உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
          
           மாரியுந் திருவு மகளிர் மனமும்
           தக்குழி நில்லாது பட்டுழிப் படுமெனும்
           கட்டுரை யன்றியுங் கண்டனம் யாமென
           விச்சையும் வனப்பும் விழுக்குடிப் பிறப்பும்
     160    ஒத்தொருங் கமைந்த வுதயண குமரனைப்
           பெற்றன ளாயினும் பிறர்க்குநைந் தழுவோள்
           பெண்ணிலி கொல்லோ பெரியோர்ப் பிழைப்பதோர்
           கண்ணிலி யாகுமிக் கணிகை மகளெனக்
           கூத்தி மருங்கிற் குணம்பழிப் போரும
 
                   (கண்டோர் கூற்று)
            156 - 164: மாரியும்..........பழிப்போரும்
 
(பொழிப்புரை) அதுகண்ட பட்டிமாக்கள் (173) மழையும் செல்வமும் மகளிர் மனமும் தகுந்தவிடத்தே நிற்கமாட்டா. தாம் தாம் சென்றுபட்ட விடத்தேயே நிற்பனவாம் என்று மேலோர் கூறும் பொருள் பொதிந்த மொழியை யாம் இதுகாறும் கேட்டிருந்தேம் இன்று கண்கூடாகக் கண்டுமறிந்தோம் என்றும், கல்வியும் அழகும் சிறந்த குடிப்பிறப்பும் ஒத்து ஒருங்கே அமையப் பெற்ற உதயணகுமரனை இக்கணிகை மகள் முற்றவ முடைமையாற் றன் காதலனாகப் பெற்றிருந்தும் அவனை விரும்பாமல் பிறர் பொருட்டு மனம் நைந்து அழுபவள் ஒரோ வழிப் பெண்தன்மை யில்லாதவள் கொலோ இவள், பெரியாரைப் பேணாத அறிவிலி! என்றும், அந்நாடகக் கணிகை திறத்திலே அவள் பண்பாட்டைப் பழித்துரைப்பாரும், என்க.
 
(விளக்கம்) மாரி - மழை. திரு - செல்வம். தக்குழி - தகுந்த விடத்தில். பட்டுழி - தாம்தாம் சென்றுபட்டவிடத்தே. கட்டுரையைக் கேட்டிருப்போம் அன்றியும் கண்டுமறிந்தேம் என்க. விச்சை - கல்வி. விழுக்குடி - உயர்குடி. இப்பண்புகள் எல்லாம் ஒருவர்பால் ஒத்திருக்கக் காண்டல் அரிது, இவன்பால் ஒத்து ஒருங்கு அமைந்தன என்று வியந்தபடியாம். காதலனாகப் பெற்றனளாயினும் என்க. பெண்ணிலி - பெண் தன்மையில்லாதவள்.