உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
           தரும நுவலாது தத்துவ மொரீஇக்
           கரும நுதலிய கள்ளக் காமம்
           எத்துறை மாக்களு மெய்க்கொளப் பரப்பி
     230   வனப்பு மிளமையும் வரம்பில் கல்வியும்
           தனக்குநிக ரில்லாத் தன்மைய னாதலிற்
           பொருந்தாப் புறஞ்சொ னிறம்பார்த் தெறிய
           வான்மயிர் துடக்கிற் றானுயிர் வாழாப்
           பெருந்தகைக் கவரி யன்ன பீடழிந்து          
 
                  (உதயணன் பழிமேற் கோடல்)
             227 - 234: தருமம்...........பீடழிந்து
 
(பொழிப்புரை) அறத்தைக் கருதாமல் உண்மையை விளக்கித் தான் மேற்கொண்டுள்ள காரியத்தை மட்டுமே கருதிய வஞ்சகக் காமத்தால் நிகழ்த்தும் செயலைப் பல்வேறு துறைகளைப் பயிலும் மாந்தர் அனைவரும் மெய்யென்றே கருதும்படி அந்நகர் முழுதும் அறியச் செய்து உதயணகுமரன் அழகினும் இளமைத் தன்மையினும் எல்லையற்ற கல்விப்பேற்றினும் தனக்கு யாரும் நிகர் ஆகாதுயர்ந்த பெருமையை உடையனாதலின், தனது பெருமைக்குப் பொருந்தாத புறஞ்சொல்லைத் தன்மனம் நோகும்படி பட்டிமாக்களும் விடரும் தூர்த்தரும் கூறித் தூற்றா நிற்றலாலே தனது வெளிய மயிர்களுள் ஒன்று சிக்குண்டொழிந்தாலும் தான் பின்னர் உயிர் வாழ்தலில்லாத பெரிய மானப் பண்புடைய கவரிமானையே ஒத்த தனது பெருமை அழிதலாலே என்க.
 
(விளக்கம்) தருமம் நுவலாது என்றது - தன்னை விரும்பாதவளை அலைத்தல் அறன் ஆகாது என்பதனைக் கருதாமல் என்றவாறு. தத்துவம் - வாய்மை. அதுதான் வாசவதத்தையைக் காதலிக்கும் செய்தி என்க. கருமம் - வாசவதத்தைக்கு அலருண்டாகாதபடி மறைக்கத் தான் மேற்கொண்ட செயல் என்க. கள்ளக் காமம் - வஞ்சகமாகக் காமுறுதல் போன்று காட்டுதல். அரசியற்றுறை முதலிய பல்வேறு துறையிற் பயிலும் மாக்களும் என்க. மெய்க்கொள - மெய்யென்று கருதும்படி. புறஞ்சொல் - புறத்தே தூற்றும் பழிச்சொல். நிறம் - மார்பு. பீடு - பெருமை.