உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
           தேன்கவர் வோப்பித் திருநுதல் சுருக்கிப்
           பூநறுந் தேறல் பொலன்வள்ளத் தேந்தி
           ஒழுகி நிலம்பெறாஅ தொசிந்து கடைபுடைத்
           தெழுதுநுண் புருவ மேற்றி யியைவித்
     180    திலமலர்ச் செவ்வா யொப்ப விதழ்விடுத்து
           நரம்பிசை தள்ளி வறிதினிற் சுவைத்து
           மகிழின் மம்ம ரெய்தி முகிழின்
 
        (கணிகையர் ஊடலும் நகரநம்பியர் அவரை உணர்த்தலும்)
         (174 முதலாக 219 வரையில் ஒரு தொடர் - வீதிவண்ணனை)
                 176 - 182: தேன்..........எய்தி
 
(பொழிப்புரை) அழகிய குழையை யணிந்த கணிகை மகளிர் (200) பூவின்கண் தோன்றிய நறிய கள்ளைப் பொன்வள்ளத்திற்கையில் ஏந்தி அதனைக் கவர்தலையுடைய வண்டுகளை ஓட்டித் தமது அழகிய நெற்றியைச் சுருக்கிப் பார்த்து வளைந்து கடைபருத்து மையெழுதப்பட்ட நுண்ணிய புருவங்களை நெற்றியிலேற்றி அக்கள் வள்ளத்தினின்றும் ஒழுகி நிலத்தில் வீழாதபடி இலவம்பூவைப் போன்ற தமது சிவந்த வாயின் கண்ணவாகிய உதடுகளைத் திறந்து அவற்றிடையே வள்ளத்தைப் பொருத்திச் சிறிது அக்கள்ளைச் சுவைத்துப் பின்னர் யாழ் நரம்பினது இனிய இசை தோற்கும்படி மெல்ல முரன்று அக்கள்ளின் வேகத்தாலே மயக்க மெய்தி என்க.
 
(விளக்கம்) தேன் - வண்டு. கவர்வு - கவர்தல். பொலன் - பொன். அத்தேறல் ஒழுகிநிலத்தே வீழாதபடி இதழ்விடுத்து இயை வித்து என மாறுக. நரம்பிசையை வீழ்த்தி மெல்ல இசைமுரன் றென்க. தள்ளுதல் - கீழ்ப்படுத்தல். இது களிப்பாலே முரன்ற படியாம். மகிழ் - கள்வெறி.