உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
          நீதி மருங்கி நினைவ வவன்சூழ்ந்
         தியாதெனப் படினும் படுக விவன்பணி
         மாதரைக் காட்டுதன் மங்கல மெனக்கென
         நெஞ்சு.........................தங்கூறி
75       அஞ்சொ லாயத் தன்றியான் கண்ட
         தாமரை முகத்தி தலைக்கை யாகப்
         பல்பெருந் தேவியர் பயந்த மகளிருள்
         நல்லிசை யார்கொ னயக்கின் றாளெனச்
 
        (சாங்கியத்தாய் வாசவதத்தையைத் தேற்றுதல்) 71 - 78: வயிற்றழீஇ..........உறீஇ
 
(பொழிப்புரை) சாங்கியத்தாய் தழுவிக்கொண்டு தனது துடையின்கண் இருத்தி அவள் கண்ணினின்றும் வீழாநின்ற கண்ணீரைத் தன் விரலால் துடைத்து அங்ஙனம் பிரச்சோதனன் பிற மன்னனுக்கு மகட்கொடை நேரார் என்பதற்குரிய காரணங்களை எடுத்துக்காட்டி 'என் பாவாய்! அழாதே கொள்! நீ கருதுமாறு நின்னைப் பிற மன்னனுக்கு வழங்கும் செயல் உண்டாகுமோ? உண்டாகாதுகாண்! அங்ஙனம் ஒரோவழி இத்தூதர் வரவு காரணமாக அவ்வாறு நிகழுமாயின் நின்நற்றாயும் நீயும் யானும் நம்பால் அன்புடைய ஏனோருமாகிய எல்லாரும் மன்னனைத் துறந்து போய்க் காடு புகுந்து தவம் புரிவது ஒருதலைகாண்!' என்று தேற்றுரை கூறி அழகிய சிலவாகிய கூந்தலையுடைய வாசவதத்தையை நெஞ்சு வன்மையுறும்படி செய்து என்க.
 
(விளக்கம்) கவான் வயிற்கொண்டு என இயைத்துக்கொள்க. கவாஅன் - துடை. காரணம் - மன்னன் பிறர்க்கு மகட்கொடை நேராமைக்குரிய காரணம் என்க. இது - இத்தூதர் வரவு. முதலாக - காரணமாக. இவ்வகை - பிறமன்னனுக்கு வழங்கும் வகை என்க. தலைமகன் - பிரச்சோதனன். யாய் என்றது கோப்பெருந்தேவியை.