உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
           கொழுங்கடை யிடுக நோக்கி மணிபிறழ
           விருப்புள் கூர விம்மி வெய்துயிர்த்
           தெருத்தஞ் சிறிய கோட்டி யெம்மினும்
     190    திருத்தஞ் சான்றநுந் துணைவியில் செல்கெனப்
           புலவித் தண்டந் தமர்வயி னேற்றி
           இல்லை யாயினும் சொல்வகை செருக்கித்
           தண்டிக் கொண்டு பெண்டிரைப் பொறாது
           செயிர்வுள் ளுறுத்த நோக்கமொடு நறவின்
 
             (இதுவுமது)
      187 - 194: மணிபிறழ..........நோக்கமொடு்
 
(பொழிப்புரை) கருவிழிகள் பிறழாநிற்ப, அவரைத் தழுவ வேண்டும் என்னும் விருப்பம் தம்முள்ளத்தே மிகா நிற்பவே அவரை வெறுப்பார் போன்று வெய்தாக உயிர்த்து விம்மியழுது கழுத்தைச் சிறிது வளைத்துக் கொண்டு எம்மினுங் காட்டிற்றிருந்திய அழகுமிக்க நும் மனைவியின் இல்லத்திற்கே செல்க! என்று ஊடி அவ்வூடற்குரிய ஒறுப்பின் காரணத்தை அத்தலைவர் தம் தமரிடத்தே ஏற்றி ஊடற்கு வேண்டிய தவறு சிறிதும் அத்தலைவர்பால் இல்லையாகவும், இவ்வாறு சொல் வகையாலே படைத்துக் கூறிச் செருக்கி அவரை வருத்துதலை மேற்கொண்டு, அத்தலைவர்க்கு மனைவியர் உளராதலையே பொறாமல் சினத்தை அகத்தே கொண்ட வெச்சென்ற பார்வை யுடனே என்க.
 
(விளக்கம்) மணி - கண்மணி. ஈண்டு விழிகட்கு ஆகுபெயர். விருப்புள் கூராநிற்பவும் வெறுத்தார் போன்று உயிர்த்து என்க. புலவிக்குரிய தண்டம் - ஒறுப்பு. தமர் - தலைவர் மனைவிமார். தண்டிக்கொண்டு - ஒருசொல் - தண்டித்து. பெண்டிர் உண்மையையே பொறாது என்க. செயிர் - சினம்.