உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
           அண்ணன் மருங்கி னாவது வேண்டும்
          தன்மன முவந்தது தலைவர நோக்கி
          ஏற்ற முன்கைத் தொடிவீழ்ந் தற்றாற்
    120   கொற்றொடி கொண்ட கொள்கையென் றேத்தி
          மிகுதியின் மிக்கதன் மேற்றிணைக் கேற்பத்
          தகுவன கூறுந் தலைமகன் மகளென
          உவகை நெஞ்சமொ டுவப்பன கூறிப்
 
             ( சாங்கியத்தாய் எண்ணுதல் )
                 117 - 123 : அண்ணன்..........கூறி
 
(பொழிப்புரை) வாசவதத்தையின் கூற்றைக்கேட்ட சாங்கியத்தாய் உதயணன் திறத்திலே இவள் மனம் உறுதியுடைத்தாதலை விரும்புகின்ற தன்னுடைய மனவிருப்பம் கைகூடி வருதலையுணர்ந்து உருட்சியுடைய வளையலணிந்த இவ்வாசவதத்தையின் கொள்கை என் திறத்திலே இரத்தற்கு ஏந்திய முன் கையின்கண் பிச்சையிடுவோர் பொன் வளையல் நழுவி வீழ்ந்தாற் போலாயிற்று என்று மகிழ்ந்து வாசவதத்தையை நெஞ்சத்துள்ளே பாராட்டித் துன்பமிக்க இப்பொழுதும் சக்கரவர்த்தி மகளாகிய இந்நங்கை மிகவும் உயர்ந்த தன் குலப்பண்பாட்டிற்கேற்ற தகுதியான மொழிகளையே பேசுகின்றனள் என்று மகிழ்ந்த நெஞ்சத்தோடு அவ்வாசவதத்தை மகிழ்தற்குரிய தேற்றுரைகள் பலவுங்கூறி என்க.
 
(விளக்கம்) அண்ணல் - உதயணன். அண்ணன் மருங்கின் ஆவது வேண்டும் தன்மனம் என்றது, வாசவதத்தை உதயணனையே காதலிக்க வேண்டும் என்று விரும்பும் தன்மனம் என்றவாறு. தலைவருதல் - கைகூடி வருதல். ஏற்ற முன்கையில் இடுவோர் கைத்தொடி வீழ்ந்தற்றால் என்க. மிகுதி - துன்பமிக்க பொழுது. மேற்றிணை - உயர்குலம். தலைமகன்மகள் - வாசவதத்தை. 'நிலத்திற் கிடந்தமை கால் காட்டும் காட்டுங், குலத்திற் பிறந்தார் வாய்ச்சொல்' என்னும் திருக்குறள் (959) ஈண்டு நினைக.