உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           தண்கய மருங்கிற் றாமரை போல
     20   அண்ணன் மூதூர்க் கணியெனத் தோன்றிச்
          சாமரை யிரட்டையுந் தமனியக் குடையும்
          மாமணி யடைப்பையு மருப்பிய லூர்தியும்
          பைந்தொடி யாயமும் பட்டமு முடையோர்
          ஐம்பதி னாயிர ரரங்கியன் மகளிருள்
     25   மன்னருட் பிறந்த மக்களு ளருங்கலம்
          தன்னயந் தரற்றத் தன்கடன் றீர்த்த
          தகைசா லரிவைக்குத் தக்கன விவையென
 
        ( பிரச்சோதனன் நருமதைக்குச் சிறப்புச் செய்தல் )
               19 - 27 : தண்கயம்..........இவையென
 
(பொழிப்புரை) குளிர்ந்ததொரு பொய்கையின்கண் ஏனை நீர்ப் பூக்களினும் சிறந்து தோன்றா நின்ற தாமரைப்பூப் போன்று பெருமைமிக்க இப்பழைய ஊராகிய உஞ்சை நகரத்திற்கே ஓர் அழகுண்டாகப் பிறந்து இரட்டைச் சாமரையும் பொற்குடையும் சிறந்த மாணிக்கத்தாலியன்ற அடைப்பையும் யானை மருப்பாலியன்ற சிவிகையும் பசிய வளையலணிந்த தோழியர் கூட்டமும் தலைக்கோற்பட்டமும் ஆகிய இன்னோரன்ன சிறப்புக்களைப் பெற்ற ஆடல் மகளிர் ஐம்பதினாயிரவருள், சிறந்த மன்னர் குடியிற் பிறந்து மக்களுள்ளே அருங்கலமாக விளங்காநின்ற உதயணகுமரன் தன்னையே விரும்பி அரற்றும்படி செய்தவளும் மேலும் அவனுடைய இன்ப வேட்கையைத் தீர்த்தலாகிய தன் கடமையைச் செய்த பெருமைமிக்கவளும் நாடகக் கணிகையுமாகிய நருமதைக்குப் பரிசுப் பொருளாகத் தகுந்தனவாம் இவையென்று கருதி யென்க.
 
(விளக்கம்) அண்ணல் - பெருமை. மூதூர் ஈண்டு உஞ்சை நகரம். அணி - அழகு. இரட்டைச் சாமரை என மாறுக. இவை சிறப்புப் பொருள்கள். ஊர்தி - சிவிகை முதலியன. மக்களுள் அருங்கலம் - மக்களுட்டலை சிறந்தவன் என்றவாறு. அரற்றச் செய்து என்க. தகை - அழகுமாம். அரிவை - நருமதை.