உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           சேயுய ருலகஞ் செம்மையிற் கூறும்
     80   தீதறு நோன்பிற் றெய்வந் தேற்றிய
          தீம்பாற் காட்சித் தெரிவுபல காட்டி
          மாற்றாக் கவலையின் மனங்கொண் டாங்கு
          நிறைமை சான்றநின் னெஞ்சங் கொண்ட
          பொறைமை காணிய பொய்யுரைத் தேனென
 
              ( இதுவுமது )
          79 - 84 : சேயுயர்..........உரைத்தேனென
 
(பொழிப்புரை) பின்னரும் மிகமிக உயர்ந்த சான்றோர் தமது மெய்க்காட்சி காரணமாக அறிவுறுக்கும் தீமையறுதற்குக் காரணமான தவத்தை அவளைப் பெறுதற்பொருட்டு அவள் தந்தையுந் தாயும் மேற்கொண்டமையானே அவர் நினைந்த தெய்வமாகிய இந்திரன் எதிர்வந்து வரந்தந்து தெளிவித்த இனிய பகுதிகளையுடைய காரணங்கள் பலவற்றையும் எடுத்துக் கூறி, மாற்றவியலாத கவலையினையுடைய வாசவதத்தையின் மனத்தைக் கவர்ந்துகொண்டு பின்னரும் ''மகளே! நிறையுடைமை மிக்க நின்னுடைய திருத்தகு நெஞ்சம் நிரம்பியுள்ள பொறையுடைமையை ஆராய்ந்துணர்தற்பொருட்டு யான் இங்ஙனம் நின்பாற் பொய்யே புனைந்து கூறினேன்காண்!'' என்று தேற்றி என்க.
 
(விளக்கம்) சேயுயர் உலகம் என்றது சான்றோரை. தெய்வம் - இந்திரன் முதலியோர். பிரச்சோதனன் மகப்பேறுகுறித்து இந்திரனாகிய தெய்வத்தை நோக்கித் தவங்கிடந்தானாக அத்தெய்வம் காண்டற்கினிதாகத் தோன்றி வரம் வழங்கியது. இவ்வாற்றான் நீ பிறத்தலின் இத்துணை எளிதாக அவன் மகட்கொடை நோரான்காண் என்பது கருத்து. கவலையினையுடைய மனத்தைக் கவர்ந்து கொண்டென்க. தேற்றிய தெரிவு - அத் தெய்வம் கூறித் தெரிவித்த தெரிவு என்க. காணிய - காணும் பொருட்டு.