உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
35. நருமதை சம்பந்தம்
 
         
     235    நெடுவெண் ணிலவி னீர்மைக் கிரங்கி
           முறுவன் மகளிர் முற்ற நிற்பப்
           பசுங்கதிர் சுருங்கிய பசலைத் தாகி
           விசும்பெழத் தேயும் வெண்மதி போல
           வலியிற் றீரா தொளியிற் குன்றிப்
     240   பெருநல் கூர்ந்த பெருவரை யகலத்
           தெவ்வ மறைத்தல் வேண்டி வையத்து
 
             (இதுவுமது)
         235 - 241: நெடு.........வேண்டி
 
(பொழிப்புரை) இளைமையுடைய ஞாயிற்று மண்டிலம் ஒளி சுருங்கிய பொன்னிறமுடையதாய்க் கீழைவானத்தே தோன்றிய மாத்திரையானே இராப் பொழுதெல்லாம் தன்னுடைய நெடிய வெள்ளிய ஒளியின் கொடுமைக்கு ஆற்றாதவராய்த் துணைவரைப் பிரிந்த முறுவலையுடைய மகளிர் இரங்கி நிலாமுற்றத்தே நிற்பவே தனது ஆற்றல் தேயாமல் ஒளிமட்டும் தேயாநின்ற வெள்ளிய திங்கள் மண்டிலம் போன்று வாசவதத்தையின் பொருட்டுத்தனது ஆற்றலழியாமல் ஒளிமட்டும் குன்றிப்போய்ப் பெரிதும் வறுமைப்பட்டுக் கிடக்கின்ற பெரிய மலையை ஒத்த தனது மார்பின் கண்ணதாகிய இளிவரவினை நகரத்தார் அறியாமல் மறைத்தலை விரும்பி என்க.
 
(விளக்கம்) பசுங்கதிர் சுருங்கிய பசலைத்தாகி விசும்பு எழத் தனது நெடுவெண்ணிலவின் நீர்மைக்கு இரங்கி மகளிர் முற்றம் நிற்பவே தேயும் வெண்மதிபோல என மாறி இயைத்துக் கொள்க. பசுங்கதிர் என்றது இளஞாயிற்று மண்டிலத்தை. ஞாயிற்றுமண்டிலம் தோன்றியவுடன் திங்கள் மண்டிலம் தனது ஆற்றல் தேயாது ஒளிமட்டும் தேய்தல் போன்று, வாசவதத்தை முகந்தோன்றிய மாத்திரையே உதயணன் மார்பின் வலிகுன்றாமல் ஒளிமட்டும் தேய்ந் தொழிந்தது என்பது கருத்து. மார்பிற்கு - திங்கள் உவமை. நல்குரவு - வாசவதத்தையைத் தழுவப்பெறாத நசையுடைமை என்க. அகலம் - மார்பு. எவ்வம் - ஈண்டு இளிவரவின் மேற்று.

    இனி, பசுங்கதிர் என்பதனையும் திங்கட்கே ஏற்றித், தேயும் வெண்டிங்கள் தனது நெடிய வெள்ளிய நிலவொளி குறையும் தன்மைக்கு இரங்கி முறுவல் மகளிர் நிலைமுற்றத்தே நிற்பவே நாடோறும் வானத்தே எழுந்தோறும் தனது பசிய கதிர் சுருங்கிய பசலையை யுடையதாகத் தேயாநிற்றல் போல வலியிற்றீராது ஒளியிற்குன்றி நல்கூர்ந்த அகலம் என்று கோடலுமாம். வலியிற்றீராது என்றது தானியங்கும் வலிமையிற் குன்றாமல என்றவாறு.