உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           செவிலி தெளிப்பக் கவிழ்முக மெடுத்து
          நெடுவெண் டானை வாங்கிக் கொண்டுதன்
          வடிவே லுண்கண் வருபனி யரக்கித்
     100   தோற்ற நிகர்ப்போ ரின்றி யாற்றல்
          காலனொ டொக்கு ஞாலப் பெரும்புகழ்
          புகரின் றோங்கிய நிகரில் கேள்வியன்
          காம நுகர்வோர்க் காரணங் காகிய
          ஏம வெண்குடை யேயர் மகனொடு
    105    வையக மறியக் கையகம் புக்குத்
          தானறி வீணை தனியிடத் தெழீஇக்
          காணு மென்னுங் கட்டுரை யன்றியும
 
             ( வாசவதத்தை கூற்று )
           97 - 107 : கவிழ்முகம்..........அன்றியும்
 
(பொழிப்புரை) அதுகேட்ட கடவுட்டன்மையுடைய கற்புடைய வாசவதத்தை (116) அதுகாறுந் துயரத்தாலே கவிழ்ந்திருந்த தனது திருமுகத்தை உயர்த்தித் தனது நெடிய வெள்ளிய முன்றானையால் தனது வடித்தவேல் போன்ற மையுண்ட கண்களிற் பெருகும் நீரைத் துடைத்துக் கொண்டவளாய்ச் சாங்கியத்தாயின் முகத்தைநோக்கி அன்னாய்! தோற்றத்திற்குத் தன்னை ஒப்பவர் யாரும் இல்லையாகப் பெற்றவனும், ஆற்றலிலே கூற்றுவனையே ஒப்பவனும், உலகத்தின்கண் குற்றமின்றிப் பெருகிய பெரிய புகழையுடையவனும் ஒப்பற்ற கல்வி கேள்விகளையுடையவனும் காம வின்பந்துய்த்தற்குக் கருதும் மகளிர்க்குக் கிட்டுதற்கரிய தெய்வம் போன்றவனும் உயிர்களைப் பாதுகாத்தற்குக் கவிழ்த்த வெள்ளிய குடையையுடைய ஏயர்குடித் தோன்றலும் ஆகிய உதயணன்பால் வாசவதத்தை இவ்வுலகம் அறியத் தனியிடத்தே அவன் பக்கத்தே மேவியிருந்து அவன் மட்டும் அறிந்திருந்த சிறந்த அவனுடைய யாழ் நரம்பின்கண் இசையெழீஇப் பயிலா நின்றனள் என்னும் பொருள் பொதிந்த சொற்களோடன்றியும் என்க.
 
(விளக்கம்) கவிழ்முகம்: வினைத்தொகை. வாங்கிக்கொண்டு: ஒரு சொல். தோற்றம் - அழகு. ஆற்றல் - வலி. காலன் - கூற்றுவன். புகர் - குற்றம். அணங்கு - தெய்வம்; துன்பமுமாம். ஏமம் - பாதுகாவல். வையகம்: ஆகுபெயர். கை - பக்கம். தான் - உதயணன். காணும் - பயில்வாள்