உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
           மகிழின் மம்ம ரெய்தி முகிழின்
           கால மன்றியுங் கையி னெரித்த
           கழுநீர்க் குவளைப் பெரும்பொதி யவிழ்ந்த
     185    வள்ளிதழ் வகைய வாகி யொள்ளிதழ்
           செஞ்சிவப் புறுத்த சிதரரி மழைக்கண்
           கொழுங்கடை யிடுக நோக்கி மணிபிறழ
 
             (இதுவுமது)
      182 - 187: முகிழின்..........நோக்கி
 
(பொழிப்புரை) கழுநீராகிய குவளையின் மொட்டினுள் வைத்து அன்றலர்தற்குரிய பேரரும்பினது அதுதானே மலரும்பருவத்திற்கு முன்னரே கையான் நெரித்தமையானே விரிந்த பெரிய மலரையே ஒத்தனவாகி ஒளி பொருந்திய, இமைகளையும் மிகமிகச் சிவந்த சிதரிய வரிகளையும் உடைய குளிர்ந்த கொழுவிய தம் கடைக்கண் சுருங்கும்படி தங்காதலரை நோக்கி என்க.
 
(விளக்கம்) முகிழின் - அரும்புகளுள். முகிழினுள் கையின் நெரித்த பெரும்பொதி விரிந்த பெரிய இதழை ஒத்தனவாய் என்க. செஞ்சிவப்பு - மிகவும் சிவந்த சிவப்பு. அரி - கோடு. மழைக்கண் - குளிர்ந்த கண். இடுக - சுருங்க.