரை) தான் கொணர்ந்த (ஒருநூற்றொரு கழஞ்சு) பொன்னையும் அந்நருமதைக்குக் காட்டாநிற்ப அதுகண்ட நருமதை சினந்து அப்பொன்களைப் பொதியோடு வாங்கிச் சிதறும்படி வீசி வேண்டுகோளுடன் வந்துள்ள அந்த வயந்தக குமரன் கேட்கும்படி யான் சிறியேன் ஆயினும் எம்மன்னனாற் சிறைபிடிக்கப்பட்டு ஈங்கு வந்துள்ள குறுநில மன்னனாகிய உதயணன் பொருட்டு அவன் வாழும் வீட்டினை விரும்பி அவனிருக்குமிடத்திற்குச் செல்லுதல் எம் குடியிற் பிறந்தோரியல்பிற்கு ஒத்ததில்லை என்று சீறித் தனது பரத்தைமைத் தொழிலுக்குப் பொருந்தாதனவும் தகுதியற்றனவும் பண்பில்லாதனவும் ஆகிய மொழிகள் பலவற்றையும் பசிய தொடியணிந்த அந்நருமதை கூறா நிற்ப என்க.
 
(விளக்கம்) நிதியம் - பொருள். பொதியோடு வாங்கிச் சிதறி யென்க. குறை - வாயில் நேர்வித்தல். வந்த என்றது - சிறையாக வந்த என்பதுபட நின்றது. சிறுநிலமன்னன் என்றது இகழ்ச்சி. அம்மனை - அவன் வீடு. எம்மனை - எங்குடி. துறை பரத்தைமைத்துறை. தகை - தகுதி.