உரை
 
1. உஞ்சைக்காண்டம்
 
36. சாங்கித்தாயுரை
 
         
     155   வடிக்க ணிட்டிகைப் பொடித்துக ளட்டிக்
          குற்றங் கொல்லுமெங் கோப்பிழைப் பிலனென
          முற்றந் தோறு மூதூ ரறிய
          நெய்தற் புலைய னெறியிற் சாற்றிப்
          பைதற் பம்பை யிடங்க ணெருக்கி
     160   மணற்குடம் பூட்டி மாநீர் யமுனை
          இடைக்கயத் தழுந்த விடீஇய செல்வுழிப
 
                 ( இதுவுமது )
           155 - 161: வடிக்கண்..........செல்வுழி
 
(பொழிப்புரை) இவளை இவள் செய்த குற்றமே வடித்த இடத்தையுடைய செங்கலினது நுண்ணிய துகளைத் தூவிக் கொல்லா நிற்கும் எம்மரசன் தவறுடையன் அல்லன் என்று கூறி நெய்தற் பறையை முழக்கும் புலைமகன் அந்தப் பழைய ஊரின்கண் வாழுங்குடிமக்கள் அறிதல்வேண்டி ஒவ்வொரு இல்லத்தின் முற்றந்தோறும் நின்று இச்செய்தியை அறிவித்துத் துன்பத்தைத் தரும் ஓசையையுடைய பம்பை என்னும் நெய்தற் பறையை இடக்கண்ணில் அடித்துக் கொண்டு என்னை அழைத்துப் போய்க் கரிய நீரையுடைய யமுனைப் பேரியாற்றின்கண் நடுவண் உள்ள மடுவில் மணல் நிரப்பிய குடத்தொடு கட்டி நீரில் முழுகும்படி விடுதற்குச் செல்லும் பொழுது என்க.
 
(விளக்கம்) வடிக்கண் - கட்டளையால் வடித்த இடம். இட்டிகை - செங்கல். பொடியாகிய துகள் என்க. அட்டி - தூவி, இவள் சாவிற்கு இவள் குற்றமே காரணமாகும் எங்கள் மன்னன் இவள் திறத்திலே தனக்கறமாகிய அரசியல் முறையையே மேற் கொள்கின்றனன் என்றவாறு. நெய்தற் புலையன் - சாப்பறையை அடிக்கும் புலையன். சாவை யறிவிக்கும் பறை யாதலால் பைதற் பம்பை எனப்பட்டது. எருக்கி அடித்து மணற் குடம் பூட்டுதல் முழுகுவோர் மீளாமைக்கும் மிதவாமைக்கும் என்க. இடைக்கயம் என்றது நடுவணுள்ள ஆழ்ந்த மடுவினை.