உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           பொய்தன் மகளிரொடு புனலாட் டயரினும்
     35   தெய்வ விழவொடு தேர்ப்பி னியலினும்
          நகர்கடந் திறத்த னருமதை பெறாளென
          எயின்மூ தாளரை வயின்வயி னேஎய்
          வாயில் சுட்டி வளநக ரறியக்
          கோயிற் கூத்துங் கொடுங்குழை யொழிகெனத்
     40   தொன்றிய லவையத்து நன்றவட் கருளித்
          தருமணற் பந்தர்த் தான்செயற் கொத்த
          கரும மறுத்த கைதூ வமையத்
 
                  ( இதுவுமது )
           34 - 42 : பொய்தல்..........அமைய
 
(பொழிப்புரை) பின்னரும் அம்மன்னவன் தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்ற தன் அரசவைக்கண் வீற்றிருந்து அவையோர் அறியும் படியாம் ஆடன்மகளிரொடு நீர்விளையாட்டயரும் பொழுதும், தெய்வத்திற்குச் செய்யும் திருவிழா நிகழ்ச்சியில் யாம் தேரின் பிற் செல்லும்பொழுதும் எம்மொடு நகர் கடந்து வரும் தனது கடமையை நருமதை இற்றைநாள் தொடங்கி ஒழிவாள் என்றும், மேலும் வளைந்த குழையணிந்த அந்நருமதை நாடோறும் அரண்மனையின்கண் ஆடும் கூத்தாகிய கடமையையும் இன்று தொடங்கி ஒழிவாளாக என்றும் கூறி இன்னோரன்ன நன்மையை அவள் திறத்திலே அருளிச் செய்து பின்னரும் இச் செய்திகளை வளமிக்க அந்நகரமக்கட்கு அறிவித்தற்பொருட்டு மதில்காக்கும் முதியோரை அழைத்து அவர்பால் ஒவ்வொரு வீட்டு வாயிலையும் குறிப்பிட்டுக்கூறி இடந்தோறும் இடந்தோறும் ஏவிய பின்னரும் அரசவையினின்றும் அகன்று போய்க் கொணர்ந்து பரப்பிய மணலையுடைய பந்தரின்கண் தான் செய்ய வேண்டிய காரியத்தையும் செய்யாமல் செயலொழிந்திருந்த செவ்வியில் என்க.
 
(விளக்கம்) அரசன் நீர் விளையாடும் பொழுதும், தேர்ப்பின் செல்லும் பொழுதும், நாடகக் கணிகையர் அவன்பின் போதல் வேண்டும் என்பது கட்டளை என்றுணர்க. நருமதைக்கு மட்டும் இத்தொழிலினின்றும் விடுதலை வழங்கினன் என்பதாம். எயின் மூதாளர் - மதில் காக்கும் முதிய காவலர், வாயில் சுட்டி - ஒவ்வொரு வீட்டு வாயிலையும் சுட்டிக்கூறி. இவ்வீடுகள் நகரப் பெருங்குடி மக்கள் வீடுகள் என்க. அவையத்திருந்து நன்று அவட்கு அருளிப்பின் பந்தரின்கண் இருந்த அமையத்து என்க. கைதூவமையம் - செயலொழிந்திருக்கும் செவ்வி.