உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           இசைசால் சிறப்பி னிருங்கலப் பேழையொடு
          மணியினும் பொன்னினு மருப்பினு மல்லது
     30   மரத்தி னியலாத் திருத்தகு வையம்
          முத்த மாலை முகமிசை யணிந்து
          பொற்றார் புனைந்த புள்ளியற் பாண்டில்
          கடைமணை பூட்டிக் கணிகையில் விட்டுப
 
                ( இதுவுமது )
             28 - 33 : இசை..........விட்டு
 
(பொழிப்புரை) புகழ்மிகுந்த சிறப்பையுடைய பெரிய அணிகலப் பேழையுடனே மணிகளானும் பொன்னானும் யானை மருப்பினாலும் இயற்றிய உறுப்புகளையன்றி மரத்தினாற் செய்யப்பட்ட உறுப்புக்களில்லாத அழகு தக்கிருக்கின்ற வண்டியின்கண் முகத்தின்மேல் முத்து மாலையணிந்து பொன்மாலையால் அழகு செய்யப்பட்டனவும், பறவைபோன்று விரைந்து செல்லும் இயல்புடையனவும் ஆகிய வெள்ளை எருதுகளை நுகத்துப்பிற் பூட்டிப் பரிசிலாக நாடகக் கணிகையாகிய அந்நருமதை இல்லத்திற்கு உய்த்து என்க.
 
(விளக்கம்) இசை - புகழ். கலம் - அணிகலம். வையம் - வண்டி. பாண்டில் - வெள்ளை யெருது. கடைமணை - எருது பூட்டும் ஓருறுப்பு. கணிகை - நருமதை. இல் - மனை.